Wednesday 20 July 2011

சர்வதேச சதுரங்க தினம் International Chess Day - புன்னியாமீன்

சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது நினைவுகூரப்படுகின்றன. குறித்த விடயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும். சில சர்வதேச தினங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் பிரேரணை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்படுகின்றன. இன்னும் சில சர்வதேச தினங்கள் குறித்த விடயம் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இவற்றின் பிரதான நோக்கம் குறித்த விடயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் வழங்குவதாகவே காணப்படும்.

இந்த அடிப்படையில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ் சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.

புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார். சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

இந்த விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.

காய்களை அடுக்கும்போது முதல் நிரலில் அல்லது வரிசையில் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம். இரண்டாவது நிரலில் எட்டு படைவீரர் காய்களும் நிறுத்தப்படும். எதிரணியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலே காய்கள் அடுக்கப்பட்டாலும்கூட, இங்கு கறுப்பு அரசி கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் வெள்ளைச் சதுரத்திலும் நிறுத்தப்படுவர்.

வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். அரசன்: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும். ஆனால் முதல் முதலாக நகருவதாக இருக்கும் பொழுது மட்டும் இரண்டு கட்டங்கள் (சதுரங்கள்) நகரமுடியும். அரசி: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. மந்திரி மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. குதிரை: டகர வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. கோட்டை முன்னே பின்னே அல்லது இட வலமாக நகர நேரே எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படைவீரர் நேரே முன்நோக்கி முட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் அரம்பநிலையையில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் நகரமுடியும். படைவீரர் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாகவே மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.

சதுரங்க விளையாட்டின் ஆரம்பம் பற்றி பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட கோணங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏழாம் நூற்றாண்டு காலகட்டங்களிலிருந்தே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டாகவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே, சதுரங்கத்தின் ஆரம்பம் இந்தயாவே என்று கூறலாம். பின்பு மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலான நாடுகளுக்கும் பல வேறுபாடுகளுடன் இவ்விளையாட்டு பரவியது. தொடர்ந்து மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் வியாபித்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் சில தகவல்களின்படி இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய சதுரங்கம் பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியதாகவும் முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சா என்பவர் செஸ் பற்றி புத்தகமொன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான விதிமுறைகளின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படைவீரர்களை முதல் நகர்த்தும்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ராணி திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதி முறையும் இக்காலகட்டத்திலே புழக்கத்துக்கு வந்ததாக கூறப்படுகின்றது. சதுரங்க ஆரம்பகாலத்தில் மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே ராணிக்கு நகர அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. “இராணி” ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.

“ஸ்டவுண்டன்” தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல்குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செஸ் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழக்கத்தில் விட்டது.

உலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த் இவர்களுள் கடந்த 35 ஆண்டு காலத்தில் முக்கியம் பெற்றோரின் விபரம் வுருமாறு

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். மே 23 1951 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் (1970) உலக சாம்பியன் 1975-1985, (ஃபிடே) 1993-1999 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2655 (ஏப்ரல் 2008 ) எலோ தரவுகோள் 2780 (ஜூலை 1994) 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார். 2005 ஆம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

காரி காஸ்பரொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். ஏப்ரல் 13 1963 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் உலக சாம்பியன் 1985–2000 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். எலோ தரவுகோள் 2851 (ஜூலை 1999) காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 2000ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் “மரபுவழி” உலக சதுரங்க வீரர் (”Classical” World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் “டீப் புளூ” கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.

விளாடிமிர் கிராம்னிக் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஜூன் 25 1975 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மட்டும் உலக சாம்பியன் 2000—2006 (மரபுவழி) பட்டம் 2006—2007 (ஒன்றுபட்ட) உலக சாம்பியன் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2772. எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002) அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில் இவர் இருந்தார். 2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் இவர் சென்னை, இந்தியாவைச் சேர்ந்தவர் டிசெம்பர் 11, 1969இபிறந்த இவர் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இவர் இதுவரை பெற்றுள்ள சதுரங்க பதக்கங்கள் வருமாறு, 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர் 2000 சதுரங்க வெற்றிவீரர் 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர் 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில் 1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில் 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்

இவர் பெற்றுள்ள விருதுகள் வருமாறு சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004) பத்மபூஷண் (2000) பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998. ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992) தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987) தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985)

Tuesday 19 July 2011

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) : புன்னியாமீன்

இரண்டாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2011 ஜூலை 18ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது நிலைத்து நிற்கவேண்டியவர்களுள் மண்டேலாவும் ஒருவராவார். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் ஒளிக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.
2010 ஜூலை 18 இல் இடம்பெற்ற முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தில் “மண்டேலா ஆபிரிக்காவின் மைந்தன் / தேசத்தின் தந்தை என்ற திரைப்படமொன்றும் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன், மண்டேலாவை கௌரவித்து ஐ.நா. பொதுச் சபையில் உத்தியோகபூர்வமற்ற அமர்வொன்றும் இடம்பெற்றுள்ளது. நெல்சன் மண்டேலா “மக்களின் மனிதர்” என்ற புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றதாக ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார். ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜுலை 18 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிற வெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மாமனிதரான நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினமான 2010 ஜூலை 18 இல் முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென 2009 நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை முன்நகர்வாக ஜூலை 18 இல் நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாட வேண்டுமென கியூபா பாராளுமன்றம் தீர்மானித்தது. அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதத்துவத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்த நெல்சன் மண்டேலாவை கௌரவித்து கியூபா பாராளுமன்றம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தவர் நெல்சன் மண்டேலாவாகும்.

நெல்சன் மண்டேலா  (Nelson Mandela International Day), ஜூலை 18, 1918 இல் பிறந்தவர். இவர் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.
இதற்கு ஓர் உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியது கூடக் கிடையாது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை. நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.
மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. 2010 இல் உதைபந்தாட்ட உலக கிண்ணத்துக்கான போட்டியும் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்தது.
மண்டேலா சிறுபராயத்தில் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டார். இவரது குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம்பராயத்திலே கல்வியைப் பெறுவதில் கூடிய ஆர்வம் கொண்ட மண்டேலா, பின்பு இலண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு: அராஜக நடவடிக்கைகளை கட்டழ்த்தது. இனவாதமும் அடக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டன.
Nelson_Mandelaமண்டேலா தனது பல்கலைக்கழகத் தோழன் ஒலிவர் ரம்போவுடன் இணைந்து இன ஒதுக்களுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். இதன் விளைவு பயங்கரமாக மாறியது. 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் சுமார் 150 தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோல்வியுறும் போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென இவரால் உணரமுடிந்தது. வேறுவழியின்றி ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை முன்னெடுத்தார்.
1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அப்போதும் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது” என வற்புறுத்தி நின்றார்.

இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடைசெய்யப்பட்டது. இத்தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.

தென்னாபிரிக்காவில் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க்கைத் தொடர்ந்து 10 மே 1994 இல் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 14 ஜூன் 1999 வரை பதவி வகித்தார். மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரைத் தொடர்ந்து தென்னாபிரிக்கத் தலைவராக பதவியேற்றவர் தாபோ உம்பெக்கியாவார். 3 செப்டம்பர் 1998 முதல் 14 ஜூன் 1999  அணிசேரா இயக்கப் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

இவரின் முதலாவது வாழ்க்கைத் துணைவி எவெலின் மாசே (1944–1957). பின்பு 1957 இல் வின்னி மண்டேலாவைக் கரம்பற்றி 1996 வரை வாழ்ந்தார். 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவிட்டு மண்டேலா விடுதலையாகி வெளியே வந்ததும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.  1998 இல் கிராசா மாச்செலை மணம் புரிந்த இவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மெதடிசம் சமயத்தவரான இவர் தற்போது ஹூஸ்டன் எஸ்டேட்டில் வாழ்ந்து வருகிறார். 1993இல் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஜெயிலில் இருந்த போது, ஜெயில் அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இனஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அதிகாரத்துக்கு வந்த பின்னர் தனது கறுப்பின மக்களை அதுகாலவரை ஒடுக்கு முறைக்குள்ளாக்கிய வெள்ளையர்களை மன்னித்து நல்லிணக்கப்போக்கினைக் கடைபிடித்தார். தென்னாபிரிக்காவில் இனஒதுக்கல் ஆட்சியின் முடிவுக்குப் பின்னரான காலகட்டம் அனர்த்தங்கள் மிகுந்ததாகவே இருக்கும் என்று உலகம் நினைத்தது. ஆனால், இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதிவழிச் செயற்பாடுகளில் வெள்ளை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துச் செயற்பட்ட நெல்சன்மண்டேலா 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்லின ஜனநாயகத் தேர்தலின் பின்னர் அமைத்த ஆட்சி உலகத்தின் நினைப்பைப் பொய்யாக்கியது. மண்டேலா ஆட்சியின் அடிநாதமாக நல்லிணக்கக் கோட்பாடே அமைந்தது.

Friday 1 July 2011

ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை – சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) – புன்னியாமீன்

சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) ஒவ்வொரு ஆண்டும்  ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை ‘கூட்டுறவே நாடுயர்வு” எனும் கருப்பொருளின் கீழ் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக,  பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் கூட்டுறவுத்துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்பநோக்கும்போது தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும். நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்”  சிந்தனையுன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும்,  கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவதில் தவறாகாது. எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக,  பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு,  கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன. சர்வதேச மாநாடு இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர்,  இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858),  டாக்டர் வில்லியம்கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த இத்தத்துவம்,  1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது. கூட்டுறவின் வரைவிலக்கணம் பின்வருமாறு: கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேச்சையான தொழில்முயற்சி ஒழுங்கமைப்பொன்றாகும். இதன் குறிக்கோள் தன்னிச்சையாக ஒன்றுகூடும் தனியாட்களின் பொதுவான பொருளாதார, சமூக,  கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுபவிக்கின்றனர்.
‘மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. ‘நான்’ எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள்வதற்கும் உதவுகிறது’ இந்த அடிப்படையில் கூட்டுறவுத் தத்துவத்தின் பொது இயல்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

01. சேர்ந்து செயலாற்றுதல் (Associated Action)
02. சகலருக்கும் பொவுதான தன்மை  (Universality)
03. தனிநபர் சுதந்திர விருப்பு (Free Will of the individual)
04. சமத்துவம்  (Equality)
05. சனநாயகம்  (Democracy)
06. சேவை நோக்கு (Service)
07. தனிநபர் சுதந்திரம் (Individual Freedom)
08. நடுநிலையும் சமூக நீதியும் (Equity and Social Justice)
09. கூட்டுணர்வு (Spirit of Solidarity)
10. புதிய சமூக ஒழுங்கு (New Social Order)
11. மனிதரின் அந்தஸ்தினை மதித்தல் (Rocognition of dignity of men)
12. உயர் ஒழுக்க நிலை (High moral standard)

இங்கிலாந்தில் நுகர்வோர் சங்கமாக உருவெடுத்த கூட்டுறவு அமைப்பு ஜேர்மனியில் கடன்சுமையைப் போக்கும் இயக்கமாக மாறி கடன் வழங்கும் சங்கங்களைத் தோற்றுவித்தது. உலகின் பல நாடுகளிலும் அவ்வந்நாட்டுத் தேவைக்கேற்ப உருவாகின. இவ்வாறு சர்வதேச ரீதியில் உருவான சங்கங்களை தொடர்புபடுத்தும் அமைப்பாகவும் வளர்ச்சியின் சின்னமாகவும் 1895இல் சர்வதேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளினதும் தேசிய மட்டக்; கூட்டுறவு நிறுவனங்களின் இணைப்பாக இது விளங்குகின்றது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது.

சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக யுத்தம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. நாடுகளின் உணவு உற்பத்தி, விநியோகம்  என்பவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன். பொருளாதார அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்களின் வருமானம் அதிகரித்தது. இத்தகைய மாற்றங்கள் கூட்டுறவு அமைப்பிலும்,  சமூக பொருளாதார,  கலாசார அமைப்புக்களிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. இதற்கமைய கூட்டுறவு கொள்கைகளும் மறுசீரமைக்கப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிபரிசுக்கமைய 1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை,

01. தன் விருப்புடனான தடையற்ற அங்கத்தவர்
02. ஜனநாயக முறைக் கட்டுப்பாடும், நிர்வாகமும்
03. முதலுக்கு ஏற்ப வட்டி வீதம்
04. இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல்
05. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியன.

நவீன காலத்தில் கூட்டுறவு விவசாயத்தால்  விந்தை புரியும் இரு நாடுகளை உதாரணப்படுத்துவர். கியுபா பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் சிஐஏ (CIA) பலமுறை அவரை கொலை செய்ய முயன்றும் தோற்றது. இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

அடுத்தது 1948 ஆண்டு தோன்றிய இஸ்ரேல். தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டைநாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு இஸ்ரேல். இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் “டுலிப்” (Tulip) மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. சொட்டு நீர் பாசனம், பசுமை கூடம்,  மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும் தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),இமோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள்.

இலங்கையில் கூட்டுறவு முறை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
இலங்கை ஆங்கிலேயராட்சியில் இருந்தவேளை கிராமிய விவசாயம் புறக்கணிப்பட்டது. பெருந்தோட்டச் செய்கையில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக கிராமிய விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இயற்கையின் வரட்சி கிராமிய விவசாயிகளைப் பெருமளவு பாதித்து அவர்களை வறுமைக்குட்படுத்தியது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வழங்கும் முதலாளிகளிடம் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவுப் பண்புகளையுடைய சங்கங்களை அமைத்து செயல்பட்டபோதும் அதற்கு சட்டவரையறை இன்மையால் நிலைத்து நிற்கவில்லை. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை ஆளுநர் நாட்டிலிருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விவசாய வங்கித் தொழிற் குழுவின் விதப்புரையின்மீது அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்றாக 1911ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் நியதிகளின்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1911ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின்படி பதிவாளருக்கு கூட்டுறவுச் சங்சங்களைப் பதிவுசெய்வதற்கும் எவையேனும் வைபவங்களுக்குத் தலைமை தாங்குவுதற்கும் தத்துவமளிக்கப்பட்டது. எனினும் ஒரு முழுநேரப் பதிவாளர் அவசியமில்லை என அரசாங்கம் உணர்ந்தமையால் ஆரம்பத்தில் மேற்படி கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவாளருக்குப் பொறுப்பிக்கப்பட்ட ஒருசில கடமைகளையும் பணிகளையும் அரசாங்க அதிபருக்குக் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் கடமையும் அடங்கும்.
1904ஆம் ஆண்டில் கிராமிய சமுதாயத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை விவசாயச் சங்கம் எனப்படும் சங்கமொன்று இலங்கை ஆளுநரின்கீழ் தாபிக்கப்பட்டது. பிரசாரமும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளும் இச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. 1911ஆம் ஆண்டில் இலங்கை விவசாயச் சங்கங்களுக்குப் பதிலாக விவசாயத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒரு குறுகிய தவணை நடைமுறையாகும். பதிவுசெய்யும் வழமையான பணிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தமையால் விவசாயத்துறை பணிப்பாளரை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டுச் சபையொன்றையும் தாபித்தது.

ஆரம்பத்தில் நாணய சங்கங்களே பதியப்பட்டன. 1913/14ம் ஆண்டில் 35ஆக இருந்த சங்கங்கள் 1920/21இல் 154ஆக உயர்ந்தது. உறுப்பினர் தொகை முறையே 1820லிருந்து 17876 ஆகவும் அதிகரித்தது. 1921ம் ஆண்டின் 35ம் இலக்க சட்டத்திருத்தத்தின்படி ஏனைய வகைச் சங்கங்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டன. இதனால் நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் என்பன பதிவு செய்யப்பட்டன. 1939இல் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பங்கீட்டு அடிப்படையில் உணவு விநியோகிக்கும் பொறுப்பு கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நெல் உத்தரவாத விலைத்திட்டம்,  நெற்களஞ்சியங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. 1942 – 1945க் கிடையில் 4000க்கும் மேற்பட்ட நுகர்வோர் சங்கங்கள் இருந்தன. 1946இலிருந்து கூட்டுறவு விளைபொருள் உற்பத்தி விற்பனை சங்கங்கள் பதியப்பட்டன. 1949ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத்திருத்தத்தின் மூலம் நாணய உதவி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குடிசைக் கைத்தொழில்களிலும், பாரம்பரிய சீவனோபாய தொழில்களிலும் ஈடுபட்டவருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. (உ+ம்) கூட்டுறவுப் பாற்பண்ணை சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், தெங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள், நெசவுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள். தும்புத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், செங்கல், ஓடு உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள், அச்சிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள், பாதரட்சை செய்வோர் கூட்டுறவுச் சங்கங்கள், புகையிலை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றன.

1957இலிருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. 1958 முடிவில் இலங்கையில் இயங்கிய பல வகைக் கூட்டுறவுச் சங்கத்தினது எண்ணிக்கை 12852ஆகும். இவற்றைத் தவிர இரண்டாம்படிச் சங்கங்களாக கூட்டுறவுச் சங்கங்களும் இயங்கின. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு சேவை தொழிற்துறையினரிடையேயும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிக்கன கடனுதவிச் சங்கங்களும் (சணச) விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்கு முன்பே, 1904 ஆம் ஆண்டு தற்பொழுதுள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. சர். டி. ராசகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராக பொறுப்பேற்றார்.

இந்தியாவில் ஒரு விவசாய புரட்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காக காந்திஜி சொன்ன விடயம் கூட்டுறவுப் பண்ணை முறையாகும். ஒரு நிலத்தை நூறு துண்டுகளாக போட்டு விவசாயம் செய்து நிறைய கொள் முதலை எதிர்ப்பார்ப்பதை விட ஒரு கிராமத்திலிருக்கும் நூறு குடும்பங்கள் கூட்டாக விவசாயத்தில் ஈடுபடுட்டால் தனித்தனியாக கிடைக்கும் பலன்களை விட நிறையவே அதிகமாக இருக்கும் என்பது. நிலம் அனைத்தையும் ஒன்றாக உழுது விவசாயம் பார்ப்பதால் உழைப்பு,  மூலதனம்,  கருவிகள் போன்றவை மிச்சமாகும். காந்திஜி இதையே விவசாய வேலைகள் என்றில்லாமல் ஆடு,  மாடு வளர்ப்பு, காய்கறிகள் பயிரிடுவது என அனைத்து தொழில்களுக்குமே விரிவுபடுத்த நினைத்தார். காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் இதையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். நாடு சுதந்திரமடைந்தவுடன் காந்திஜியின் சிந்தனை பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் திட்டங்களாக தீட்டப்பட்டன.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர் கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார். ஏழைகள் தன்னந்தனியாக தங்களின் நலனுக்காக காரியத்தை செய்ய இயலாது. அவர்களோ கூட்டு முயற்சியை செய்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவு முறை வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள்,  பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டு வசதி, கதர், கிராமம் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்கு தாங்களே கூட்டாக, உறவாக அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.

1904 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவு சட்டம் 1961, 1963, 1983 என பல முறைகள் முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்து இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு ஆரோக்கியத்தோடு செயல்பட காரணமாக பலர் திகழ்ந்தனர். தூத்துக்குடியில் தொழிற் சங்கத்தைத் துவக்கிய வ.உ.சிதம்பரனார் கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார்.

கிட்டத்தட்ட 30,000 கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் திறம்பட செயல்பட்டால் பொருளாதாரம்,  மக்களின் நலன், ஜனநாயகம் பேணப்படும். அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு உறுப்பினர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை உள்ள பல ஆயிரம் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பாலபாடத்தைப் போதிக்கும் போதி மரமாகும்.

சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது.

2000: “Co-operatives and Employment Promotion”
2001: “The Co-operative Advantage in the Third Millennium”
2002: “Society and Co-operatives: Concern for Community”
2003: “Co-operatives Make Development Happen!: The contribution of co-operatives to the United Nations Millennium Development Goals”
2004: “Co-operatives for Fair Globalisation: Creating Opportunities for All”
2005: “Microfinance is OUR business! Cooperating out of poverty”
2006 “Peace-building through Co-operatives.”
2007 “Co-operative Values and Principles for Corporate Social responsibility.”
2008: “Confronting Climate Change through Co-operative Enterprise”
2009: “Driving global recovery  through co-operatives”