Friday 18 February 2011

10வது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணம் - புன்னியாமீன்

10வது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணத்துக்கான போட்டிகள்  இன்று 2011 பெப்ரவரி 19ல் ஆரம்பமாகின்றது. முதல் போட்டியில் இந்தியா, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி மிர்பூரில் (வங்காளதேசம்) பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் இம்முறை இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் நாடுகளால் இணைந்து நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா நேற்று முன்தினம் 2011 பெப்ரவரி 17ல் டாக்காவில் கோலாகலமாக நடைபெற்றது.

இப் போட்டிகள் 2011 பெப்ரவரி 19ல் இருந்து ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. இதன் படி பிரிவு ஏ யில் அவுஸ்திரேலியா, கனடா, கென்யா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், இலங்கை, சிம்பாப்வே ஆகிய அணிகளும், பிரிவு பீ யில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். மொத்தமாக 49 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த உலககிண்ணப் போட்டிகளை பாக்கிஸ்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியினர் தாக்கப்பட்ட நிகழ்வை அடுத்து சர்வதேச கிரிக்கட் சபை பாக்கிஸ்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது. லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது. பாக்கிஸ்தான் 14 ஆட்டங்களை ஓர் அரையிறுதி உட்பட நடத்துவதாக இருந்தது. அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காளதேசத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணப் போட்டிகள் நடந்துள்ளன. 1975 நடைபெற்ற முதலாவது உலகக்கிண்ணப் போட்டியிலும் 1979ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக்கிண்ணப்  போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து வெற்றிபெற்றது. 1987, 1999, 2003, 2007 ஆகிய நான்கு முறையும் அவுஸ்திரேலியாவே உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. 1983ல் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியாவும் 1992ல் நடந்த போட்டியில் பாகிஸ்தானும் 1996ல் இலங்கையும் உலகக்கிண்ணத்தை வென்றெடுத்தது. இருப்பினும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து இதுவரை ஒருமுறை கூட உலகக்கிண்ணத்தை வெல்லவில்லை. அதேபோல தென் ஆப்பிரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் உலகக்கிண்ணம் வெறும் கனவாகவே இதுவரை இருந்துவந்துள்ளது.

போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்:
இந்தியா
எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை
சர்தார் படேல் குஜராத் ஸ்டேடியம், மோத்தீரா, அகமதாபாத்
விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், நாக்பூர்
பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம், டெல்லி
எம். சின்னச்சாமி ஸ்டேடியம், பெங்களூர்
பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், மொஹாலி
வாங்கடே ஸ்டேடியம், மும்பை
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
வங்கதேசம்
ஷெர் பங்களா தேசிய ஸ்டேடியம், மிர்பூர், டாக்கா
ஷெர் அகமது செளத்ரி ஸ்டேடியம், சிட்டகாங்
இலங்கை
ஆர். பிரேமதாஸ ஸ்டேடியம், கொழும்பு
பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், கண்டி
மகிந்தா ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஹம்பாந்தோட்டை

நேரஅட்டவணை
* பிப் 19     வங்காளதேசம் Vs இந்தியா    பிரிவு -பி    மிர்பூர் (வங்காளதேசம்)  பகல் 2 மணி
* பிப் 20    கென்யா Vs  நியூசிலாந்து    பிரிவு - ஏ      சென்னை    காலை 9.30 மணி
* பிப் 20    இலங்கை Vs கனடா    பிரிவு -ஏ    ஹம்பாந்தோட்டை (இலங்கை)    பகல் 2.30 மணி
* பிப் 21    அவுஸ்திரேலியா Vsசிம்பாப்வே    பிரிவு- ஏ    அகமதாபாத்    பகல் 2.30 மணி
* பிப் 22    இங்கிலாந்து Vs நெதர்லாந்து    பிரிவு -பி    நாக்பூர்    பகல் 2.30 மணி
* பிப் 23    கென்யா Vs பாக்கிஸ்தான்    பிரிவு -ஏ    ஹம்பாந்தோட்டை    பகல் 2.30 மணி
* பிப் 24    தென் ஆப்பிரிக்கா Vs மேற்கிந்தியத் தீவுகள்     பிரிவு -பி    டெல்லி    பகல் 2.30 மணி
* பிப் 25    அவுஸ்திரேலியா Vs நியூசிலாந்து    பிரிவு -ஏ    நாக்பூர்    காலை 9.30 மணி
* பிப் 25    வங்காளதேசம் Vs அயர்லாந்து    பிரிவு -பி    மிர்பூர்    பகல் 2 மணி
* பிப் 26    இலங்கை Vs பாக்கிஸ்தான்    பிரிவு -ஏ    கொழும்பு    பகல் 2.30 மணி
* பிப் 27    இந்தியா Vs இங்கிலாந்து    பிரிவு - பி    பெங்களூர்    பிறபகல் 2.30 மணி
* பிப் 28    கனடா Vs சிம்பாப்வே    பிரிவு -ஏ    நாக்பூர்    காலை 9.30 மணி
* பிப் 28    நெதர்லாந்து Vs மேற்கிந்தியத் தீவுகள்     பிரிவு -பி    டெல்லி    பகல் 2.30 மணி
* மார்ச் 1    இலங்கை Vs கென்யா    பிரிவு - ஏ    கொழும்பு    பகல் 2.30 மணி
* மார்ச் 2    இங்கிலாந்து Vs அயர்லாந்து    பிரிவு - பி    பெங்களூர்    பகல் 2.30 மணி
* மார்ச் 3    நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா    பிரிவு - பி    மொகாலி    பகல் 2.30 மணி
* மார்ச் 3    கனடா Vs பாக்கிஸ்தான்    பிரிவு - ஏ      கொழும்பு    பகல் 2.30 மணி
* மார்ச் 4    நியூசிலாந்து Vs சிம்பாப்வே    பிரிவு -ஏ    அகமதாபாத்    காலை 9.30 மணி
* மார்ச் 4    வங்காளதேசம் Vs மேற்கிந்தியத் தீவுகள்    பிரிவு - பி    மிர்பூர்    பகல் 2 மணி
* மார்ச் 5    இலங்கை Vs அவுஸ்திரேலியா    பிரிவு - ஏ    கொழும்பு    பகல் 2.30 மணி
* மார்ச் 6    இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்கா   பிரிவு - பி    சென்னை    காலை 9.30 மணி
* மார்ச் 6    இந்தியா Vs அயர்லாந்து    பிரிவு - பி    பெங்களூர்    பகல் 2.30 மணி
* மார்ச் 7    கனடா Vs கென்யா    பிரிவு - ஏ    டெல்லி    பகல் 2.30 மணி
* மார்ச் 8    நியூசிலாந்து Vs பாக்கிஸ்தான்    பிரிவு - ஏ  பல்லேகெல, பகல் 2.30 மணி
* மார்ச் 9    இந்தியா Vs நெதர்லாந்து    பிரிவு - பி    டெல்லி    பகல் 2.30 மணி
* மார்ச் 10    இலங்கை Vs சிம்பாப்வே    பிரிவு - ஏ          பல்லேகெல    பகல் 2.30 மணி
* மார்ச் 11    அயர்லாந்து Vs மேற்கிந்தியத் தீவுகள்     பிரிவு - பி    மொகாலி    காலை 9.30 மணி
* மார்ச் 11    வங்காளதேசம் Vs இங்கிலாந்து    பிரிவு - பி    சிட்டகாங்    பகல் 2.30 மணி
* மார்ச் 12    இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா    பிரிவு - பி    நாக்பூர்    பகல் 2.30 மணி
* மார்ச் 13    கனடா Vs நியூசிலாந்து    பிரிவு - ஏ     மும்பை    காலை 9.30 மணி
* மார்ச் 13    அவுஸ்திரேலியா Vs கென்யா    பிரிவு - ஏ    பெங்களூர்    பகல் 2.30 மணி
* மார்ச் 14    வங்காளதேசம் Vs நெதர்லாந்து    பிரிவு - பி    சிட்டகாங்    காலை 9 மணி
* மார்ச் 14    பாகிஸ்தான் Vs சிம்பாப்வே    பிரிவு - ஏ   பல்லேகெல    பகல் 2.30 மணி
* மார்ச் 15    அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா    பிரிவு - பி    கொல்கத்தா    பகல் 2.30 மணி
* மார்ச் 16    அவுஸ்திரேலியா Vs கனடா    பிரிவு - ஏ    பெங்களூர்    பகல் 2.30 மணி
* மார்ச் 17    இங்கிலாந்து Vs மேற்கிந்தியத் தீவுகள்     பிரிவு - பி    சென்னை    பகல் 2.30 மணி
* மார்ச் 18    அயர்லாந்து Vs நெதர்லாந்து    பிரிவு - பி    கொல்கத்தா    காலை 9.30 மணி
* மார்ச் 18    நியூசிலாந்து Vs இலங்கை    பிரிவு - ஏ              மும்பை    பகல் 2.30 மணி
* மார்ச் 19    வங்காளதேசம் Vs தென் ஆப்பிரிக்கா    பிரிவு - பி    மிர்பூர்    காலை 9 மணி
* மார்ச் 19    அவுஸ்திரேலியா Vs பாக்கிஸ்தான்    பிரிவு - ஏ            கொழும்பு    பகல் 2.30 மணி
* மார்ச் 20    கென்யா Vs சிம்பாப்வே    பிரிவு - ஏ     கொல்கத்தா    காலை 9.30 மணி
* மார்ச் 20    இந்தியா Vs மேற்கிந்தியத் தீவுகள்     பிரிவு - பி    சென்னை    பகல் 2.30 மணி
கால் இறுதிப் போட்டிகள்:
1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி
2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி
3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி
4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி
அரையிறுதிப் போட்டிகள்:
1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி
2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி
இறுதிப்போட்டி:
ஏப்ரல் 2: மும்பை- பகல் 2.30 மணி

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
இதுவரை மொத்தம் 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முறையே 1975, 1979, 1983, 1987, 1992, 1996, 1999, 2003, 2007 ஆண்டுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் இதுவரை அணிகளும், வீரர்களும் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகளின் விபரம் வருமாறு:

ஒரு போட்டியில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள்
* கேரி கிர்ஸ்டன் (தெ.ஆப்பிரிக்கா) - 188 (ஆட்டமிழக்காமல்-ஐக்கிய எமெரிட்ஸ் அணிக்கு  எதிராக).
* கங்குலி (இந்தியா) - 183 (இலங்கைக்கு எதிராக)
* விவியன் ரிச்சர்ட்ஸ் (மே. இ.தீவு) - 181 (இலங்கைக்கு எதிராக)
* கபில் தேவ் (இந்தியா) - 175 (ஆட்டமிழக்காமல்-சிம்பாப்வேக்கு எதிராக)
* கிரேக் விஷார்ட் (சிம்பாப்வே) - 172 (ஆட்டமிழக்காமல்-நமீபியாவுக்கு எதிராக)

உலகக்கிண்ணப் போட்டிகளில் கூடிய ஓட்டங்களைப் பெற்றவர்கள்
* சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 1796 (36 போட்டிகள்)
* ரிக்கி பான்டிங் (அவுஸ்திரேலியா) - 1537 (39)
* பிரையன் லாரா (மே. இ. தீவு) - 1225 (34)
* சனத் ஜயசூரியா (இலங்கை) - 1165 (38)
* ஆடம் கில்கிறைஸ்ட் (அவுஸ்திரேலியா) - 1085 (31)

அதிக சதங்கள் பெற்றவர்கள்
* கங்குலி (இந்தியா) - 4
* மார்க் வாக் (அவுஸ்திரேலியா) - 4
* சச்சின் (இந்தியா) - 4
* ரிக்கி பான்டிங் (அவுஸ்திரேலியா) - 4
* ரமீஸ் ராஜா (பாக்கிஸ்தான்) - 3

அதிக அரை சதம் பெற்றவர்கள்
* சச்சின் (இந்தியா) - 13
* கிரீம் ஸ்மித் (தெ. ஆப்பிரிக்கா), கிரஹாம் கூச், மார்டின் குரோ, ஸ்டீவ் டிக்கோலா, ஹெர்ஷெல்லி கிப்ஸ் தலா 8 அரை சதங்கள்.
அதிக சிக்சர்கள் (6ஓட்டங்கள்) பெற்றவர்கள்
* ரிக்கி பான்டிங் (அவுஸ்திரேலியா) - 30
* கிப்ஸ் (தெ.ஆப்பிரிக்கா) - 28
* ஜெயசூர்யா (இலங்கை) - 27
* கங்குலி (இந்தியா) - 25
* மாத்யூ ஹெய்டன் (அவுஸ்திரேலியா) - 23

அதிக பவுண்டரிகள் (4) பெற்றவர்கள்
* சச்சின் (இந்தியா) - 189
* கில்கிறைஸ்ட் (அவுஸ்திரேலியா) - 141
* ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து) - 135
* பான்டிங் (அவுஸ்திரேலியா)  - 130
* பிரையன் லாரா (மே.இ தீவு) - 124

சிறந்த பந்து வீச்சு
* மெக்கிராத் (அவுஸ்திரேலியா) - 7/15 (7 ஓவர்கள்) -நமீபியா
* ஆண்ட்ரூ பிக்கல் (அவுஸ்திரேலியா)  - 7/20 (10 ஓவர்கள்) - இங்கிலாந்து
* வின்ஸ்டன் டேவிஸ் (மே.இ.தீவு) 7/51 (10.3 ஓவர்கள்) -அவுஸ்திரேலியா.
* கேரி கிளாமர் (அவுஸ்திரேலியா)  - 6/14 (12 ஓவர்கள்) -இங்கிலாந்து.
* ஷேன் பாண்ட் (நியூசிலாந்து) -6/23 (10 ஓவர்கள்) -அவுஸ்திரேலியா.

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்
* மெக்கிராத் (அவுஸ்திரேலியா)  - 71
* வாசிம் அக்ரம் (பாக்கிஸ்தான்) - 55
* முரளிதரன் (இலங்கை) - 53
* சமிந்தா வாஸ் (இலங்கை) - 49
* ஸ்ரீநாத் (இந்தியா) - 44.

அதிக பிடிகளை எடுத்தவர்கள்
* பான்டிங் (அவுஸ்திரேலியா)  - 25
* ஜெயசூர்யா (இலங்கை) - 18
* கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து)- 16
* லாரா (மே.இ. தீவு) - 16
* இன்சமாம் உல் ஹக் (பாக்கிஸ்தான்) - 16

ஒரு இனிங்சில் பெறப்பட்ட கூடிய ஓட்டங்கள்
* இந்தியா - 413 (பெர்முடாவுக்கு எதிராக)
* இலங்கை -398 (கென்யாவுக்கு எதிராக)
* அவுஸ்திரேலியா - 377 (தெ. ஆப்பிரிக்காவுக்கு எதிராக
* இந்தியா - 373 (இலங்கைக்கு எதிராக)
* நியூசிலாந்து - 363 (கனடாவுக்கு எதிராக)

ஒரு இனிங்சில் பெறப்பட்ட குறைந்த ஓட்டங்கள்
* கனடா - 36
* கனடா - 45
* நமீபியா - 45
* ஸ்காட்லாந்து - 68
* பாக்கிஸ்தான் - 74

கூடிய ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிபெற்ற அணிகள்
* இந்தியா - 257 (பெர்முடாவுக்கு எதிராக)
* அவுஸ்திரேலியா - 256 (நமீபியாவுக்கு எதிராக)
* இலங்கை - 243 (பெர்முடாவுக்கு எதிராக)
* அவுஸ்திரேலியா - 229 (நெதர்லாந்துக்கு எதிராக)
* தென் ஆப்பிரிக்கா - 221 (நெதர்லாந்துக்கு எதிராக)

Sunday 13 February 2011

நீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.

நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும்.
முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.

முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.

குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது.

சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.

இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.

நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
3. விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract) கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
4. பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
5. சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோயைக்கட்டுப்படுத்தும் முறைகள்
1. சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும்.
2. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
3. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. .

நீரிழிவு நோய்களுக்காகச் சிகிட்சை பெற்றுக் கொண்டிருப்போர் கவனிக்க வேண்டியவை:

1. வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
2. வைத்திய ஆலோசனைப்படி குளிசையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
3. மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
4. சில சந்தர்ப்பங்களில் மருந்த எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் உங்களுடன் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
5. தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
6. உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும்.
7. உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

உசாத்துணை:

* http://www.healthyyears.org/
* http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0002194
* http://www.diabetes.com/
* http://en.wikipedia.org/wiki/Diabetes_mellitus
* http://www.diabetessrilanka.org/
* Harris MI, Flegal KM, Cowie CC, et al. (April 1998). "Prevalence of diabetes, impaired fasting glucose, and impaired glucose tolerance in U.S. adults. The Third National Health and Nutrition Examination Survey, 1988–1994".

Saturday 5 February 2011

அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்

கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கொல்கத்தாவில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி (Missionaries of Charity) தலைமையகத்தில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் சிறப்பு வழிபாட்டுடன் ஆகஸ்ட் 26. 2010ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2010 செப்டம்பர் மாதம் 5ம் திகதி அன்னை தெரெசாவின் 13 வது சிரார்த்த தினமாகும்.

“அன்னை தெரெசா இறைவனால் அளிக்கப்பட்ட மதிப்பிட முடியாத ஒரு கொடை. இறைவனால் வழங்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அன்பளிப்புக்காக மனித குலம் இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு ஆண்டாகவே இந்த நூற்றாண்டு விழா அமையும் என தான் நம்புவதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அன்போடு மக்களுக்கு அயராத உழைப்பை அன்னை மேற்கொண்டார்", எனவும் புனித பாப் ஆண்டவர் பெனடிக்ட் அவர்கள் அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா ஆரம்பம் குறித்து வெளியிட்டுள்ள தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அவரது வாழ்வும், மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளும், தொடர்ந்து இளைஞர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தும்" என, அன்னை தெரெசாவால் ஏற்படுத்தப்பட்ட மிஸனரிஸ் ஒப் செரிட்டி அமைப்பின் தற்போதைய தலைவியான அருட்சகோதரி நிர்மலா ஜோசி
தெரிவித்திருந்தார்.

அன்னை தெரெசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய மத்திய அரசு அவரது உருவம் பொறித்த ரூபாய் 5 பெறுமதிமிக்க நாணயத்தை வெளியிட்டுள்ளது.

“ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரெசா" என்று நாணயத்தை வெளியிட்டு பேசுகையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மேலும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற ஆரம்பித்தபோது தெரெசாவின் கையில் இருந்தது 5 ரூபாய் மட்டுமே. இதை நினைவுகூரும் வகையில் ஐந்து ரூபாய் நாணயத்தில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் முகர்ஜி குறிப்பிட்டார்.

அன்னை தெரெசா குறித்த நூற்றாண்டு மலரின் முதல் பிரதியை குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேலிடம் முகர்ஜி கையளித்தார். “அன்னை என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். கடவுள் அனைத்து இடங்களிலும் இருக்க முடியாது. எனவேதான் அன்னை தெரெசா போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை படைத்தார். நீல கறை கொண்ட வெள்ளைப் புடவை அணிந்த அவர் மற்றும் கிறிஸ்தவ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பல அனாதைகளுக்கும், முதியோர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்ந்தனர். அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பாரத ரத்னா விருதும் அடங்கும்" என்று குடியரசு ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் புகழாரம் சு10ட்டினார்.

மேலும் அன்னை தெரெசாவின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட அமெரிக்கா அரசு தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் 5. 2010ம் திகதி இந்த தபால் தலை வெளியிடப்படுமென அமெரிக்காவின் தொடர்பாடல் அமைச்சு அறிவித்திருந்தது. அதேநேரம் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் முத்திரையில் உருவம் பதிக்கப்பட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி, மாசிடோனியா Republic of Macedonia நாட்டின் தலைநகராக இருக்கும் ஸ்கோப் Skopje நகரில் அவர் பிறந்தார். அவரது இயற்பெயர் அக்னஸ் கோன்ஜா போயாக்யூ, Agnes Gonxha Bojaxhiu (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் “ரோஜா அரும்பு" என்று பொருள்) அவர் பிறந்த போது ஸ்கோப் நகரம் அல்பேனியாவில் இருந்தது. 1929 ஆம் ஆண்டு அன்னை தெரெசா இந்தியாவுக்கு வந்தார். பின்பு இந்திய குடியுரிமை பெற்றார். மேற்கு வங்கத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவர் செப்டம்பர் 5. 1997இல் (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரெசா இறைவனடிசேரும் போது அன்னாருக்கு வயது 87.

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த அருட்சகோதரி நிர்மலா ஜோசி அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார். அவர் உருவாக்கிய மிஷனரிஸ் ஒப் செரிட்டியின் தலைமையகத்திலேயே அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கையை மறைந்த போப் இரண்டாவது ஜான் பால் 2003 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு "அருளாளர் பட்டம்" அளிக்கப்பட்டது.

ஸ்கோப் நகரில் நிக்கல் - டிரானா போயாக்யூ தம்பதியரின் இளைய புத்திரியே அக்னஸ். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னசுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

“ஜோன் கிராப்"ஸின் வரலாற்றுக் குறிப்புகளின்படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதப்போதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன் கனவை முன் வைத்த போது "சின்னவள் நீ, பக்குவமற்றவள்" என்று தாய் வழிகாட்டியுள்ளார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார்.

1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா சென்று, இமய மலை அருகே உள்ள டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24.1931 இல் “வாக்குத்தத்தம்" எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான ‘தெரேசா டி லிசியு"வின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்

சுதந்திரம் பெறும் முயற்சியில் தீவிரமாக வெள்ளையர்களுடன் இந்தியர்கள் போராடி வந்த காலகட்டத்தில் நாளாந்த உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பராமரிப்பின்றி தத்தளிப்பவர்களையும், நோயால் வாடுகின்றவர்களையும் நேசிக்க ஆரம்பித்தார் அன்னை தெரேசா. இந்திய நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக 1948 ஆம் ஆண்டு இந்தியா அரசு குடியுரிமை வழங்கியது.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சு10ழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.

தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே இந்தியப் பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஸ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் எழுதியிருந்தார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை தெரெசாவின் தலைமையில் மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) ஸ்தாபிக்கப்பட்டது. தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார். அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஸினிக்கு தனது இயற்பெயரைச் சுட்டினார். இந்தியாவின் கொல்கத்தாவில் ஏழை மக்களுக்கும், சிறார்களுக்கும் பெரும் உதவி புரிந்த அன்னை தெரெசா அங்கு ஆசிரமம் ஒன்றையும் அமைத்து செயற்பட்டார். இதில் நோயாளிகளுக்குத் தன்னாலான தொண்டுப் பணிகளை முன்னெடுத்தார்.

மிஸனரிஸ் ஒப் செரிட்டி இல்லம் (Missionaries of Charity) பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தை ஆரம்பிக்க தெரெசாவுக்கு வத்திக்கானின் அனுமதி கிடைத்தது. செரிட்டியின் கடமையாக அன்னை கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று 4000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக வியாபித்துக் காணப்படுகிறது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரெசா நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும்,  இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஸனரிஸ் ஒப் செரிட்டியை விஸ்தரித்தார்.

50 ஆண்டுகள் ஏழை - எளியவர்களுக்குத் தொண்டுப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் இன் “சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட்" என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும் எனப்படுகிறது. அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது, சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை, தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை. அன்னை தெரெசாவின் சிறப்பான சேவைக்காக அவருக்கு சுமார் 124 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பெற்ற சில விருதுகளும் பரிசுகளும் பின்வருமாறு:

* 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் “ரமோன் மேக்சேசே” விருது.

* 1964-ல், மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

* 1971-ல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்.

* 1971-ல், அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை, அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.

* 1972-ல், அமைதி விருதான "நேரு" விருது

* 1976-ல், விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா" விருது

* 1978-ல் இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்' விருது

* 1979-ல் நோபல் பரிசு
அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் தனது பரிசுத்தொகையான 192,000 பவுண் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் "இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும்" என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம், "உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்றுக் கேட்டனர். அதற்கு அவர், "வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்" என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . "உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல, மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது" என்றுரைத்தார். "தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்."

* 1980-ல், மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான “பாரத் ரத்னா" விருது

* 1981-ல், ஹெய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் “லெஜென் டி ஹொனர்" (Legion d’Honneur) என்ற விருது.

* 1982-ல், ஆஸ்திரேலியாவின் “கௌரவ தோழர்" விருது.

* 1983-ல், BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஸ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

* 1985-ல், அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதியின், பதக்கத்தை வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

* 1991-ல், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற “பாரதிய வித்யா பவன்" விருது

* 1992-ல், “பாரதத்தின் தவப் புதல்வி" விருது மற்றும் “பாரத சிரோமணி" விருது

* 1993-ல், ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்" விருது

* 1994-ல், அல்பேனிய நாடு அவருக்கு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்திய தோடல்லாமல், 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.

* 1995-ல், கொல்கொத்தாவின் “நேதாஜி விருது" மற்றும் “தயாவதி மோடி" அறக்கட்டளை விருது

* 1996-ல், ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை' விருது.

* 1996-ல், நவம்பர் 16, அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் அமெரிக்க கௌரவ பிரஜா உரிமையை வழங்கினார்.

* 1997-ல், அமெரிக்க காங்கிரஸ் “தங்கப்பதக்கம்" வழங்கியது.

* 2003-ல், அக்டோபர் 19ம்திகதி "அருளாளர் பட்டம்" திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் அறிவித்தார்.

அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.

எத்தனை பட்டங்கள் கிடைத்த போதிலும் வெள்ளை சேலையும், சாதாரண பாதனிகளையும் அணிந்து கொண்டிருந்த அன்னை தெரேசா தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.