Friday 28 January 2011

அடிமை வியாபாரமும், அதன் ஒழிப்பும் - புன்னியாமீன்

International Day for the Remembrance of the Slave Trade and its Abolition, 
சில சர்வதேச நினைவு தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவதைப்போல சகல நினைவு தினங்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. குறித்த நினைவு தினங்களின் முக்கியத்துவம் நவீன கால சமூக வாழ்வில் உணரப்படாமையினால் அவை பற்றி விரிவான விளக்கங்கள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வகையில் அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினத்தையும் குறிப்பிட முடியும்.

ஆனால் மனிதகுல வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இந்த மிலேனிய யுகத்தில் அக்கரை படிந்த வடுக்களை ஞாபகமூட்டப்படுவதினூடாக பல படிப்பினைகளைப் பெறக்கூடியதாக உள்ளதென்பதை மறுக்கமுடியாது. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஞாபகமூட்டுவதற்கான தினம் 1998 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 23 ஆகஸ்ட் 1998 இல் ஹெய்டி நாட்டிலும், 23 ஆகஸ்ட் 1999 இல் செனகல் நாட்டிலும் இத்தினத்தின் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இத்தினத்தை நினைவு கூருகின்றன.

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பை ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினம் யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத் தொடரில் (29 C/40) பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் ஜுலை 29. 1998ம் திகதி இடப்பட்ட CL/3494 இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைச்சர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

ஆபிரிக்க - அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். உலகில் காணப்பட்ட அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்புநோக்கும்போது ஐரோப்பியர்களின் அடிமை முறையே மிகவும் கேவலமான முறையாக வர்ணிக்கப்படுகின்றது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. சுமார் 60 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும், துயரத்தாலும் இறந்துள்ளனர் என வரலாற்றுக் கணிப்புகள் சான்று பகர்கின்றன.

அடிமைமுறை வரலாற்றினை நோக்குமிடத்து பண்டையக் காலங்களில் இனங்களிடையே ஏற்பட்ட யுத்தங்களில்; தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர் எனக்கூறப்படுகிறது. இங்கு பெண்களும், குழந்தைகளும் கூட அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைமுறை மொஸப்பத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக காணமுடிகின்றது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு பண்பாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப் பட்டனர். பல புராதன சமூகங்களில் “சுதந்திர" மனிதர்களை விட அடிமைகளே அதிகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள் முதலில் அரசர் “பாரோ”விற்க்கு தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு 1479-1425), 2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை, எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்க்கு திரும்பினர் என்றும், சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிடும்போது, எகிப்திய அடிமைகள் ஒப்பீட்டளவில் சுமாராக நடத்தப்பட்டிருக்கலாம்; என எண்ணத் தோன்றுகிறது.

புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர்.

ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, 'அடிமைத் தனம்”, இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்ள கூடாது. ஏஜமானரால் வைக்கப்படும் பெயர்களே இவர்களின் பெயர்களாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமர் காலத்;திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக் கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாகினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது.

உரோமர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்களாகவும் வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருந்துள்ளனர். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71ல் நடந்த “ஸ்பார்டகஸ்” எழுச்சியாகும்.

புராதன காலத்தில் அரேபிய சாம்ராச்சியங்களிலும் சீன சாம்ராச்சியத்திலும் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏந்தவொரு அடிமை முறையை எடுத்துக் கொண்டாலும்கூட, அதன் பண்புகள், தன்மைகள் ஒன்றாகவே காணப்பட்டன.

பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாக தெரியவில்லை. ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசு10லச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade)

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில் வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள் தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத் தலைவர்களும் உளர்.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக் பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்" என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து முதன் முதலில் வடஅமெரிக்காவுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களே. அமெரிக்காவிற்கு வந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு தங்கள் உடைமையாக்கிக்கொண்ட பிறகு அந்த நிலங்களில் உழைக்க அவர்களுக்கு உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களைத் தந்திரமாகப் பிடித்து வந்து ஐரோப்பாவில் அடிமைகளாக விற்பது பரவலாக இருந்து வந்தது. இதைப் பின்பற்றி அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர்களும் ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து அடிமைகளாக விற்கத் தொடங்கினர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து “பெரும் அனர்த்தம்" என்பதாகும்.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் இலாபகரமான வியாபாரமாக விளங்கியது. இதனால் மற்ற நாடுகளும் அடிமை வியாபாரத்தில் போட்டியிட ஆரம்பித்தன. ஊதாரணமாக போர்த்துக்கள், ஸ்பானியர்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆபிரிக்கர்களைக் கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆபிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கினர். அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆபிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தனர். சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தமை போருக்கு வித்திட்டது.

அடிமை வியாபாரம் நடப்பதற்காகவே மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டன. உள்நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் இந்தக் கோட்டைகளில் சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். பின்பு கழுத்திலிருந்து காலுக்குச் சங்கிலி போடப்பட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அடிமையாகச் செல்வதைவிட ஆபிரிக்க மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர்.

உயிர் பிழைத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களிலும் வீடுகளிலும் ஊதியம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடாமலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அமெரிக்காவில் பெரும்பாலான வேலை பருத்தியை பறிப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி இரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதைத் தோன்டிப் போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை இந்த அடிமைகளுக்கு இருந்தது.

அறுவடையின் போது 18 மணி நேரமும், கர்ப்பமான பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

அடிமை முறையிலிருந்து விடுபட முயன்ற சில ஆபிரிக்கர்களுக்கு பிடிபட்டபின் பெரிய தண்டனைகள் காத்திருந்தன. வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவதாகும். இதனால் விடுபட விரும்பிய பலரும்; முயற்சிகளை மேற்கொள்ளாமலே வாழ்க்கை முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

அடிமைச் சமூகத்தில் தற்கொலை விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தனர்.

மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டனர், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள். கருப்பு நிறப் பெண்களில் பலர் வெள்ளை ஆண்களின் உடல் பசிக்கு ஆளாகி நிறையக் கலப்புக் குழந்தைகள் பிறந்தனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கலப்பு என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் இவர்களைக் கறுப்பர்கள் என்றே பாவித்தனர். இந்தக் குழந்தைகளுக்குத் தகப்பன்மார்களாகிய வெள்ளையர்கள் இவர்களை தங்கள் குழந்தைகள் என்று கூறிக்கொள்ளாததால் இவர்கள் தாய்மார்களோடேயே வளர்ந்தனர். அல்லது தாயின் கணவனான கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் இவர்களுக்குத் தகப்பனாகக் கருதப்பட்டான். தங்களிடம் அடிமைகளாக இருந்த பெண்ககளுக்குத் திருமணம் செய்விக்கும் முன்பு அந்தப் பெண்களோடு உடல் உறவு வைத்துக்கொள்ளும் முதல் உரிமை எஜமானுக்கே இருந்தது.

ஆபிரிக்கர்களுக்கு எழுதப் படிக்க உரிமை இல்லை. அப்படிப் படிக்க முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி குடியிருப்புகள், தனி கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. இந்தியாவில் தீண்டாமை இருந்தது போல் அமெரிக்காவிலும் ஆபிரிக்கர்களை வெள்ளையர்கள் தனிமைப்படுத்தினர்.

இவ்வாறாக ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழுவின்" முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சியின் போது 'முதல் குடியரசு" பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி, அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும், கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.

இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும், டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும், ஈகுவடார் 1854இலும், பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது.

உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார்.

சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.

அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த, ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க - அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள், தனிக் கோவில்கள், தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின.

கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு மற்ற ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. இவர் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகளில் ஒருவர் அல்ல. இவர் தந்தை கென்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காக வந்த இடத்தில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இவரது தாயை மணந்திருக்கிறார். இவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத் தன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டார். நல்லவேளையாக இவரைத் தன்னோடு அழைத்துச் செல்வேன் என்று அடம்பிடிக்கவில்லை. இவருடைய தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் மட்டுமே இவருக்கும் ஆபிரிக்க இனத்திற்கும் தொடர்பு உண்டு.

ஒபாமாவுக்கு முன்பே ஆபிரிக்க அமெரிக்கர்களின் தலைவர்கள் சிலர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்க முயன்றும் தோல்வியைத் தழுவியிருந்தனர். அவர்கள் எல்லோரும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆபிரிக்க இனத்தவர்களை முன்னேற்றுவதும் தங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்று தேர்தல் களத்தில் அறிவித்தனர்.

ஒபாமா “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரு பிரிவுகள் இல்லை. இரண்டு இனங்களும் உள்ள ஒற்றை அமெரிக்கா, அகில உலக அளவில் இழந்த செல்வாக்கை நான் மறுபடி நிலைநாட்டுவேன். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்வேன்" என்று கூறி வருகிறார்.

“நாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன்" என்று இவர் கூறி வருவது இளைஞர்கள் இடையில் இவருக்கு மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

20ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை, சர்வதேச தொழிலாளர் தாபனம் போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட முடியாது. புராதன காலங்களில் காணப்பட்ட முறைபோலல்லாது நவீன காலத்தில் புதிய கோணத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது.

தற்காலத்தில் அடிமைகள்

தற்காலத்தில் அடிமைத்தனம் பின்வரும் விதமாக இருப்பதாக அடிமை ஒழிப்பு சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் இனங்காட்டப்பட்ட ஒரு சிலதை பின்வருமாறு நோக்கலாம்.

அடகு தொழிலாளர் - இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் மறைமுகமாகக் கட்டுண்டுள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கிää அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும்ää தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து, தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். இத்தகைய முறை இந்தியாவில் இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இளவயதில் கட்டாயத் திருமணம் - இது இளம் பெண்களைப் பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டுää வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.

கட்டாய சேவை - அரசாங்கம், அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள், தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு, கட்டாய வேலைகளை - துன்புறுத்தியோ, வன்முறை பீதியை ஏற்படுத்தியோ – பெற்றுக் கொள்கின்றன.

அடிமைச் சந்ததி - சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ, கட்டாய வேலை எடுக்க ஏற்பட்டவர்கள் எனவோ கருதுகிறது.

ஆள் கடத்துதல் - மனிதர்கள், பெண்கள், சிறார்கள் இவர்களைத் கடத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவது, ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு எடுத்துச் செல்லுதல்.

சிறுவர் தொழிலாளர்கள் - இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சு10ழ்நிலையில், குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.

நவீன காலத்தில் வீடுகளில் பணிப்பெண்களாகக் கடமை புரிவோரும் ஒரு வகையில் அடிமைத்துவ வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.

பழையகால வாங்கி/விற்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப் பட்டாலும் கூட, இன்றும் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இத்தகைய அடிமைமுறை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுடான், மௌரிடேனியா போன்ற நாடுகளில் இது நடைபெறுகிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு ஸ்தாபனம் 1997 ஆண்டறிக்கைப்படி “சுடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில் பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் இலாபமடைந்துள்ளது."எனக் கூறப்பட்டிருந்து.

ஐக்கிய அமெரிக்கா அரசின் 1994 கணக்குப் படி, மௌரிடேனியாவில் 80,000 கருப்பர்கள் “பெர்பெர்" இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கின்றனர். பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துகிறனர் என்று கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தனது உரிமையைப்போல மனிதசமூகத்தைச் சேர்ந்த அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் நிலையை எம்முள் வளர்த்துக் கொள்ள அனைவரும் இத்தினத்தில் திடசங்கட்பம் பூணுவோமாக.

Wednesday 19 January 2011

சுவிஸ் வானொலியில் புன்னியாமீன் பேட்டி






விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழா தொடர்பாக
கலாபூசனம் புன்னியாமீன் அவர்களது
வானோலி பேட்டி

..
********

மேலதிக விபரங்களுக்கு
ajeevan
P.O.Box. 950
4601 - Olten
Switzerland

www.ajeevan.com
info@ajeevan.com
phone: +41 79 209 12 49


Tuesday 11 January 2011

விக்கிப்பீடியா எமது சொத்து - புன்னியாமீன்

விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகின்றது.

21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில் இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும், இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது.

இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்திஜீவிகளுக்கும், கற்றவர்களுக்கும்,  தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. மொழி ரீதியாக ஒன்றுபட்டாலும்கூட பல்வேறுபட்ட கலை, கலாசார,  பாரம்பரிய மரபுகள் சமூக ரீதியில் வித்தியாசப்படலாம். அவற்றையும் திரட்டி எதிர்கால சந்ததியினருக்கு தம் முன்னைய தலைமுறையினரின் வரலாறுகளைப் பற்றியும், கலாசார பாரம்பரியங்களின் மான்மியங்கள் பற்றியும் தம் மொழியினூடே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் விக்கிப்பீடியா இன்றைய காலகட்டத்தில் முன்நிற்கின்றது.

கலைக்களஞ்சியங்கள் என்றால் என்ன?
  
மனிதனின் அறிவியல் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இயந்திரமயமான இத்தகைய யுகத்தில் ஒரு மனிதனால் சகல அறிவியல் விடயங்களையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. இருப்பினும்,  தனது தேவைகளுக்கேற்ப அவசியப்படக்கூடிய தகவல்களை எவ்வாறு, எங்கே பெறலாம் என்ற விபரத்தினை தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகின்றது. இவ்வாறாக மனிதனின் அறிவுப் பசிக்கு தீனி போடக்கூடிய விடயங்களில் ஒன்றாகவே கலைக்களஞ்சியங்கள் விளங்குகின்றன.

கலைக்களஞ்சியம் என்றால் "எழுத்துருவிலான அறிவுத்தொகுப்பு" என வரைவிலக்கணப்படுத்தலாம். உலக அறிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் அகரவரிசைப்பட தொகுக்கப்பட்டதாகவுமுள்ள நூல் தொகுதிகளையே பொதுவாகக் கலைக்களஞ்சியங்கள் என்கிறோம். இவை ஆங்கிலத்தில் என்சைக்ளோபீடியா (Encyclopedia) என அழைக்கப்படுகின்றன. Enkyklos Paideia  என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே இப்பெயர் உருவாகியுள்ளது. இதன் பொருள் 'சகலவற்றையும் உள்ளடக்கிய கல்வி" என்பதாகும்.

கலைக்களஞ்சியங்கள் வரலாற்றுச் சுருக்கம்.

கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டோட்டில் (Aristotle) பல்வேறு அறிவுத்துறைகளைப் பற்றித் தனது நூலில்களில் எழுதிவைத்திருந்தார். அத்தோடு அன்றைய உலகிலிருந்த அறிவையெல்லாம் சுருக்கித் தொகுத்துவைக்க அவர் முயற்சிஎடுத்திருந்தார். இதன் காரணமாக ‘கலைக்களஞ்சியங்களின் தந்தை" என அவர் அழைக்கப்படுகிறார். எனினும், முதலாவது கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் எனக் கருதப்படுபவர் கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானியான Speusippus என்பவராவார். இவர் பிளேட்டோவின் மாணவர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாவது கலைக்களஞ்சியத் தொகுதியொன்றை உருவாக்கியவர் மார்கஸ் வரோ (Marcus Terentius Varro) என்பவரே. இலத்தீன் மொழியில்  Disciplinae என அழைக்கப்பட்ட இத்தொகுதி இவரால் கி.மு. 30ம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இத்தொகுதியில் 9 புத்தகங்கள் இருந்தன. எனினும், இவற்றில் ஒன்றுகூட இப்போது இல்லை என்பது வேதனைக்குறிய விடயமாகும். இந்நிலையில் தற்போதும் முழுமையாகப் பேணப்பட்டிருக்கும் மிகப் பழைய கலைக்களஞ்சியம் Historia Naturalis  (இயற்கை வரலாறு) என்பதாகும். இதனை மூத்த பிலினி (Piliny the Elder) என்பவர் கி.பி. 79ம் ஆண்டளவில் தொகுத்தார். இந்தக் கலைக்களஞ்சியத் தொகுப்பில் 37 நூல்களும், 2493 அத்தியாயங்களும் இருக்கின்றன. 1500 ஆண்டுகளுக்கு மேலாக இது மிகப் பிரபல்யம் பெற்றுவிளங்கியது.

நவீன கலைக்களஞ்சியங்கள்

தற்போது பயன்பாட்டிலுள்ள கலைக்களஞ்சியங்களுள் நீண்ட வரலாறு கொண்டது Encyclopeadia Britannica எனும் பிரித்தானியக் கலைக்களஞ்சியமாகும். இது 1768ல் Andrew Bell, Colin Mac Farquhar, William Smellie  ஆகிய 3 ஸ்கொட்லாந்தியர்களால் உருவாக்கப்பட்டது. 1929ல் இது முற்றாகத் திருத்தியமைக்கப்பட்டு 24 பாகங்களாக வெளியிடப்பட்டது. பின்னர் 1974ல் முற்றிலும் புதிய பதிப்பாக 30 பாகங்களுடன் New Encyclopeadia Britannica என்ற பெயரில் வெளிவந்தது. இதன் திருத்திய பதிப்பு 32 பாகங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்தத் தொகுதி தற்போது ஐக்கிய அமெரிக்காவிலிருந்தே வெளியிடப்படுகின்றது. இதே போல சிறுவர்களுக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கலைக் கலைக்களஞ்சியத் தொகுப்புகள் பல தற்போது இருக்கின்றன.

நூலுருப்பெறாத கலைக் கலைக்களஞ்சியங்கள்

1980களில் இலத்திரோனிக் முறைகளில் CD களில் பதிவு செய்யப்பட்ட கலைக் கலைக்களஞ்சியங்கள் வெளிவரத் தொடங்கின. இவற்றைக் கனணிகளில் உள்ள CD Drive களைப் பயன்படுத்தி இயக்க முடியும். இந்த CD தட்டுக்களில் எழுத்துக்கள் மட்டுமன்றி சித்திரங்கள்,  போட்டோக்கள்,  வீடியோக்கள்,  ஒலிகள் என்பனவும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.  எழுத்துக்களையும், படங்களையும் கனணித்திரையில் பார்க்கும் அதேவேளை ஒலிகளை ஒலிபெருக்கி மூலம் கேட்கலாம். இவ்வாறான கலைக் கலைக்களஞ்சியங்கள் எழுத்து,  படங்கள்,  வீடியோ,  ஒலி போன்ற பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக Multi-Media Encyclopeadia  என அழைக்கப்படுகின்றன. நூலுருவிலுள்ள கலைக் கலைக்களஞ்சியங்களை விட அதிக தகவல்களை வழங்கக்கூடியனவாக இவை இருக்கின்றன.

கலைக்களஞ்சிய தளங்கள்

கலைக்களஞ்சிய தளங்கள் என்பன நவீன இலத்திரனியல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியில் பெறப்பட்ட ஆவணமாக்கல் பொக்கிசங்களாகும். இன்று கலைக்களஞ்சிய தளங்கள் என்ற அடிப்படையில் விக்கிபீடியா, மைக்ரோசொஃப்ட் என்கார்ட்டா, பிரிட்டானிக்கா,  என்சைக்ளோபீடியா டொட் கொம்  போன்ற சில தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் விக்கிபீடியா கலைக்களஞ்சிய தளம் முதன்மை நிலையைப் பெற்று விளங்குகின்றது.


விக்கி என்றால் என்ன?

விக்கி (Wiki)  என்னும் சொல்,  ஹவாய் மொழியில் வழங்கப்படும்  'விரைவு" என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். இந்த  இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களால் தளத்தின் உள்ளடக்கத்தை திருத்தவோ,  கூட்டவோ குறைக்கவோ மாற்றியமைக்கக் கூடியதாகவோ இருக்கும். நடைமுறைக்கும் தொடர்பாடல்களுக்கும் இது எளிமையானதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத் திகழ்கின்றன.

'விக்கி" என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் ' விக்கி மென்பொருளை'க் குறிக்கும். 'விக்கிவெப்' என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாக உள்ளது. விக்கிவெப் என்ற பெயரை 'வார்ட் கன்னிங்ஹாம்" என்பவர் முதலில் வைத்தார். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இணையத்தளங்களை குறிப்பிடலாம். விக்கி  (Wiki) + என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்தே விக்கிபீடியா (Wikipedia) என்ற சொல் உருவானது.

விக்கிபீடியா உருவாக்கமும்,  வளர்ச்சியும்


புதிய மிலேனியத்தின் ஆரம்பத்தில் 'நுபீடியா" என்ற இலவச இணைய கலைக் களஞ்சியப் பணியைப் புரிந்தவரும்,  தற்போது விக்கிப்பீடியாத் திட்டங்களை முன்னின்று நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும்,  வேறுபல விக்கிதிட்டங்களை நடத்துபவருமான அமெரிக்காவைச் சேர்ந்த  "ஜிம்மி வேல்ஸ்"  (ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் - பிறப்பு ஆகஸ்ட் 7, 1966, மற்றும் அமெரிக்க மெய்யியலாளரும், விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமான சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குனருமான லாரன்சு மார்க் லாரி சாங்கர் (பிறப்பு ஜுலை 16, 1968)  ஆகிய இருவரும் இணைந்து  கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆரம்பித்தனர்.

அனைவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம் உருவாக்கும் இலக்குகளை வேல்ஸ் தீர்மானித்தார்.  அந்த இலக்கினை அடைய, விக்கி மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தினை  சாங்கர் செயற்படுத்தினார்.  இவ்விதமாக ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா பிறந்தது. ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா படிப்படியாக பல மொழிகளில் வியாபகமடைந்தது. விக்கபீடியாவின் பிரதான கொள்கையான நடுநிலைநோக்கு மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள், நுபீடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளையொட்டியே உருவாக்கப்பட்டன.

விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் இறுதியில் 18 மொழிகளில் சுமார் 20,000 கட்டுரைகளை உள்ளடக்கியிருந்தது. பத்தாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் இந்நிலையில் 278 மொழிகள் என பல மொழிகளில் இது ஓர் இயக்கமாக வியாபித்து வளர்ச்சியடைந்துள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் சனவரி 10, 2011இல்  3,525,027 கட்டுரைகளும்,  278 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 17, 625, 096 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆங்கில விக்கிபீடியாவில் சனவரி 10, 2011இல்  13,728,700 பயனர்களும், 278 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 27,028,206 பயனர்களும் பங்களித்துள்ளனர். விக்கிப்பீடியாவில் பயனர்கள் என்ற கூறும்போது விக்கியில் எழுதி,  பங்களிப்பவர்களை குறிக்கும்.

தமிழ் விக்கிப்பீடியா

எளிய தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே தமிழ் விக்கிப்பீடியாவின் முதன்மைக் குறிக்கோளாகும். தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. தமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன் காணப்பட்ட நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் இ. மயூரநாதன் நவம்பர் 2003இல் தளத்தின் இடைமுகத்தின் பெரும்பகுதியைத் தமிழாக்கினார்.  ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டிடக் கலைஞராகப் பணியாற்றிவரும்  இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன்,  யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரியில் பழைய மாணவராவார். செப்டம்பர் 19, 2003 இல் இவரின் முதல் கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்தும் இவர் பணியாற்றி அக்டோபர் 03, 2005ல் 500 கட்டுரைகளையும்,  நவம்பர் 16,  2010ல் 3289 கட்டுரைகளையும் உள்ளிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாக ஏழாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிவரும் இவரின் பணி இன்றுவரை தொடர்கிறது. இவர் நாளொன்றுக்கு 1.26 கட்டுரைகளை எழுதுகின்றார் என புள்ளிவிபரங்களிலிருந்து கண்டுகொள்ளலாம்.

ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில தலைப்புடன் நவம்பர் 12, 2003 இல் முதல் தமிழ் கட்டுரையை வெளியிலிருந்து உள்ளிட்டார். சனவரி 10,  2011வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 27,033 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவே தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்தாலும், எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது. பிறமொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிடுகையில் கட்டுரைகள் உள்ளாக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா 68வது இடத்தில் இருக்கின்றது. சனவரி 10,  2011வரை 24,051  தம்மைப் பயனர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். மேலும் விக்கியுடன் இணைந்த வகையில் பின்வரும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவை: விக்சனரி (கட்டற்ற அகரமுதலி), விக்கி மேற்கோள்கள் (மேற்கோள்களின் தொகுப்பு), விக்கி இனங்கள் (உயிரினங்களின் கோவை), விக்கி செய்திகள் (கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை), விக்கி மூலம் (கட்டற்ற மூல ஆவணங்கள்), விக்கி பொது
(பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு), விக்கி பல்கலைக்கழகம் (கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்),     விக்கி நூல்கள் (கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்), மேல்-விக்கி (விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு.

தமிழ் விக்கிப்பீடியா குறிக்கோளும், கொள்கைகளும்.

விக்கிப்பீடியா பல மொழிகளில் அமையப்பெற்றிருந்தாலும்கூட,  குறித்த மொழியின் குறித்த மொழிசார் கலை,  கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றது. இவ்வடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இலகு  தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முதன்மைக் குறிக்கோளைக் கொண்டுள்ளமையால் இது நடுநிலை நோக்கு, பதிப்புரிமைகளை மீறாமை, மெய்யறிதன்மை,  இணக்க முடிவு, பாதுகாப்புக் கொள்கை, தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்,  பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு இதன் பணிகள் தூரநோக்குடன் செயற்படுத்தப்படுகின்றன.

தமிழ் விக்கிப்பீடியா ஐந்து அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றது. இந்த அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் ஐந்து தூண்கள் என்று சுருக்கி வரையறுத்துள்ளனர். அவை:

1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல்,
2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல்,
3) கட்டற்ற உள்ளடக்கம்,
4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள்,
5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை.

தமிழ் விக்கிப்பீடியாவில் பிரதான உள்ளடக்கம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் பிரதான உள்ளடக்கமாக பின்வரும் பிரதான தலைப்புகள் அமைகின்றன. தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் இவை மேல்விக்கியில் எல்லாமொழி விக்கிப்பீடீயாக்களிலும் இருக்க வேண்டிய மூல கட்டுரை அமைப்புகள் என பரிந்துரை செய்யப்பட்டவையாகும். மேற்படி ஒன்பது பிரதான தலைப்புகளுக்கமைய விக்கிப்பீடியாவில் காணப்படக்கூடிய கட்டுரைகள் பல துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்படுத்தலின் கீழ் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. விக்கியின் மென்பொருள் தொழில்நுட்பம் மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் காணப்படுவதினால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் பயணிப்பது இலகு. மேலும் குறித்த விடயம் தொடர்பாக தேடல் மேற்கொள்ள வேண்டுமெனில் தேடல் கட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்து உரிய தலைப்பைத் தேடலாம்.

ஒரு தகவல் களஞ்சியம் என்ற வகையில் விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் தரமானவை. ஆதாரபூர்வமானவை. மேலும் உரிய கட்டுரைகள் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் வெளியிணைப்புகளை தேர்ந்து அதனைச் சொடுக்குவதன் மூலம் விரிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெளியிணைப்புக்கள் தமிழ் மொழியிலேயே இருக்குமெனக் கருத முடியாது.

இலங்கையின் நிலை:

இலங்கையில் விக்கிப்பீடியாவின் பாவனை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக 2007ம் ஆண்டுக்கு முன்பு இலங்கையில் தரவிறக்கம் செய்யப்படும் அலகுகளுக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டியிருந்தமையினால் இணையப்பாவனை அதிகரிக்கவில்லை. இந்நிலையில் 2007ம் ஆண்டிளவில் ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணைய இணைப்பு சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்தி, தற்போது நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தி வருகின்றது. புரோட்பேன்ட் இணைய சேவையில் தரவிறக்கம் செய்யும் அலகு கட்டுப்படுத்தப்படாததினால் நிலையான கட்டணத்தை செலுத்துவதினூடாக இணையப்பாவனையை தொடரலாம். இதனால் இலங்கையில் இணையப் பாவனை கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது. 2010 நவம்பரில் ஸ்ரீலங்கா ரெலிகொம் அறிக்கையை மேற்கோள் காட்டி இலங்கையின் இணையப் பாவனை 8.1 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேநேரம்,  வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இணைய இணைப்புகளை பாவனையாளர்களுக்கு வழங்கி வருவதினால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் இணையத்தளப் பாவனை வெகுவாக அதிகரிக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் மாணவர்களுக்கும்,  கற்றவர்களுக்கும் அறிவியல் தகவல்களைப் பெற்றுக் கொள்ள விக்கிப்பீடியா ஒரு முக்கியமான தளமாக அமைய இடமுண்டு.

2009ம் ஆண்டிலிருந்து உலகின் பல பகுதிகளில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிமுகப்பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் முதலாவது தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை டிசம்பர் 28, 2010ல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. தென்கிழக்குப் பலக்லைக்கழக உதவிப் பதிவாளரான சஞ்சீவ சிவக்குமார் இவர் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவரும்கூட. இதனை முன்நின்று நடத்தினார். இவ்வாண்டில் பல பட்டறைகளையும் தமிழ் விக்கிப்பீடியா பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கும் விக்கிப்பீடியா நிர்வாகித்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எதிர்பார்க்கை

காலமாற்றங்களுக்கேற்ப மனிதச் செயற்பாடுகளும் நடத்தைகளும் மாற்றமடைய வேண்டுமென்பது அறிவு ஜீவிகளின் எதிர்பார்க்கையாகும். உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்றஇ அரசியல் - சமய - பக்க - சாதி - வர்க்க சார்பற்ற அறிவுத்தொகுப்பான தமிழ் விக்கிபீடியாவில் இணைந்து அதன் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யவேண்டியது அத்தியாவசியமானது. இதன் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க அனைவரும் முன்வரவேண்டும். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எம் அனைவரினதும் செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்தும் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் தமிழ்மொழியின் வளத்துக்கும், பாதுகாப்புக்கும் துணைநிற்க வேண்டியது காலத்தின் தேவைக்கேற்ப  தார்மீகப்பொறுப்பாகும்.

http://thesamnet.co.uk/?p=23866
http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2011/11-happy-birthday-wikipedia.html

Saturday 1 January 2011

நுகர்மூடி (மாஸ்க்) அணியும் காலம் இலங்கையிலும்... - புன்னியாமீன்

காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.

நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் ஏ/ எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு (swine flu / swine influenza) வேகமாக பரவி வருகின்றது.

இதுவரை பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ் இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 நோய்த்தாக்கத்தின் காரணமாக கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர் நவம்பர் 04, 2009ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அதே நேரம் இந்நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழந்தவர் வைத்தியத் தம்பதியினரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைவிட 2010ம் ஆண்டில் மாத்திரம் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 340க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்துள்ளார். பன்றிக் காய்ச்சலுக்கு தமிழகத்தில் 700 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது விடயமாக பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியமும், இந்நோய் பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு ஊடகங்களும், அரசாங்கமும் பிரயத்தனம் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு விட்டது. ஏனெனில், ஒரு தொற்று நோயோ அல்லது பயங்கர நோய்களோ பரவி வரும் போது அந்நோய் பற்றிய சரியானதும், பூரணமானதுமான விளக்கங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தினதும், சுகாதாரத் திணைக்களத்தினதும் மேலும் ஊடகங்களினதும் கடமையாகின்றது.
 
தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய இன்புளுயன்சா ஏ/எச்1என்1 வைரஸ் உலகிற்குப் புதிது. 2009 ஏப்ரல் காலகட்டத்தில் மெக்ஸிக்கோவிலிருந்து இந்த வைரஸ் உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இலங்கையில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நோயாளி ஜூன் 16, 2009 ம் திகதி இனங்காணப்பட்டார். எட்டு வயது சிறுவனான இவர் அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தவர். சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையின்போது இச்சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருவரும் ஏ/எச்1என்1 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து அச்சிறுமியும் அவருடைய தாயாரும் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டனர்.

சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையொன்றின் பிரகாரம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சவூதி அரேபியா மற்றும் மேலைத்தேய நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எமது அண்டைய நாடான இந்தியாவிலும் இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஜூலை 3, 2009 இல் உயிரிழந்தார். இவரும் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவராவார். நவம்பர் 4, 2009 அறிக்கைப்படி இந்தியாவில் 477 பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். 14, 049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அக்டோபர் மாத இறுதியில் அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலினால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை ஜனாதிபதி பராக் ஒபாமா பிரகடனப்படுத்தியுள்ளார். தேசிய அவசர நிலையின் கீழ் பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். நவம்பர் 1, 2009 வரை உலகம் முழுவதும் வேகமாகப் பரவி 5712 பேரின் உயிர்களைப் பறித்துள்ள பன்றிக் காய்ச்சல் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது.
 
ஜூன் 11, 2009 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது. ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் கருதுகின்றனர்.


பன்றி காய்ச்சல் என்றால் என்ன?


ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா பறவைகளிலும், முலையூட்டிகளிலும் காணப்படும் ஒருவகைத் தொற்று நோய் ஆகும். இது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ வைரஸினால் (virus) உண்டாகிறது. நோயுற்ற முலையூட்டிகள் இருமும் போதும் தும்மும் போதும் காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் பிற முலையூட்டிகளில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறே இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவக்குத் தொற்றுகிறது. நோயுற்ற பறவைகளின் எச்சங்களில் இருந்தும் தொற்று ஏற்படும். எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றூடாகவும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏ/ எச்1.என்1 இன்புளுயன்சா சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பதும் ஒரு ஆபத்தான நோயாகும். இந்நோய் இன்புளுயன்சா A, இன்புளுயன்சா B, மற்றும் இன்புளுயன்சா C என்னும் மூன்று வகையான வைரஸ்களினால் ஏற்படுகிறது. இதில் இன்புளுயன்சா A யினால் மிக அதிகமான அளவிலும், இன்புளுயன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.


இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்றக் கூடியவை. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இவ்வைரஸ் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது..


பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகை வைரஸானது 1918இல் உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிய 'எசுப்பானிய ஃப்ளூ" எனும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'எசுப்பானிய ஃப்ளூ" காரணமாக ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய ஏ/ எச்1என்1 வைரஸ் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகை வைரஸின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுருக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது.


பன்றிகளுக்கு வருகின்ற மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதருக்கு தொற்றத் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில், இந்நோய்க்கு ஆளான மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு இது தொற்றவில்லை. எனவே நோய் பரவும் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மெக்ஸிகோவில் பரவிய எச்1என்1 வைரஸ் மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு தொற்றி மிகவிரைவாக நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை "மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.
 
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்
 
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் பொதுவான சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அதாவது,
*   தொடர்ந்த தலை வலி, குளிருதல், நடுங்குதல் விறைப்பு, தசைநார் வலி,
இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் / தொண்டை அழற்சி/ தும்மல் / பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
*   தலை சுற்றல் / மயக்கம்
*   உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
*   இடைவிடாத காய்ச்சல் (100.o F க்கு மேல்),
*   வயிற்று போக்கு, குமட்டல் வாந்தி எடுத்தல்

குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றியிருந்தால் தொடர்ந்த காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படல், உடல் தோல் ஒரு வித நீல நிறமாக மாறுதல். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்), தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது வழமைப்போல் இல்லாமல் சோர்ந்து இருத்தல், தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல், தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படல் போன்ற காரணிகளை வைத்து இனங்காணலாம்.

நோய் தடுப்பு முறை

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி (மாஸ்க்) அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்வது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் அருகாமையில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்நிலையில் சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி என கனடா நலத்துறை விபர மடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும். அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மென்தாள் (டிசு), அல்லது கைக்குட்டை கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.

சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது. நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேசை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பழம்- கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல், நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம். நன்கு ஒய்வெடுக்கவும், உடற் பயிற்சி செய்யவும், பானங்கள், நிறையப் பருகவும், சத்துணவு வகைகளை உண்ணவும். இந்த நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அவதானங்கள்.

பன்றிக் காய்ச்சல் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏனைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், "மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல் எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை. அதேவேளை, வயிற்றோட்டம் ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது.

நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் சளிகோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாகும். உச்ச நிலையில் சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயவங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகலாம்.

இது மட்டுமன்றி ஆஸ்மா போன்ற சுவாச மண்டல நோய்கள், HIV மற்றும் நீரிழிவு முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

உலக சுகாதார நிறுவன அறிக்கைகளை விரிவாக ஆராயும் போது பன்றிக் காய்ச்சல் எனும் கொள்ளை நோய் ஒருசில நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்சினையில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.. இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை. தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும். மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய மருத்துவமனைகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது.

நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ நிறுவனங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும். பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை வைத்திய நிலையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறை:

பன்றி காய்ச்சல் சிகிச்சை குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்' / "oselitamivir (Tamiflu (r)" 'ஜானமிவிர்' "zanamivir (Reienza (r) ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம். இந்த மருந்துகள் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்படுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) ஆகிய மருந்து வகைகள் சிகிச்சைக்கு உதவுகின்றன. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாகவும் கூறப்படுகின்றது. நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்யக்கூடாது.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

oselitamivir (Tamiflu (r))" டா‌மிபுளு மாத்திரைகளை முறையின்றி பயன்படுத்துவது ஆபத்தானதாகும். பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை, பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ள் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்தி விடுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்துக்கு முறைப்பாடுகள் வந்ததையடுத்து மேற்குறிப்பிட்ட கருத்தினை வெளியிட்டிருந்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். எனவே, பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் உட்கொள்ள வேண்டாம் எனவும் உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌யி‌ன் படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம், ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம். ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவுவதை பழக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். தன்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.