Saturday, 16 June 2012

அரபுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்படும் கலாநிதி முஹம்மது முர்ஸி - புன்னியாமீன்

 மக்கள் புரட்சியின் பின் எகிப்தின் மக்களாட்சிக்கான 
                                          முதலாவது  ஜனாதிபதித் தேர்தல்.

                        அரபுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்படும் 
                                                   கலாநிதி முஹம்மது முர்ஸி  
                                                                   

மக்கள் புரட்சியின் மூலம் " முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர் எகிப்தில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 2012 மே மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். எகிப்தின் அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவியை பெற்றுக்கொள்ள மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் எந்தவொரு வேட்பாளரும்  ஐம்பது சதவீத பெரும்பான்மையைப் பெறவில்லை. இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேட்பாளர் கலாநிதி முஹம்மது முர்ஸி 5764952 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 24.7 வீதமாகும். முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஸபீக் 5505327 வாக்குகளுடன் (23.6வீதம்) இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதன்படி எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மீள் சுற்றுத் தேர்தலில் இருவரும் போட்டியிடுகின்றனர். பல தசாப்தங்களாக எதிரும் புதிருமாக இருந்துவந்த இரண்டு அணிகளை இந்த இரண்டு வேட்பாளர்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் கலாநிதி முர்ஸிக்கு ஆதரவளிப்பதாக எகிப்திய தஃவா ஸலபிய்யா அமைப்பின் சுறா சபை அறிவித்துள்ளது. அதேவேளை முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வும் தனது ஆதரவை முஹம்மது முர்ஸிக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எகிப்திய மக்கள் எழுச்சியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸியை தாங்கள் கருதுவதாக பொது வாலிப எழுச்சி அமைப்புகள் அறிவித்துள்ள அதேவேளை அஹ்மத் ஸபீக்கை எகிப்திய சர்வாதிகார ராஜாங்கத்தின் எச்சம் என்றும் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல இது ஒரு அரசியல் தீர்ப்பு” என்றும் தெரிவித்துள்ளன.

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் நீதியைத் தெரிவு செய்யுமாறு அனைத்து எகிப்தியர்களையும் அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி கோரியுள்ளார். தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோருவது குறித்து எச்சரித்த அவர் அப்படிச் செய்வது சாட்சி சொல்ல மறுப்பதைப் போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தலில்  வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக இஃவான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி கருதப்படுகின்றார். எகிப்தில் மட்டுமல்ல முஸ்லிம் உலகிலும் இவர் வெற்றி பெறவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இவர் வெற்றி பெறுவது முஸ்லிம் உலகின் எழுச்சிக்கு வித்தாகலாம் என்பது சிலரின் வாதமாகவும் உள்ளது.

கலாநிதி முஹம்மத் முர்ஸி இஹ்வான்களால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். அத்துடன் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ‘மக்தபுல் இர்ஸாத்’ என அழைக்கப்படும் உயர் வழிகாட்டல் சபையின் அங்கத்தவராகவும் இருந்தவர். அரசியல் கட்சி உருவாக்கப் பட்ட பின்னர், முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்காக இயக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் மக்தபுல் இர்ஸாதிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். ஹஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் இவர் முக்கிய பங்கெடுத்தார்.

எகிப்தின் கிழக்கு மாகாணமான ஸர் கிய்யாவில் அத்வா எனும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவரது முழுப் பெயர் முஹம்மத் முர்ஸி ஈஸா அய்யாத் என்பதாகும். 1975 இல் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் இளமாணிப் பட்டத்தையும் 1978 இல் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1982 இல் அமெரிக்காவிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.

கெய்ரோ பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் கடமையாற்றியுள்ளார். 1982 மற்றும் 1985 க்கு இடைபட்ட காலத்தில் கலிஃபோர்னியா வட ரிட்ஜ் (North Ridge in California) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் 1985 இலிருந்து 2010 ஆண்டுவரை சாகஜிக்  (The University of Zagazig) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூலப்பொருள்கள் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். எண்பதுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் (NASA)  கடமையாற்றியுள்ளார். இங்கு “உலோகங்களில் metal surface treatment” என்ற துறையில் அதிக ஆய்வுகள் செய்துள்ளார்.

கலாநிதி முர்ஸி கடின உழைப்புக்கு பெயர் போனவர். அவர் பணியாற்றிய பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்போடு செயற் பட்டு, சிறந்து விளங்கினார். சிறந்த அரசியல் தலைவரான அவர், தனது ஆற்றல்களையும் திறன்களையும் நடைமுறையில் நிரூபித்தார். அதன் மூலம் ஒரு உறுதியான ஆற்றல் மிக்க, தீர்க்கமான இஸ்லாமிய அரசியல் முற்போக்கு தலைவராக உருவாகியுள்ளார் . இவர் நடைமுறை உற்பத்தி தீர்வுகள் தொடர்பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.

சர்வாதிகார அடக்குமுறைகளையும் மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்தமையினால் முர்ஸி பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ளார். 2005 தேர்தல் முறைகேட்டுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் ஆளானபோது, அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலாநிதி முர்ஸி முக்கிய பங்கெடுத்தார். அவர் நீதிபதிகளின் சுதந்திரத்தை ஆதரித்து செயற்பட்டார். தேர்தல் ஊழல்கள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசிய நீதிபதிகளைத் தண்டிப்பதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். 2006 மே 18 ஆம் திகதி கலாநிதி முர்ஸி மக்கள் விரோத இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு ஏழு மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்.


அவர் எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் ஜனவரி 28, 2011 அன்று ‘கோபத்திற்குரிய வெள்ளிக்கிழமை’ காலை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் பெருந் தொகையான இஹ்வான்களும் கைதுசெய்யப்பட்டனர். எகிப்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இஹ்வான்களைக் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவே இது இருந்தது. புரட்சியின்போது சிறைகள் உடைக்கப்பட்டு, கைதிகள் பலர் தப்பினர். ஆனால் எப்போதும் எல்லாவற்றிலும் ஒழுங்கு முறைகளை மட்டுமே பேணும் முஹம்மது முர்ஸி அவரது சிறை கூடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். அங்கிருந்தவாறு செய்மதி, தொலைக்காட்சி மற்றும் செய்திச் சேவைகளை தொடர்புகொண்ட அவர்,  நீதித்துறை அதிகாரிகளை சிறைக்கு வந்து, கைதுசெய்யப்பட்ட இஹ்வான் தலைவர்களது சட்டநிலை தொடர்பாக ஆராயுமாறு வேண்டினார். ஆனால் எவரும் அங்கு சென்று பார்கவில்லை.

கலாநிதி முஹம்மது முர்ஸி மட்டுமல்ல ஹ{ஸ்னி முபாரக்கின் அநியாயம் அவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை . அவரது மகன், டாக்டர் அஹமத் 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனது தந்தை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்டமன்றத்தில்’ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக மிகவும் தாக்கமுள்ள, செல்வாக்குள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் . மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் . இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்திற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானார். 2005 பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவின்போது கலாநிதி முர்ஸி, தனக்கு அடுத்து வந்த வேட்பாளரை விடவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றார். ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தபோது அவரது போட்டி வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

கலாநிதி முர்ஸி இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் பிரிவில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர். அத்துடன் அந்தப் பிரிவின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். 2004 இல் இயக்கம் முன்னெடுத்த சீர்திருத்த முனைப்பின்போதும், 2007 இல் வெளியிட்ட அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின்போதும் இயக்கத்தின் அரசியல் பிரிவு முக்கிய பங்கு வகித்தது. 2010 பாராளுமன்றத் தேர்தலின்போது அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவதில் அவர் முன்னணியில் இயங்கினார்.

மீண்டும் எகிப்தில் சு10டுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் களத்தில் பிரகாசமாக மின்னும் தாரகையாக கலாநிதி முஹம்மது முர்ஸி வெளிப்படுகிறார். இன்னும் சில தினங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இவர் பற்றிய வெற்றி அறிவிப்பை இஸ்லாத்தின் ஒரு கட்ட அரசியல் வெற்றியாக கண்டுகொள்ள முடியும் என எகிப்தும் அரபுலகும் எதிர்பார்த்துள்ளது.

Monday, 11 June 2012

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour – புன்னியாமீன்


சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour  ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.


பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ,  மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ஆம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை பாரிய குற்றமாகும். இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும்,  இளைஞர் 14 – 16 என்றும் வரையறுத்துள்ளது. 1989இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார்கள்.


எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன. சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும்  மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.

யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.


சிறுவர் உரிமையில் சில  அம்சங்களை கீழ்வருமாறு  சுருக்கி நோக்கலாம். இங்கு வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.

உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம். கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை போன்றவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 1989 நவம்பர் 20 – இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.




2007 இல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள “சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்” (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிஉலகிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,

2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.

2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; சுமார் 75% ஆனோர் ஆண்கள்
80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.
குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.



உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.
வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.

2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.

15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.
இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். [unicef.org]

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ஆம் ஆண்டு முதலரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த முப்பதாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம்.

மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.

இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன.

‘குழந்தைத் தொழிலாளர் அவலம்’ குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியக் கணக்கில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்.

1986 இல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதைத் தடை செய்தது. 1997 இல்  ‘abolision act’ என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ள. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் ‘விவசாயம்’. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில்தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும். சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லை

எடுத்துக்காட்டாய், ஒரு ‘குழந்தைத் தொழிலாளி’ பற்றிய புகாரை  சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர் தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பத்து வயதைக் கடந்தவர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன. அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன.

பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.

இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அதிலும் பெருந்தோட்டத்துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப்பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும்.