Saturday 3 December 2011

சர்வதேச ஊனமுற்றோர் தினம் (International Day of Disabled Persons) - புன்னியாமீன்

உலகளாவிய ரீதியில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. ஊனமுற்றோரின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் அனைத்து மக்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் பின் நிற்கக்கூடாது என்ற எண்ணக் கருவினை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகும். ஊனமுற்றோர் எனும் போது இவர்கள் நோயாளிகளாக அல்லாமல் சமூதாயத்தில் நம்பிக்கைக்குரிய பிரஜைகள் என்ற அடிப்படையில் நோக்கப்படுவதுடன் இவர்களும் மனிதாபிமான சிந்தனை மிக்கவர்களே என்பதை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகின் மக்கள் தொகையில் பத்து வீதத்தினர் அதாவது 65 கோடிப் மக்கள் ஊனமுற்றவர்கள் என உலக சுகாதார நிறுவகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை (2008) கூறுகிறது. ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர்.

1981-ம் ஆண்டை “சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டா”க அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை, 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் திகதியை சர்வதேச ஊனமுற்றோர் தினமாகவும் அறிவித்தது. அன்று தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக நாடுகளால் ‘சர்வதேச ஊனமுற்றோர் தினம்” என அனுசரிக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தமிழ்நாட்டு அரசு 2009 ம் ஆண்டு முதல் சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3ம் திகதியை, சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊனமுற்றோர், சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாட ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டிருந்தது.

பல நாடுகள், அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிந்து வருகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்த சிறப்புக் கருத்தரங்குகள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்கின்றன. மேலும் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு விளம்பரங்கள், பிரசாரங்களை மேற்கொள்கின்றன. இவற்றினூடாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊனம் என்பது, பொதுவான நிலையில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதையே குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் அல்லது பிறப்பிலேயே ஏற்படலாம்

ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் காணப்படுவதினால், பாதிக்கப்பட்ட தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயற்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய நோக்கு ஊனத்துக்கான மருத்துவ மாதிரியை ஒத்தது. மேலும் இத்தகைய பார்வை ஊனம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற்றுக்குமான தொடர்புகளுக்கு வாய்ப்பினை அளிக்கக்கூடும். மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பவற்றுடன் இவை தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.

இந்தியாவில் 2001 ஆண்டு கணிப்பீட்டின் படி மொத்த சனத்தொகையில் 2.31 சதவிகிதமானோர் ஊனமுற்றவர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. 2.19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்;. ஊனமுற்றோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும், உடல் திறன் குறைந்தோரில் 49 சதவிகிதத்தினர் படித்தவர்கள் என்றும், 34 சதவிகிதத்தினர் பணிபுரிபவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2001 ஆண்டு Census India 2001 அறிக்கையின் படி இந்தியாவில் இயங்கும் திறன் (Movement) 28 %, பார்க்கும் திறன் (Seeing) 49%, கேட்கும் திறன் (Hearing) 6%, பேசும் திறன் (Speech) 7%, மூளைத் திறன் (Mental) 10% குறைந்தவர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 2002 (National Sample Survey Organisation 2002) இல் ஊனமுற்றோர் குறித்து வெளியிட்டுள்ள தகவல்களின்படி இயங்கும் திறன் (Movement) 51%, பார்க்கும் திறன் (Seeing) 14%, கேட்கும் திறன் (Hearing) 15%, பேசும் திறன் (Speech) 10%, மூளைத் திறன் (Mental) 10%, குறைந்தவர் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவில் சமுதாய நீதி மற்றும் அதிகார அமைச்சின் ஊனமுற்றோர் நலப்பிரிவு (The Disability Division in the Ministry of Social Justice & Empowerment), ஊனமுற்றோரின் அதிகாரங்களையும் உரிமைகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தெற்காசிய நாடுகளைப் பொருத்தவரையில் ஊனமுற்றோருக்கு பல்வேறு வசதிகள் வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் கீழ் சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் உறுப்புரை 253 இல் யூனியன் பட்டியல் (மாநில அதிகாரப் பட்டியல்) இலக்கம் 13 இல் இந்திய அரசாங்கமானது, ‘ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1995″ (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995) என்ற சட்டத்தை இயற்றியது. ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டம் இந்தியாவின் அனைத்துப் மாநிலங்களிலும் (ஜம்மு – காஷ்மீர் நீங்கலாகப்) பரவியுள்ளது. ஐம்மு – காஷ்மீர் அரசாங்கம் ‘ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1998 (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights & Full Participation) Act, 1998) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.

மேலும் ஆசியா பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. அத்துடன் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக்கோ மில்லேனியம் ஃபிரேம்ஒர்க் (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஊனமுற்றோரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் அல்லது அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007-இல் நடைபெற்றது; இந்தியா உலகநாடுகளின் ஒப்பந்தத்தை 01.10.2008 இல் ஏற்றுக்கொண்டது.

2008 சர்வதேச ஊனமுற்றவர்கள் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த செய்தியில் ‘ஊனமுற்றவர்களும், அவர்களின் நிறுவனங்களும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் 2008 இல் இத்தினம், சர்வதேச மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இடம் பெறுகிறது என்றும், இவ்விரு உலக தினங்களிலும் நம் அனைவருக்கும் மாண்பும் நீதியும் என்ற தலைப்பே கருப்பொருள் என்றும் குறிப்பிட்ட பான் கீ மூன் மிலேனிய வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் ஊனமுற்றோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார்.

ஊனமென்பது முயற்சிகளுக்கு தடையாக அமைவதில்லை. முயற்சியுடைய பல ஊனமுற்றவர்கள் உலகளாவிய ரீதியில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர். கல்வி, கலை, கலாசாரம் என்ற அடிப்படையில் இத்ததைய சாதனைகள் தொடர்கின்றன. அது மட்டுமல்ல ஊனமுற்றவர்கள் இன்று விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு வருகின்றார்கள். ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1960 முதல் நடைபெறுகிறது. உடல் ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியான இப்போட்டி கடைசியாக 2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் 2012ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் தேசிய போட்டிகளும், சர்வதேச ரீதியில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே ஊனம் என்பதை ஒரு தடையாக பார்க்காமல் ஊனம் உள்ளவர்களையும் திறமைமிக்கவர்களாகவும், மனிதாபிமான நோக்குடனும் நோக்குவதும் சாலப் பொருத்தமானதாக இருக்கும். இத்தினத்தில் இத்தகைய உணர்வினை வளர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுவோமாக.

Thursday 17 November 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். 

இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில்
முதல் பரிசாக 200 டாலர்கள்
இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், 
மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் 

என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்
 
என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

- பாலா ஜெயராமன்ஒருங்கிணைப்பாளர், தமிழ் விக்கி ஊடகப் போட்டி

Wednesday 16 November 2011

பீ.எம்.புன்னியாமீன்: மௌனமாய்ப் பெய்யும் பெருமழை! : என்.செல்வராஜா.

உலகெங்குமுள்ள ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் திரட்டித் தனது சொந்த முயற்சியினால் நவமணி, தினக்குரல் போன்ற ஊடகங்களிலும், பின்னர் அவற்றைத் தொகுத்து பல்தொகுதிகளாக நூலுருவிலும் வெளியிட்டு வந்தவர் பி.எம்.புன்னியாமீன். அண்மையில் மற்றுமொரு சாதனையாளராக அவர் தன்னை இனம்காட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளிலும், பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இச்சாதனை 2010ம் ஆண்டு, நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு, நவம்பர் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவரால் நிகழ்த்தப்பட்டது. இதனை உலகளாவிய ரீதியில் தமிழ் மின்-ஊடகமொன்றில் தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதனையாகக் கருதுகின்றேன்.

1970ம் ஆண்டுகளில் இலக்கியத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்த திரு பீ.எம்.புன்னியாமீன் இதுவரை 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி, கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல்; ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவராவார். இவர் இதுவரை  176 தமிழ் நூல்களை எழுதி  வெளியிட்டுள்ளார்.

ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வெளிவரும் தமிழ் இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிவந்த இவர் அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்களில் அதிகமாக எழுதி வருகின்றார். லண்டனிலிருந்து வெளிவரும் தேசம்-இணையத்தில் இவரது பல அரிய கட்டுரைகளும் அரசியல் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன.
அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறையின் இறுதியாண்டு மாணவியான செல்வி எம்.ஐ.எப் நபீலா என்பவர் “இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும்” எனும் தலைப்பில் தமிழ் ஜேர்னலிஸ்ட் எனும் இணையத்தில், 2010 டிசம்பர் 29ம் திகதி எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையில் உலகளாவிய ரீதியில் செயல்படும் 183 இணையத் தளங்களில் பீ.எம்.புன்னியாமீனின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்துடன், திரு புன்னியாமீனது கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 183 இணையத்தளங்களின் முகவரிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து விக்கிப்பீடியாவுடன் திரு புன்னியாமீனுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. உலகளாவிய ரீதியில் விக்கிப்பீடியா 282 மொழிகளில் வெளிவருவதும், அதிக வாசகர்களால் வாசிக்கப்படும் இணையத் தளங்களின் வரிசையில் 5வது இடத்திலிருப்பதும் தெரிந்ததே. விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் இவர் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்து ஆரம்பகாலத்தில், இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆகியோரை அங்கு அறிமுகம் செய்துவந்தார். பின்னாளில் தொடர்ந்து இலங்கை அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலைத்துவ அம்சங்கள் மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றை பதிவு செய்ததுடன், அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் எழுதிவருகின்றார். மேலும் இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா (மியன்மார்) போன்ற நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள்; பற்றியும் தமிழ்பேசும் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட சிற்றிதழ்கள் பற்றியும் எழுதிவருகின்றார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரின் கட்டுரையாக்கம் தொடர்பான பதிவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14, 2010 முதல் மார்ச்சு16, 2011 வரையிலான காலகட்டத்தில் இவர் முதலில் 500 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொடர்ந்து இவரால் நவம்பர்14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 1000 கட்டுரைகளும், ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 2000 கட்டுரைகளும், மே 6, 2011 முதல் ஜுன் 22, 2011 வரையிலான காலப்பகுதியில் 3000 கட்டுரைகளும், ஜுன் 23, 2011 முதல் ஓகஸ்ட் 22 2011 வரையிலான காலப்பகுதியில் 4000 கட்டுரைகளும், ஓகஸ்ட் 23, 2011 முதல் செப்டம்பர் 30 2011 வரையிலான காலப்பகுதியில் 5000 கட்டுரைகளும், அக்டோபர் 1 , 2011 முதல் அக்டோபர் 19 2011 வரையிலான காலப்பகுதியில் 6000 கட்டுரைகளும் அக்டோபர் 20 2011 முதல் நவம்பர் 6 2011 வரையிலான காலப்பகுதியில் 7000 கட்டுரைகளும் நவம்பர் 07, 2011 முதல் நவம்பர் 13, 2011 வரையிலான காலப்பகுதியில் 7500 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

பல்வேறு சமூக, பொருளாதாரப் பணிகளுக்குள்ளும், இடைக்கிடையே வலிந்து வாட்டி வைத்தியசாலை வரை கொண்டுசென்ற நீரிழிவின் பாதிப்புகளுக்குள்ளும் தடம்புரளாமல், மனம் சோர்வடையாமல், இவருக்கு இத்தகைய சாதனைகளைத் தொடர்ந்து செய்யும் மன வலிமையையும், தன்னம்பிக்கையையும் வழங்கிய இறைவனின் அருளை மேலும் வேண்டி அவரை உளமார வாழ்த்திமகிழ்வோம்.

அவரது மின்னஞ்சல் முகவரி: pmpuniyameen@gmail.com
14.11.2011
என்.செல்வராஜா,

நூலகவியலாளர்,
லண்டன்.


crhj;Jiz:

* http://tamiljournalism.wordpress.com/2010/12/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/

* http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen

* http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81

இக்கட்டுரை பிரசுரமான ஏனைய ஊடகங்கள்
* http://thesamnet.co.uk/?p=30968 (ஐக்கிய இராச்சியம்) 15 November 2011
* http://www.ilankainet.com/2011/11/blog-post_5870.html (பிரான்ஸ்) 16 November 2011
*http://lankamuslim.org/2011/11/16/%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE/#more-17621 ( இலங்கை) 16 November 2011
* நவமணி (தேசிய வாராந்தப் பத்திரிகை- இலங்கை)  20 November 2011
* http://www.tamilmurasuaustralia.com/2011/11/blog-post_2303.html  தமிழ் முரசு (அவுஸ்திரேலியா) 20 November 2011

Monday 10 October 2011

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் - புன்னியாமீன்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.

மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty)  என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பாகும்.

மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும். மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்தியக் கூட்டுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது. ஜுலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
.
2002, மே 13 இல் ரோம் நகரில் கூடிய இந்த அமைப்பின் மாநாட்டில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003, அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள்,  அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன.

தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல்,  கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல்,  தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல்,  நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.

கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

=உசாத்துணை=
* http://www.hrea.org/index.php?doc_id=889
*  http://www.penalreform.org/news/world-day-against-death-penalty-2009
*  http://theonlinecitizen.com/2009/10/world-day-against-death-penalty/
*  http://www.iheu.org/node/3513
*  http://www.worldcoalition.org/worldday.html

Tuesday 4 October 2011

இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு. கலாநிதி க. ஹரிகிருட்டிணனுடன் ஒரு நேர்காணல் - புன்னியாமீன்

மலாய் இனத்தவரல்லாத மலேசிய பெற்றோரின் மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும், அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய  ஒரு நிலையினையுமே மலேசிய எஸ்.பி.எம். பரீட்சை முடிவுகள்  எற்படுத்துகின்றன - கலாநிதி க. ஹரிகிருட்டிணன்

நேர்காணல்: புன்னியாமீன்

மலேசியாவில் நோட்டிங்ஹாம் அனைத்துலக பல்கலைக்கழக கணிதத்துறை துணைப் பேராசிரியரான கலாநிதி க. ஹரிகிருட்டிணன் அவர்கள் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார்.

கலாநிதி க. ஹரிகிருட்டிணன் மலேசியாவில் வாழும் 3ம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு இந்தியத் தமிழராவார். இறப்பர் தோட்டத் தொழிலாளர்களான கந்தன், அத்தாயி தம்பதியினரின் புதல்வரான இவர் 1963ம் ஆண்டில் மலேசியா மண்ணில் சீபில்டூ எனும் தோட்டத்தில் பிறந்தார்.  ஆரம்பக் கல்வியை சீபில்டூ தோட்ட தமிழ் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கிள்ளான் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையிலும் தொடர்ந்தார். பின்பு மலாயப் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆசிரியப் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர் தனது முதுநிலைக் கல்வியை யப்பான் ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் கற்று அதே பல்கலைக்கழகத்தில் பிரயோகக் கணிதத் துறையில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றார்.

மலேசியக் கல்வித்துறையில் சுமார் இரண்டு தசாப்த கால அனுபவமிக்க இவரிடம் மலேசியா கல்விக் கட்டமைப்பு தொடர்பாகவும், மலேசியாவின்  கல்வி நிலை தொடர்பாகவும் 'நமது தூது" சார்பில் ஒரு நேர்காணலில் ஈடுபட்டோம்.

கேள்வி:    வணக்கம் கலாநிதி க. ஹரிகிருட்டிணன் அவர்களே! நமது தூது சார்பில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மலேசியா 1957ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலைப் பெற்றது. மலேசியாவின் கல்விக் கட்டமைப்பு கல்வி நிலை தொடர்பாக தங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம். முதலில் தற்போதைய மலேசியாவின் கல்விக் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா?

பதில்:    வணக்கம்,  மலேசியாவில் ஒரு மாணவன் தனது 7வது வயதில் ஆரம்பக் கல்வியைத் ஆரம்பிக்கின்றான். ஆறாண்டுகளில் தொடக்கக் கல்வியை முடிந்த பின்னர் இடைநிலைப் பாடசாலையில் 3 அல்லது 4 ஆண்டுகள் கற்று, உயர்நிலைப் பள்ளியில் 4 ஆண்டுகள் பயில வேண்டும். அதன் பின் பல்கலைக்கழகத்தில் துறைச் சார்ந்த கல்வியைத் தொடர்கிறார்கள்.

கேள்வி: இடைநிலைப் பள்ளியில் 3 அல்லது 4 ஆண்டுகள் எனக் குறிப்பிட்டீர்கள். இதற்கான காரணம் என்ன?

பதில்:    மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. குறிப்பாக மலாயர், சீனர் மற்றும் இந்தியர் என பெரும்பான்மை சமூகங்களைக் கொண்ட ஒரு நாடு. மலாயர் சுமார் 55 வீதத்தினரும், சீனர் 32 வீதத்தினரும், இந்தியர் 8 வீதத்தினரும், மீதமானோர் ஏனைய சமூகத்தினரும் வாழ்கின்றனர். மலேசியாவில் ஆரம்பப் பாடசாலைகளில் 6 ஆண்டுகள் அவர்களின் தாய்மொழி மூலமாகவே கல்வி கற்கும் வாய்ப்புண்டு. மலேசியாவில் மலாய மொழியே தேசிய மொழியாக உள்ளது. இடைநிலைக் கல்வி தேசிய மொழியான மலாய் மொழியிலேயே போதிக்கப்படுகின்றது. இந்நிலையில் இடைநிலை கல்வியை தொடரும் போது தாய்மொழி மூலமாக கல்வி கற்றவர்கள் ஓராண்டு புகுமுக வகுப்பில் கற்க வேண்டிய கட்டாய நிலை உள்ளதினால் இவர்கள் 4 ஆண்டுகள் இடைநிலைக் கல்வியை பெற வேண்டியுள்ளனர். அதேநேரம், ஆரம்பக் கல்வியை மலாய் மொழியில் கற்றவர்களும், தாய் மொழிப் பள்ளிகளில் கற்று மிகச் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களும் புகுமுக வகுப்பில் கற்க வேண்டிய அவசியமில்லை. இதனால் இவர்களுக்கு இடைநிலைக் கல்வி 3 ஆண்டுகளுள் நிறைவடைகின்றது.

கேள்வி    :மலேசியாவில் ஆரம்பப் பாடசாலைகளில் தாய்மொழி மூலமாக கற்கும் வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டீர்கள். அதேநேரம், மலேசியாவில் தேசிய மொழியான மலாய்மொழியிலும் ஆரம்பப் பாடசாலைகள் பிரதானமாக உள்ளன. இப்பாடசாலைகள் ஒரு பொதுவான பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றனவா? அல்லது மலாய்மொழிப் பாடசாலைகளுக்கு வேறாகவும் தாய்மொழிப் பாடசாலைகளுக்கு வேறாகவும் பாடத்திட்டங்கள் உள்ளனவா?

பதில்:    பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமுமில்லை. என்றாலும், ஆரம்பப் பள்ளிகளை  தேசிய பாடசாலைகளாகவும் தேசிய மாதிரிப் பாடசாலைகளாகவும் அரசாங்கத்தின் கொள்கை வகுக்கின்றது. அனைத்து மலாய்ப் பாடசாலைகளும் தேசிய பாடசாலைகள். அனைத்து தாய்மொழிப் பாடசாலைகளும் தேசிய மாதிரிப் பாடசாலைகளாகும்.

கேள்வி    : கலாநிதி அவர்களே! தங்கள் கருத்துப்படி மலேசியாவில் தேசிய பாடசாலைகள், மாதிரிப் பாடசாலைகள் என இரு கட்டமைப்புகள் உள்ளதை எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. இத்தகைய கட்டமைப்பு நிலையினை ஆரம்பப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் இலங்கையில் காணப்படுவதில்லை. மலேசியாவில் இந்த தேசிய பாடசாலைகள் மற்றும் தேசிய மாதிரிப் பாடசாலைகளுக்கிடையிலுள்ள வேறுபாடுகளை கூற முடியுமா?    

பதில்: இவ்விடத்தில் பெருவாரியான தமிழ், சீனப் பாடசாலைகள் பிரித்தானிய காலனித்துவத்தின்போது தோட்டங்களில் அல்லது தனியார் நிலங்களில் நிறுவப்பட்ட பாடசாலைகளாகும். தமிழ்மொழிப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான பாடசாலைகள் தற்போதும் தனியார் தோட்டங்களில் அமைந்தவையாகவே காணப்படுகின்றன. இவ்வாறு தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் மாதிரிப் பாடசாலைகள் அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பாடசாலைகளாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் எல்லா தேசியப் பாடசாலைகளும் அரசாங்கத்தின் முழு உதவிப் பெற்ற பாடசாலைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்கள் ஒன்றாக இருந்தாலும் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சமநிலையில் பேணப்படுவதில்லை. மாதிரிப் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய வளங்கள் குறைவாக உள்ளமையினால் தேசியப் பாடசாலைகளைவிட இப்பாடசாலைகளின் கல்வித்தரம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. தற்போது மலேசியாவில் 523 தமிழ்மொழி மாதிரிப் பாடசாலைகள் காணப்படுகின்றன. பிரித்தானிய காலனித்துவத்தின்போது சுமார் 1500 தமிழ்மொழிப் பாடசாலைகள் இருந்தன.


கேள்வி    : மலேசியாவில் தமிழ்மொழி மூல மாதிரிப் பாடசாலைகளை எடுத்துநோக்குமிடத்து சுதந்திரத்தின் பின்பு எண்ணிக்கைக் குறைவடைந்துள்ளதாக தெரிகின்றது. இப்பாடசாலைகளின் எண்ணிக்கைக் குறைவடைவதற்கு காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டனவா அல்லது வேறு யாதாவது காரணங்கள் உள்ளனவா?

பதில் : காலப்போக்கில் மலேசியா அடைந்த துரித வளர்ச்சியில் இறப்பர் தோட்டங்களும் செம்பனை தோட்டங்களும் காணாமல் போயின. இதனால் அங்கு இருந்த தமிழ் பாடசாலைகளும் மறைந்தன. சுதந்திரத்துக்குப் பின்னால் இதுவரை எந்தவொரு புதிய தமிழ்ப் பாடசாலையும் தோற்றுவிக்கப்படவில்லை என்பது மலேசியா இந்தியர்களின் ஆதங்களுள் ஒன்றாக இன்னமும் இருந்து வருகின்றது.

கேள்வி:     அவ்வாறாயின் இவ்வாறாக மூடப்பட்ட தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்களுக்கு என்ன நடந்தது?

பதில்:    மலேசியாவின் சுதந்திரத்தின் பின்பு பிரித்தானியர்கள் அவர்கள் வசமிருந்த தோட்டங்களை கைவிட்டுச் சென்றமையினால் தோட்டத் துண்டாடல்கள்ää தோட்ட விற்பனைகள் நடந்தன. இதனால் தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையும் துண்டாடப்பட்டது. இதன்விளைவாக பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நேரத்தில் அப்பாடசாலைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் அதிக தூரத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ்ப் பாடசாலைக்குச் செல்லவேண்டும் அல்லது பக்கத்தில் அமைந்துள்ள மலாய் தேசிய பாடசாலைகளில் பயில வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மூடப்பட்ட மாதிரிப் பாடசாலைகளில் கற்ற பெரும்பாலான மாணவர்கள் தேசிய பாடசாலைகளிலேயே இணைந்து கல்வியைத் தொடர்ந்தார்கள். இந்நிலையானது படிப்படியாக மலேசியாவில் தமிழ்மொழிப் பாடசாலைகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாயிற்று.

கேள்வி :    தற்போதைய நிலையில் மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது? என சற்று கூற முடியுமா?

பதில் :    கடந்த நூற்றாண்டின் 7ம், 8ம் தசாப்தங்களில் பெற்றோரின் மனோநிலையில் ஏற்பட்ட தாக்கம் மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்தத் தொடங்கியது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைந்த தமிழ்மொழிப் பாடசாலைகளைவிடவும் சகல வசதிகளும் மிக்க தேசிய பாசடாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தொடங்கினார்கள். தேசியப் பாடசாலைகளில் ஆங்கிலமும் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டுவந்தது. இத்தகைய நிலையினால் தமிழ்ப் பாடசாலைகள் பற்றிய உதாசீனப்போக்கு வெளிப்பட்டது. 9ம் தசாப்தங்களில் இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. "தாய்மொழியில் கற்போம்." "தமிழ்ப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவோம்" போன்ற பிரச்சாரங்களை தமிழ் அமைப்புகள் மேற்கொண்டன. இதனால் மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய மக்கள் தமது பிள்ளைகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். தற்போது இந்நிலை மேலும் விரிவடைந்துள்ளது. ஒரு காலத்தில் தேசியப் பாடசாலைகளில் கற்பதை கௌரவமாகக் கருதிய தமிழ் பெற்றோர் இன்று தமிழ்மொழிப் பாடசாலைகளில் கற்பதையும் பெருமையாக எண்ணத் தலைப்பட்டுள்ளனர். இந்நிலை காரணமாக தற்போது பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தின் முழு உதவி பெறாத நிலையில் பல தமிழ்ப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவது இன்று இந்திய சமுதாயத்தின் சொந்தக் கடப்பாடாக விளங்குகின்றது. ஆனால், பொருளாதாரம் வளம் குன்றிய நிலையில் இந்தியச் சமுதாயத்திற்கு இதுவொரு சுமையாகவே அமைந்துள்ளது. அனைத்து தமிழ்ப் பாடசாலைகளும் முழு உதவி பெற்ற பாடசாலைகளாக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பது இந்திய சமுதாயத்தினர் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளுள் மிக முக்கியமானதொன்றாகும்.

கேள்வி :    மலேசியாவில் இடைநிலைப் பாடசாலைகள் பற்றி சற்று குறிப்பிட முடியுமா?

பதில் :    தேசிய பாடசாலைகளிலும், மாதிரிப் பாடசாலைகளிலும் ஆரம்ப நிலையில் 6ம் ஆண்டுத் தேர்வு தேசிய பரீட்சையாக நடாத்தப்படும். இத்தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இடைநிலைப் பாடசாலையில் தரம் பிரிக்கப்பட்டு மாணவர்கள் அமர்த்தப்படுவர். இடைநிலைப் பாடசாலையில் தேசிய மொழியான மலாய் மொழியிலேயே போதிக்கப்படும். இங்கு பிரதான பாடங்களாக மலாய், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய பாடங்களுடன் புவியியல், நன்நெறி,  பொருளியல், கணக்கியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இடைநிலைப் பாடசாலையில் மூன்றாடுகள் முடிவில் பி.எம்.ஆர். எனப்படும் தேசியத் தேர்வு நடைபெறும். இத்தேர்வில் மாணவர்கள் கலை, விஞ்ஞானம் என்ற பிரிவுகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.

கேள்வி : மலேசியாவில் முழு ஆசிரமப் பாடசாலைகளும் சில செயல்படுவதாக அறிய முடிகின்றது. இது பற்றி சற்று விளக்கம் தருவீர்களா?

பதில் :    பி.எம்.ஆர். தேர்வில் 'சிறந்த' தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை முழுமையாக அரசாங்கச் செலவில் ஆசிரமங்களில் (விடுதிகளில்) தங்கவைத்து போதிக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 90 வீதத்தினர் மலாய மாணவர்களுக்காகவே இவ்வசதி செய்யப்பட்டுள்ளதென மலாய் அல்லாதவர்களின் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் அமைந்த பாடசாலைகளே முழு ஆசிரமப் பாடசாலைகளென அழைக்கப்படுகின்றன.


கேள்வி : மலேசியாக்கல்வித்திட்டத்தின் கீழ் பி.எம்.ஆர். தேர்வையடுத்து வரக்கூடிய எஸ்.பி.எம். தேர்வு பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில் :    எஸ்.பி.எம். எனப்படும் மலேசிய கல்விச் சான்றிதழ் பரீட்சை  மலேசியாவை பொறுத்தவரையில் மிக முக்கியமான பரீட்சையாகும். (இலங்கையில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை ஒத்தது.) பி.எம்.ஆர். தேர்வுக்குப் பின்னர் இரண்டாண்டுகள் கலைத்துறை விஞ்ஞானத்துறை எனப்பிரிக்கப்படக்கூடிய துறைகளில் மாணவர்கள் பயில்வர். இவ்விரு துறைகளுக்கும் பொதுவான பாடங்களாக மலாய், ஆங்கிலம், கணிதம், வரலாறு, நன்நெறி ஆகிய 5 பாடங்களும் விஞ்ஞானத் துறை மாணவர்களுக்கு மேலதிகமாக பௌதீகவியல், உயிரியல், இரசாயனவியல், மேலதிகக் கணிதம் ஆகியனவும் கலைத்துறையில் மாணவர்களுக்கு துறைசார்ந்து தேர்ந்தெடுக்கப்படும் 4 பாடங்களும் கற்பிக்கப்படும். எஸ்.பி.எம். தேசிய பரீட்சையில் 9 பாடங்களில் தோற்ற வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் விரும்புமிடத்து அவர்களின் சுயவிருப்பின்படி மேலதிக பாடங்களையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (இந்த விருப்பத்துக்குரிய பாடங்களாக மாணவர்கள் தங்கள் தாய்மொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கத்தில் உள்ளது. குறிப்பாக இந்திய மாணவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியம் என பாடங்களில் தோற்றிவருகின்றனர்.)  

கேள்வி : எஸ்.பி.எம். தேர்வின் பெறுபேற்றின் பின்பு மாணவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?

பதில் : எஸ்.பி.எம். தேர்வே மலேசிய மாணவனொருவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கிய தேர்வாக அமைகின்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் மற்ற உயர்கல்விக் கூடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதிபெறுகின்றனர். மேலும், மாணவர்களின் புலமைப்பரிசில் உபகார வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையையும் வழங்குகின்றது. இவ்வாறான நிலை காணப்பட்டாலும்கூட, இத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மலாய் இனத்தவரல்லாத மலேசிய பெற்றோரின் மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும் இதனால் அவர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய  ஒரு நிலையினையும் உருவாக்கிவிடுகின்றது.

பகுதி 1 முடிவுற்றது

பகுதி 2

இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் உயர்கல்வி பெறும் வாய்ப்பு. மலேசியப் பேராசிரியர் க. ஹரிகிருட்டிணன் உடனான நேர்காணல் - நேர்காணல் புன்னியாமீன்

தொடர்ச்சி


கேள்வி: எஸ்.பி.எம். தேர்வு முடிவு மலாய் இனத்தவரல்லாத, மலேசிய பெற்றோரின் மனவுளைச்சல்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையையும் இதனால் அவர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிலையினையும் உருவாக்கிவருகின்றது என தெரிவித்தீர்கள். ஒரு தேர்வு முடிவு எந்த அடிப்படையில் இந்நிலையை உருவாக்குமென குறிப்பிட முடியுமா?

பதில் :  எஸ்.பி.எம். தேர்வு முடிவு மலேசிய மாணவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் ஒரு முக்கியமான தேர்வு முடிவாகும். ஏனெனில், இத்தேர்வின் அடிப்படையிலேயே உயர்கல்விக்காக வேண்டி சர்வதேச மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் வாய்ப்பும் ஏனைய தொழில்துறைப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் அவற்றிற்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொள்வதற்குமான அடிப்படையும் கிடைக்கின்றது. ஆனால், நடைமுறையில் இன விகிதாசார அடிப்படையில் மேற்படி வாய்ப்புகளை மாணவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதினால் மலாய் இனத்தவர்கள் தவிர ஏனைய சிறுபான்மையினத்தவர்கள் பெருமளவிற்குப் பாதிப்படையக்கூடிய நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றது. மலேசியாவில் மலாய் இனத்தவர்களில் 55 வீதத்தினரும் சீனர்கள் 32 வீதத்தினரும் இந்தியர்கள் 8 வீதத்தினரும் வாழ்கின்றனர். இன விகிதாசார அடிப்படையில் மேற்படி நியமனங்களை வழங்கினால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக விகிதாசார நிலைப் பேணப்படாமல் மலாய் இனத்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதும் மேலும் அவர்களுக்கான சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவதும் அடிப்படைப் பிரச்சினை உருவாவதற்கு காரணமாக அமைகின்றது.

கேள்வி : இங்கு ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டீர்கள். இவை பற்றியும் மலேசியாவில் பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம் இவைகள் பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில் : 1960களில் மலேசியாவில் வாழும் சீன சமூகம் பொருளாதார வளம் மிகுந்த சமுதாயமாகவும் மற்ற இனங்கள் குறிப்பாக பெரும்பான்மை மலாய் இனத்தவர்கள் பொருளாதார வளம் குன்றியவர்களாகவும் இருந்தார்கள். மலேசியாவில் இத்தகைய பின்னணியில் 1967 மே 13ம் திகதி ஓர் இனக்கலவரம் தோன்றியது. இதையடுத்து மலாய் இனத்தவரின் பொருளாதார வளத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதோர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பூமிபுத்ரா எனும்போது மலாய் இனத்தவர்களும் கிழக்கு மலேசியாவில் வாழும் இனத்தவர்களுமாக 65 வீதத்தினராக இன்று காணப்படுகின்றனர். பூமிபுத்ரா அல்லாதோர் எனும்போது பொதுவாக சீன இனத்தவரும் இந்திய இனத்தவரும் உள்ளடங்குவர். இப்புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் 1970லிருந்து 1990 வரை 20 ஆண்டுகளுக்கு பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளத்தில் 30வீத இலக்கை மலாயர்கள் அடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. ஆனாலும் இத்திட்டம் இன்றும் தொடர்ந்தே வருகின்றது. தங்கள் கேள்விபடி எஸ்.பி.எம். பரீட்சை முடிவுகளையடுத்து சிறப்பு நிலை எனக் குறிப்பிடும்போது அதனை பின்வருமாறு தெளிவுபடுத்தலாம். எஸ்.பி.எம். பரீட்சையில் மிகச் சிறந்த தேர்ச்சியடைந்த பெரும்பாலான பூமிபுத்ரா மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் விரும்பிய துறையில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படுகின்றது. அந்த வாய்ப்பினைப் பெறாத மற்ற பூமிபுத்ரா மாணவர்களுக்கு உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் மெட்ரிக்லேசன் எனப்படும் ஓராண்டு கல்வியினை மேற்கொண்டு அதன் பின் பல்கலைக்கழகத்தில் விரும்பிய துறையில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றது. வசதியுள்ள எனைய இன மாணவர்கள் தனியார் பல்கலைக்கழங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ பவுன்டேசன் எனும் ஓராண்டு கல்வியை மேற்கொண்டு விரும்பிய துறையில் பயில்கிறார்கள். மேற்படி இரு வழிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் இரண்டாண்டுகளுக்கான எஸ்.டி.பி.எம். எனப்படும் உயர்தராதர சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றுவர். இந்தப் பரீட்சையில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பல்கலைக்கழத்தில் விரும்பிய துறையில் இணைந்து பயில முடியும்.

கேள்வி: இங்கு பல்கலைக்கழக துறை சார்ந்த கல்விக்காக மெட்ரிக்லேசன் பவுன்டேசன் அல்லது உயர்தராதர சான்றிதழ் பரீட்சை எனும் 3 பரீட்சைகளை குறிப்பிட்டீர்கள். இம்  மூன்று பரீட்சைகளும் ஒரே தராதரத்தில் உள்ளவையா?

பதில்: இல்லை என்பதே பெரும்பாலான புத்திஜீவிகளின் கருத்து. ஈராண்டுகளைக் கொண்ட எஸ்.டி.பி.எம் எனும் கல்விமுறை மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் மெட்ரிக்லேசன் தேர்வு முறை மிகவும் எளிமையானது. இரண்டு தேர்வு முறைகளும் வேறாகவே நடைபெறும். ஆனால், பல்கலைக்கழகத் துறை சார்ந்த விண்ணப்பத்திற்கு புள்ளிகளை ஒப்பிடும்போது இரண்டு பரீட்சைகளிலும் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே வாய்ப்பு வழங்கப்படும். இதனால் எளிமையான மெட்ரிக்லேசன் தேர்வினை செய்த பூமிபுத்ரா மாணவனுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற முடிவதனால் அம்மாணவன் மிக எளிதாக வைத்தியம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இங்கு பல்கலைக்கழக நுழைவுக்கு ஒரே நுழைவுத் தேர்வினைக் கொள்ள வேண்டுமென்பதே மலேசியக் கல்விமான்களின் இன்றைய கோரிக்கையாகும்.

கேள்வி : இத்தேர்வு முறையில் பெற்றோர்களின் மனோகிலேசங்கள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தீர்கள். இதைப் பற்றி சற்று விளக்கிக் கூற முடியுமா?

பதில்: இத்தகைய மனக் கிலேசங்களுக்கு கூடுதலாக இந்தியப் பெற்றோரே உட்படுகின்றனர். தங்கள் பிள்ளைகள் அதியுயர் பெறுபேறுகளைப் பெற்றிருந்த போதிலும் புலமைப்பரிசில்களோ அல்லது மெட்ரிக்லேசன் பாடநெறிக்கான வாய்ப்புகளோ வழங்கப்படாது புறக்கணிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாகவே பெரும்பாலான இந்தியப் பெற்றோர் மனஉளைச்சல்கள் மற்றும் மனக்கிலேசங்களுக்கும் உட்படுகின்றனர். இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் பூமிபுத்ராக்கள் அவர்களுக்கான 'சிறப்பு' வாய்ப்புகளைப் பெற்று முன்னுரிமைப் பெற்றுவிடுவர். சீன மாணவர்கள் அவர்களிடம் காணப்படக்கூடிய பொருளாதார வளத்தைப் பயன்படுத்தி தனியார் பல்கலைக்கழங்களிலும் சர்வதேச பல்கலைக்கழங்களிலும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வர். அதேநேரம், பொருளாதார வளம் குன்றிய பெரும்பாலான இந்திய வம்சாவழியினரால் எத்தகைய வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளப்பட முடியாமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவர். அத்துடன், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக தங்களிடமுள்ள வாழ்நாள் சேமிப்பை செலவழித்தும் சொத்துக்களை விற்குமளவிற்கும் தள்ளப்படுகின்றார்கள். மிகச் சிறந்த தேர்ச்சி பெறாத சக மலாய் நண்பன் புலமைப்பரிசில் பெற்று உயர்கல்வியைத் தொடருவதை அவதானிக்கும் இம்மாணவன் பெரிதும் மானசீகமாகப் பாதிக்கப்பட்டு கல்வியில் ஒரு விரக்தி நிலையையும் அடைகின்றான்.

கேள்வி: கலாநிதி ஹரிகிருட்டிணன் அவர்களே! பல்கலைக்கழக அனுமதிக்கு மலேசியாவில் காணப்படும் முறையைப் போல இலங்கையில் இரு பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை. இலங்கையில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கூடிய சித்தியைப் பெறக்கூடிய மாணவர்கள் இசர்ட் (Z) புள்ளியின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவர். மலேசியாவில் காணப்படக்கூடிய மேற்படி தேர்வு முறையை இல்லாமல் செய்வதற்கான யாதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

பதில்: நான் அறிந்த வரை வேறு எந்தவொரு நாட்டுக் கல்விமுறையிலும் இத்தகைய முறைமை பேணப்படுவதில்லை. மலேசியாவில் காணப்படும் இத்தகைய கல்வி சமச்சீரற்ற தன்மையை இல்லாமல் செய்வதற்கான  வேண்டி பூமிபுத்ரா அல்லாதார் இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களுள் 2007ம் ஆண்டு நவம்பர் 25 இல் இடம்பெற்ற இந்திய வம்சாவழியினரின் அணித்திரளலான ஹின்ட்ராப் பேரணி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இந்தப் பேரணியின்போது சுமார் 2 இலட்சம் மக்கள் தலைநகர் கோலாலம்பூரில் திரண்டனர். மலேசிய வரலாற்றில் இப்போராட்டம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இப்பேரணியினரால் மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய சமச்சீர் தன்மையை உருவாக்குவதற்கான பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதே போன்று சீன சமூகத்தினரின் பல அமைப்புகளும் மலேசிய சமச்சீர் தன்மையை வேண்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மலேசிய அரசாங்கமும் மேற்படி நெருக்கடிகளினால் மேற்படி திட்டங்களை நோக்கி நகர்ந்துவருவது ஓரளவிற்கு அவதானிக்க முடிகின்றது.

கேள்வி: மலேசியாவில் பல்கலைக்கழக கட்டமைப்பு பற்றி சற்று கூற முடியுமா?

பதில் : மலேசியாவில் தற்போது 20 தேசிய பல்கலைக்கழங்கள் உள்ளன. இதுதவிர மேலும் ஏறக்குறைய 100 தனியார் கல்லூரிகள்/ பல்கலைக்கழங்கள் காணப்படுகின்றன. 04 சர்வதேச பல்கலைக்கழங்கள் தங்களது கிளைகளை மலேசியாவில் நிறுவியுள்ளன. அதில் ஒன்று தான் நான் கற்பித்துவரும் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகம். மேற்குறிப்பிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மலேசியாவின் உயர்கல்வி அமைச்சகத்தினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவின் கல்வி மையமாக மலேசியாவை மாற்றுவதே  மலேசியாவின் தற்போதைய கொள்கையாகவும் உள்ளது.

கேள்வி: மலேசிய பல்கலைக்கழங்களில் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் கல்வித் தராதரம் எந்தடிப்படையில் அமைந்துள்ளது?

பதில்: மிகச் சிறப்பாக உள்ளதென்றே கருதுகின்றேன். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமக்கென்று ஒரு கல்வித்திட்டத்தை வகுத்துள்ளது. இதன் தராதரத்தை 2007 ஆண்டு  சட்டத்திருத்த மசோதாப்படி அமைக்கப்பட்ட மலேசிய கல்வி நிர்ணய நிறுவனம் Malaysian Qualifications Agency (MQA)  பராமரிக்கின்றது. மலேசியாவிலுள்ள தேசிய பல்கலைக்கழகங்கள் மலேசிய அரசாங்கத்தால் நேரடியாக நிருவகிக்கப்படுகின்றன. அங்குள்ள தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழங்கள் மாணவர்களின் தவணைக்கட்டணங்களைக்கொண்டு தனியார் நிறுவனங்களினால் பராமரிக்கப்படுகின்றன. இத்தகைய பல்கலைக்கழக அமைப்புகளுக்கு ஆய்வுப் பணிகளுக்கென அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. சில தனியார் நிறுவனங்களும் ஆய்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகின்றன.

கேள்வி: மலேசியாவில் வெளிநாட்டில் பிரபல்யம்பெற்ற பல்கலைக்கழகங்களில் கிளைகள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன என அறிகின்றோம். இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில் : இதுவரை நான்கு பல்கலைக்கழங்கள் அவ்வாறு கிளை வளாகங்களை அமைத்துள்ளன. பிரித்தானியாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகமும் அவுஸ்திரேலியாவில் பிரபல்ய பல்கலைக்கழங்களான மோனாஸ், சுவின்பேர்ன் மற்றும் கேர்ட்டின் பல்கலைக்கழகங்களும் இப்போதைக்கு தங்கள் கிளைகளை மலேசியாவில் நிறுவியுள்ளன. மேலும் சில பல்கலைக்கழங்கள் அங்கு தங்களது கிளைகளை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.

கேள்வி: பேராசிரியர் அவர்களே! தாங்களும் இத்தகைய பலக்லைக்கழகங்களில் ஒன்றான நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றீர்கள். பிரித்தானியாவிலுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்துக்கும் மலேசியாவில் அமைக்கப்பட்டுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் பற்றியும், இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்ப்பு மற்றும் கல்வித் தரங்கள் பற்றியும் கற்கைநெறிகள் பற்றியும் விளக்கம் தர முடியுமா?

பதில்: 2000ஆம் ஆண்டில் பிரித்தானிய  நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக கிளையாக மலேசியா நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில நூறு மாணவர்களைக் கொண்டிருந்த இப்பல்கலைக்கழகம் தற்போது 4000 மாணவர்களை உள்வாங்கியுள்ளது. பிரித்தானிய  நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படும் அதே பாடத்திட்டங்களே இங்கும் போதிக்கப்பட்டுவருகின்றன. சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமானது பிரித்தானிய  நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக பட்டத்திற்கு சமனானது. சர்வதேச ரீதியில் ஏற்புடையது. தற்போது இவ்வளாகத்தில் பிரதானமாக பொறியியல்துறை, வணிகவியல்துறை, கல்வியியல்துறை, மருந்தியல்துறை, உயிரியல்துறை போன்ற பாடநெறிகள் காணப்படுகின்றன. அத்துடன் பட்டப்பின் படிப்பு சார்ந்த துறைகளும் குறிப்பாக முதுமாணி, கலாநிதி போன்ற கற்கைநெறிகளும் இங்கு அமைந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் மலேசியா மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த  திறமைவாய்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியாற்றிவருகின்றனர். பற்பல ஆய்வுப் பணிகளும் இப்பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரித்தானிய நோட்டிங்ஹாம் பல்கலைக்கழக நிர்வாகத்துறையினரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகின்றது.

கேள்வி : இத்தகைய சர்வதேச வளாகங்கள் மலேசியாவில் அமைக்கப்படுவதற்கான பிரதான காரணம் யாதென நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் : தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாணவனால் பிரித்தானியாச் சென்று உயர்கல்வியை கற்கும்போது ஏற்படும் செலவுகள் அதிகமானதாகும். மேலும், வீசாக்களைப் பெறுவதில் பல்வேறுபட்ட கடின வழிமுறைகளை பிரித்தானியா அரசு கடைபிடித்து வருவதினால் இப்பல்கலைக்கழங்களில் இலகுவாக அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால்ää மலேசியாவில் இத்தகைய பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களுக்கு வீசா பிரச்சினைகள் பெருமளவு ஏற்படுவதில்லை. பிரித்தானியாவுடன் ஒப்பீட்டளவில் இங்கு வாழ்க்கைச் செலவு குறைவாகக் காணப்படுவதினால் கற்கை செலவுகளும் குறைவாகவே உள்ளது. அத்துடன், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருப்பர். சர்வதேச மாணவர்களுக்கு மொழிப் பிரச்சினை ஒரு பிரச்சினையாக இங்கு அமைவதில்லை. அத்துடன்ää மலேசியா இடைவெப்ப வலயத்தில் அமைந்துள்ள நாடாகையால் காலநிலையில் பாரிய மாற்றங்களைக் கொண்டிருப்பதில்லை. இது போன்ற காரணஙகளைக் குறிப்பிடலாம்.

கேள்வி : இலங்கை மாணவர்கள் தற்போது மலேசியா சென்று பல துறைகளிலும் கல்வி கற்று வருகின்றனர். இலங்கை மாணவர்களுக்கு மலேசியாவில் கற்பதற்கான வாய்ப்புகள் எத்தகைய துறைகளில் காணப்படுகின்றன என்பதை சற்று விளக்க முடியுமா?

பதில் : நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் எனது மாணவர்களுள் இலங்கை மாணவர்களும் அடங்குவர். ஆண்டுதோறும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. எங்களது நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் உட்பட மலேசியாவிலுள்ள மற்ற சர்வதேச பல்லைக்கழகங்களிலும் இம்மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிகிறேன். குறிப்பாக நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் அனைத்து கிளைகளிலும் அவர்கள் பயின்று வருகின்றார்கள். இது தவிர வணிகவியல் துறைகளிலும் பயின்று வருகின்றார்கள். மேலும்ää இலங்கை மாணவர்கள் விரும்பும் துறையில் கற்கும் வசதிகள் இங்குள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி : மலேசியா பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் கற்பதற்கு எத்தகைய கல்வித் தகைமை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது?

பதில் : இலங்கையில் க.பொ.த. சாதாரணதரம்ää உயர்தரம் மற்றும் அதற்கு இணையான ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் உள்ள மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகங்களில் இணைந்து கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைந்து கற்பதாயின் முதலில் அப்பல்கலைக்கழகத்தில் பவுன்டேசன் எனும் ஓராண்டு கல்வியைக் கற்று தேர்ச்சியடைய வேண்டும். இப்பவுன்டேசன் கல்வி நிலையானது இலங்கையில் ஈராண்டுகள் பயிலும் க.பொ.த. உயர்தர கற்கை நெறிக்கு ஈடானதாகும். பவுண்டேசன் தேர்வின் தேர்ச்சிக்கேற்பவும் அல்லது இலங்கையில் க.பொ.த. உயர்தர தேர்வின் சித்தித் தராதரங்களுக்கேற்பவும் அவர்கள் எத்தகைய பாடநெறியினை தொடரலாம் என தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு எத்தகைய பாடநெறியைத் தொடர்ந்தாலும் ஆங்கில அறிவு பிரதானமாகக் கொள்ளப்படுகின்றது. சர்வதேச மாணவர்களுக்கு சகல விரிவுரைகளும் ஆங்கிலமொழி மூலமாகவே வழங்கப்படுகின்றன. இலங்கை மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆங்கில அறிவு பெரும் பிரச்சினையாக இருக்காது என்று கருதலாம்.

கேள்வி : மலேசியாவில் பட்டப்பின் படிப்பு சம்பந்தமான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?

பதில் : மலேசியா பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெறும் மாணவர்களுக்கு தொடர்ந்து பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றன. மிகச் சிறந்த முறையில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் மூலமாகவும், பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகளை இலங்கை மாணவர்கள் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

மிக்கநன்றி பேராசிரியர் ஹரிக்கிருட்டிணன் அவர்களே! மலேசியாக் கல்வி நிலை தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தினை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளீர்கள். இலங்கை மாணவர்கள் மலேசியாவில் கற்க விரும்புமிடத்து அவை குறித்த கற்கை நெறி விபரங்களை இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இத்தகைய நேர்காணலில் கலந்துகொண்ட தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி. வணக்கம்.

இப் பேட்டி இலங்கையில் நமது தூது பத்திரிகையில் செப்டெம்பர் 18. 2011, செப்டெம்பர் 25. 2011 திகதிகளில் பிரசுரமானது.

Monday 26 September 2011

இலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த ஜோ அபேவிக்கிரம - புன்னியாமீன்

பல்வேறுபட்ட குணசித்திர பாத்திரங்களில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடத்தைப் பெற்றுள்ள சிங்கள திரைப்பட நடிகர் ஜோ அபேவிக்கிரம கடந்த செப்டம்பர் 21ம் திகதி காலமானார். இவர் காலமாகும்போது இவரது வயது 84 ஆகும். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்கையில் உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

ஜோ அபேவிக்கிரம இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் லேலோபிட்டிய எனும் பிந்தங்கிய கிராமமொன்றில் 1927 ஜுன் மாதம் 22ம் திகதி பிறந்தார். இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். திப்பித்திகல கலவன் பாடசாலை மற்றும் இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

1940 களில் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்த இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். இவரால் நடிக்கப்பட்ட முதல் திரைப்படம் தேவசுந்தரி என்பதாகும், இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவரால் நடிக்கப்பட்ட மற்றுமொரு திரைப்படமான சரதம 1957இல் திரையிடப்பட்டது. எனவே ரசிகர்களுக்கு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். பின்பு 70களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் புகழ் பெற்றார்.

ஆரம்பகாலங்களில் இவர் நகைச்சுவை நடிகராக அறிமுகமானதினால் நகைச்சுவை நடிகர் என்றடிப்படையிலே இவர் ரசிகர்களின் மனதிலே இடம்பிடித்துக் கொண்டார். 1960களின் மத்தியில் குணசித்திர நடிகராக இவர் நடிக்கத் தலைப்பட்டாலும் அவை ஆரம்பத்தில் தோல்வியிலேயே முடிந்தன. ஏனெனில், நகைச்சுவைப் பாத்திரங்களிலேயே ரசிகர்கள் இவரை அதிகமாக எதிர்பார்த்தனர். 1970களில் துன்மங்ஹந்திய, வெலிகதர, தேஸநிசா, பம்பருஎவித் போன்ற திரைப்படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்

இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது இறுதிக்காலம் வரை பலதரப்பட்ட ஒன்றுக்கொன்று வித்தியாசமான குணசித்திர பாத்திரங்களில் தோன்றியமை விசேட அம்சமாகும். அதிக முக அலங்காரங்கள் இல்லாமல் இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை. இவரின் நடிப்பும்ää வாழ்வும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும். தான் இறக்கும்வரை கலைத்துறையை மாத்திரமே நேசித்துவந்த இவர் ஏனைய துறைகளை அதிகமாக நேசிக்கவில்லை.

இலங்கையில் அண்மைக்காலங்களாக திரைப்படத்துறையில் ஓரளவு பிரபல்யம் அடைந்ததும் அரசியலில் ஈடுபட்டுவரும் கலாசாரம் தலைதூக்கியுள்ள இக்காலகட்டத்தில் இவருக்கும் பலவித அரசியல் அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை செவிமடுக்காது தான் இறக்கும்வரை கலைஞனாகவே வாழ வேண்டும் என்ற உயர் இலட்சியத்தில் வாழ்ந்து அந்த இலட்சியத்துடனேயே மரணித்தார்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் அரசியல் ஈடுபாட்டிற்கு திரைப்பட ஈடுபாடு ஒரு முக்கியமான தகுதியாக அண்மைக்காலங்களில் கருதப்படுகின்றது. இந்திய மக்கள் திரைப்படங்களில் நடிகர்களின் நடத்தைகள் செயல்பாடுகளை வைத்தே அவர்களை அரசியலில் ஈடுபட வைக்கின்றனர். இலங்கையில் ஒப்பீட்டளவில் இந்நிலை குறைவாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக்காலங்களில் திரைப்பட மற்றும் விளையாட்டுத்துறை வீரர்களும் பாராளுமன்றம் செல்வதற்கு எத்தனிப்பதை நாம் அவதானிக்கின்றோம். இப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றம் சென்ற பின்பு இவர்களது கலைத்துறை அஸ்தமித்துவிடுகின்றது. எனவே தானோ என்னவோ தான் மரணிக்கும்வரை ஒரு சிறந்த கலைஞனாகவே வாழ விரும்புகின்றேன் என்று ஜோ அபேவிக்கிரம கூறியிருந்தமை அவதானத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

விருதுகள்

இலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். ஜோ அபேவிக்கிரம 11 தடவைகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

1965 சரசவிய விருது (திரைப்படம் - கெடவரயோ)

1966 ஜனரஞ்ச மற்றும் சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சாரவிட)

1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)

1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)

1986 சரசவிய உயர் விருது

1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மல்தெனியோ சிமியோன்)

1991 சிறந்த துணை நடிகர் (திரைப்படம் - பாலம யட்ட)

1992 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - கொலு முகுதே குனாட்டுவ)

1993 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - உமயாங்கனா)

1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - வித்துசித்துவம்)

2002 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - (புர ஹந்த கலுவர)

ஜனாதிபதி விருது

திரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும்ää திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக சனாதிபதி விருதினை இவர் 7 தடவைகள் பெற்றுள்ளார்.

1980 சிறந்த துணை நடிகர் விருது (திரைப்படம் - வசந்தயே தவசக்)

1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சிறிபோ அய்யா)

1982 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)

1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)

1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பூஜா)

1996 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - லொக்கு துவ)

1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - விது சிதுவம்)

சர்வதேச விருது

1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.

ஜோ அபேவிக்கிரம இதுவரை நடித்து வெளிவந்த திரைப்படங்கள் வருமாறு

சரதம (1957), அவிஸ்வாசய  (1959),  சிறி 296  (1959),  கெஹனு கீத (1959), சிறிமலீ (1959),

நாலங்கன (1960), பிரிமியக் நிசா (1960), தருவா காகேத (1961), ரன்முத்து துவ (1962),    தேவ சுந்தரி (1962), வென ஸ்வர்கயக் குமடத (1963),  தீபசிகா (1963), ஹெட்ட பிரமாத வெடி (1964), கெட்டவரயோ (1964), சுபசரண செமசித (1964), சிதக மஹிம (1964), சண்டியா (1965), சதுட்டு கந்துலு (1965), சாரவிட (1965), ஹிதட ஹித (1965), அல்லபு கெதர (1965), சத பனஹ (1965),  சுவீப் டிக்கட் (1965), லந்தக மஹிம (1966), செங்கவுன செவனெல்ல (1966), மஹதென முத்தா (1966), செனசும கொதனத (1966), எதுல்வீம தஹனம் (1966), சீகிரி காசியப்பா (1966), கபட்டிகம (1966), பரசது மல் (1966), சொருங்கெத் சொரு (1967), மணமாலயோ (1967), தரு துக (1967), செந்து கந்துலு (1967), புஞ்சி பபா (1968), அக்கா நகோ (1968), எமதிகம முதலாளி (1968), தஹசக் சிதுவிலி (1968), ஆதரவந்தயோ (1968), அட்டவெனி புதுமய (1968), செனேஹச (1969), ஒப நெதினம் (1969), நாரிலதா (1969), ஹரி மக (1969), படுத் எக்கா ஹொரு (1969), உதும் ஸ்த்ரீ (1969), பரிஸ்சம் வென்ன (1969), பரா வளலு (1969), பெஞ்சா(1969), ரோமியோ ஜுலியட் கதாவ (1969),

லக்செத கொடிய (1970), தேவத்தா (1970), துன் மங் ஹந்திய (1970), சீயே நொட்டுவ (1971), வெலிகதர (1971), ஹாரலக்சய (1972), சந்தர் த பிலக் லெபோர்ட் ஒப் சிலோன் (1972), வீதுருகெவல் (1973), மாத்தர ஆச்சி (1973), துசாரா (1973), சதஹட்டம ஒப மகே (1973), கல்யாணி கங்கா (1974), ஒன்ன பாபோ பில்லோ எனவா (1974), நியகலா மல் (1974), ரத்தரன் அம்மா (1975), தரங்கா (1975), சூரயா சூரயாமய் (1975), சிகுருலியா (1975), சாதனா (1975), கலு திய தஹரா (1975), தேச நிசா (1975), வாசனா (1975), மடோல் தூவ (1976), கொலம்ப சன்னிய (1976), த கோட் கிங் (1976), உன்னத் தஹாய் மலத் தஹாய் (1976), ஒன்ன மாமே கெல்லா பெனப்பி (1976), ஹிதுவொத் ஹிதுவாமய் (1977), யலி இபதி (1977), சிறிபால ஹா ரென்மெனிகா    (1977), கெஹனு லமய் (1978), சிறிபதுல (1978), செலினாகே வளவ்வ (1978), சாரா (1978), வீர புரான் அப்பு  (1978), பம்பரு அவித் (1978), சல்லி(1978), குமர குமரியோ (1978), சந்தவட்ட ரன்தரு (1978), ஜீவன கந்துலு (1979), ஹிங்கன கொல்லா (1979), ரஜ கொல்லோ (1979), வசந்தயே தவசக் (1979), விசி ஹதர பெய (1979), ஹரி புதுமய் (1979),

டக் டிக் டுக் (1980), ஜோடு வளலு (1980), எக்டெம் கே (1980), சீதா (1980), ஆதர ரத்னே (1980), சிறிபோ அய்யா(1980), பம்பர பஹச (1980), தண்டு மொனரா (1980), முவன் பெலஸ்ஸ 2 (1980), பர திகே (1980), சிங்ஹபாகு (1981),  கோலம் காரயோ (1981),  தரங்க (1981),  பத்தேகம (1981),  சயுரு தெரே (1981),  சொல்தாது உன்னஹே (1981),  சத்தர பெர நிமிதி (1981), பின்ஹாமி (1981),  சதர திகந்தய (1981),   ரேன கிரவய் (1981),  வதுர கரத்தய (1982), மேஜர் சேர் (1982), கெலே மல் (1982), மலட நெஎன பம்பரு (1982), ரேல் பார (1982), கடவுனு பொரந்துவ (1982), ரன் மினி முத்து (1983), சந்தமாலி (1983), சுமித்ரோ (1983), நிலியகட பெம் கலெமி (1983), சமுகனிமி மா செமியனி (1983), சுபோதா (1983), முவன் பெலஸ்ஸ  3 (1983), மொனர தென்ன 2 (1983), பீட்டர் ஒப் த எலிபன்ட்ஸ் (1983), முகுது லிஹினி (1983), சிராணி (1984), தாத்தாய் புதாய் (1984), பொடி ராலாஹாமி  (1984),  சசரா சேதனா (1984), வடுல (1984), ஹிம கதர (1984), சகோதாரியககே கதாவ (1984),  சுத்திலாகே கதாவ (1985), மல்தெனிய சீமன் (1986), தெவ் துவ (1986), பூஜா  (1986) ஆதர ஹசுன (1986), விராகய (1987), ரச ரஹசக் (1988), அங்குலிமாலா (1988)

பாலம யட (1990), கொலு முகுதே குனாட்டுவக் (1990), செரியோ டொக்டர் (1991) ஸ்திரீ (1991), உமயங்கனா (1992)  அம்பு செமியோ (1994), அவரகிர (1994), ச்செரியோ கப்டன் (1996), ஹித்த ஹொந்த கெஹெனியக் (1996), லொகு துவ (1996), செரியோ டார்லிங் (1996), பிது சிதுவம் (1996), சுது அக்கா  (1996), விமுக்தி (1998),

சரோஜா (2000), புர ஹந்த கலுவர (2001), அஸ்வசுவம (2001), தீவாரி (2006).

Sunday 21 August 2011

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் - புன்னியாமீன்

சில சர்வதேச நினைவு தினங்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவதைப்போல சகல நினைவு தினங்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. குறித்த நினைவு தினங்களின் முக்கியத்துவம் நவீன கால சமூக வாழ்வில் உணரப்படாமையினால் அவை பற்றி விரிவான விளக்கங்கள் மக்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வகையில் அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினத்தையும் குறிப்பிட முடியும்.


ஆனால் மனிதகுல வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை  ஒழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. குறிப்பாக தொழில்நுட்பத்திலும், நவீன தொலைத்தொடர்பு வசதிகளிலும் முன்னேறியுள்ள இந்த மிலேனிய யுகத்தில் அக்கரை படிந்த வடுக்களை ஞாபகமூட்டப்படுவதினூடாக பல படிப்பினைகளைப் பெறக்கூடியதாக உள்ளதென்பதை மறுக்கமுடியாது. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றைய மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மைக்கு அடிப்படையை இட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

சர்வதேச ரீதியில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஞாபகமூட்டுவதற்கான தினம் 1998 முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. 23 ஆகஸ்ட்  1998 இல் ஹெய்டி நாட்டிலும், 23 ஆகஸ்ட் 1999 இல் செனகல் நாட்டிலும் இத்தினத்தின் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இத்தினத்தை நினைவு கூருகின்றன.
அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பை ஞாபகமூட்டுவதற்குமான சர்வதேச தினம் யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத்  தொடரில் (29 C/40) பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் ஜுலை 29. 1998ம் திகதி இடப்பட்ட CL/3494  இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைச்சர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும் island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிமைமுறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிறமனிதர்கள் பிடித்து வைத்து, அல்லது அவர்களை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலாத்காரமாக வேலையை வாங்கும் முறையாகும். இம்முறை வரலாற்றுக் காலம்முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மதிக்கப்பட்டனர். வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகையிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.
ஆபிரிக்க – அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எல்லா இனங்களும், எல்லா கலாசாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் மானிய முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் மாற்றினார்கள். உலகில் காணப்பட்ட அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்புநோக்கும்போது ஐரோப்பியர்களின் அடிமை முறையே மிகவும் கேவலமான முறையாக வர்ணிக்கப்படுகின்றது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்துள்ளது. சுமார் 60 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும்,  துயரத்தாலும் இறந்துள்ளனர் என வரலாற்றுக் கணிப்புகள் சான்று பகர்கின்றன.   

அடிமைமுறை வரலாற்றினை நோக்குமிடத்து பண்டையக் காலங்களில் இனங்களிடையே ஏற்பட்ட யுத்தங்களில்; தோல்வியுற்றவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர் எனக்கூறப்படுகிறது. இங்கு பெண்களும், குழந்தைகளும் கூட அடிமைகளாக்கப்பட்டனர். அடிமைமுறை மொஸப்பத்தோமிய நீதிமுறைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமூகவழக்காக காணமுடிகின்றது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் இச்சைக்கு உட்படுத்துவதும் பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் ஒரு பண்பாக உள்ளது. அப்படி ஏற்பட்ட அடிமைகள் பெரிய இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அல்லது பிரபுக்கள் வீட்டில் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டனர் அல்லது தாதுப்பொருள் சுரங்கங்களிலும், மற்ற உயிர் ஆபத்து நிறைந்த வேலைகளிலும் பயன்படுத்தப் பட்டனர். பல புராதன சமூகங்களில் “சுதந்திர” மனிதர்களை விட அடிமைகளே அதிகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அடிமைமுறையின் முக்கியமான காரணம் பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆசையுமே. இவை மத ரீதியான காரணங்களல்ல, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடகாலங்களாக நீடித்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

தற்போது கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும்போது அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது. புராதன எகிப்தியர் யுத்தங்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப் படுத்தினர். இங்கு அடிமைகள் முதலில் அரசர் “பாரோ”விற்க்கு தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசளிக்கலாம். 3ம் துத்மாஸ் (கிமு 1479-1425),  2வது ரமாசீஸ் (கிமு 1279-1213) போன்ற பாரோக்கள் தங்கள் கல்வெட்டுகளில் கனான் பிரதேசங்களில் தங்கள் படை தாக்கியபோது எத்தனை,  எப்படிப் பட்ட எதிரிகளை கொன்றும், கைதிகளாக்கியும் ஆட்கொண்டனர் என்று தெரிவிக்கிறனர். உயிர்போகும் வரை கட்டாய வேலையில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

யூத பிதாமகன் மோசஸ் காலத்தில்தான் யூதமக்கள் விடுதலை பெற்று தங்கள் நாட்டிற்க்கு திரும்பினர் என்றும், சில அடிமைகள் தங்கள் முயற்சியாலும், ஆற்றலாலும், அதிர்ஷ்டத்தாலும் நல்ல பதவிகளை அடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிடும்போது,  எகிப்திய அடிமைகள் ஒப்பீட்டளவில் சுமாராக  நடத்தப்பட்டிருக்கலாம்; என எண்ணத் தோன்றுகிறது.

புராதன கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததாகவும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்க தொழிலாளர்களாகவும் ஊழியம் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது. இந்த அடிமைகள் பிறப்பினாலோ, (அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்ற அடிப்படையில்) சந்தையில் வாங்கப்பட்டவராகவோ, போர் கைதிகளாகவோ இருக்கலாம். உதாரணமாக ஸ்பார்டாவின் கையின் தோல்வியுற்ற வீரர்கள் சைராகூஸ் சுரங்கங்களில் அடிமையாக வேலை செய்தனர். மற்ற இடங்களிலிருந்து கடத்தப்பட்ட நபர்களும் அடிமைகளாயினர்.
ஒரு அடிமையின் விலை அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, ‘அடிமைத் தனம்”, இவற்றை பொருத்து தீர்மானிக்கப்பட்டது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளை கூட வைத்திருக்கலாம். கிரேக்க அடிமைகள் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்ள கூடாது. ஏஜமானரால் வைக்கப்படும் பெயர்களே இவர்களின் பெயர்களாகும். ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில்; 21,000 சுதந்திர மனிதர்களும், 400,000 அடிமைகளும் இருந்தார்கள் என கணக்கிலிடப்பட்டுள்ளதாக சில ஆதாரக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

கிரேக்க நாகரிகத்தில் அடிமைமுறை பெரும்பங்கு வகித்ததைப் போலவே உரோமர் காலத்;திலும் அடிமை முறை முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது. உரோம சாம்ராச்சிய எழுச்சியுடன் பல்வேறு வெளிநாட்டு யுத்தங்களில் தோற்றுப்போன பல நாட்டினர்; அடிமைகளானர். இதனை தெளிவுபடக் கூறுவதாயின் உரோமர்கள், தங்களைத் தவிர மற்று எல்லா நாட்டவரையும் அடிமையாகினர் என்றால் மிகையாகாது. கி.பி.400 களில் அங்கு  அடிமைமுறை மேலும் தீவிரமாயிற்று. சில ஆய்வுகளின் படி கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 2ம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பர். இங்கு அடிமைகளுக்கு பெயரில்லை, அவர்கள் மணம் செய்யமுடியாது, சொத்துக்களை வைத்திருக்க முடியாது.
உரோமர் கால அடிமைமுறையின் கொடூரங்கள் தாங்காமல், பல அடிமைக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் பல அடிமைகள் முன்னால் போர் வீரர்களாகவும் வாட்டசாட்டமாகவும், பலத்துடன் இருந்துள்ளனர். அக்கலகங்களில் புகழ்பெற்றது கிமு 73-71ல் நடந்த “ஸ்பார்டகஸ்” எழுச்சியாகும்.

புராதன காலத்தில் அரேபிய சாம்ராச்சியங்களிலும் சீன சாம்ராச்சியத்திலும் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏந்தவொரு அடிமை முறையை எடுத்துக் கொண்டாலும்கூட, அதன் பண்புகள், தன்மைகள் ஒன்றாகவே காணப்பட்டன.

பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாக தெரியவில்லை. ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசு10லச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade)

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில் வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள் தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத் தலைவர்களும் உளர்.
அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக் பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்” என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து முதன் முதலில் வடஅமெரிக்காவுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களே. அமெரிக்காவிற்கு வந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு தங்கள் உடைமையாக்கிக்கொண்ட பிறகு அந்த நிலங்களில் உழைக்க அவர்களுக்கு உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களைத் தந்திரமாகப் பிடித்து வந்து ஐரோப்பாவில் அடிமைகளாக விற்பது பரவலாக இருந்து வந்தது. இதைப் பின்பற்றி அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர்களும் ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து அடிமைகளாக விற்கத் தொடங்கினர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து “பெரும் அனர்த்தம்” என்பதாகும்.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் இலாபகரமான வியாபாரமாக விளங்கியது. இதனால் மற்ற நாடுகளும் அடிமை வியாபாரத்தில் போட்டியிட ஆரம்பித்தன. ஊதாரணமாக போர்த்துக்கள், ஸ்பானியர்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆபிரிக்கர்களைக் கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆபிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கினர். அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆபிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தனர். சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தமை போருக்கு வித்திட்டது.
அடிமை வியாபாரம் நடப்பதற்காகவே மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டன. உள்நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் இந்தக் கோட்டைகளில் சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். பின்பு கழுத்திலிருந்து காலுக்குச் சங்கிலி போடப்பட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அடிமையாகச் செல்வதைவிட ஆபிரிக்க மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர்.

உயிர் பிழைத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களிலும் வீடுகளிலும் ஊதியம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடாமலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அமெரிக்காவில் பெரும்பாலான வேலை பருத்தியை பறிப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி இரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதைத் தோன்டிப் போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை இந்த அடிமைகளுக்கு இருந்தது.

அறுவடையின் போது 18 மணி நேரமும், கர்ப்பமான பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
அடிமை முறையிலிருந்து விடுபட முயன்ற சில ஆபிரிக்கர்களுக்கு பிடிபட்டபின் பெரிய தண்டனைகள் காத்திருந்தன. வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவதாகும். இதனால் விடுபட விரும்பிய பலரும்; முயற்சிகளை மேற்கொள்ளாமலே வாழ்க்கை முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.
அடிமைச் சமூகத்தில் தற்கொலை விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தனர்.

மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டனர், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள். கருப்பு நிறப் பெண்களில் பலர் வெள்ளை ஆண்களின் உடல் பசிக்கு ஆளாகி நிறையக் கலப்புக் குழந்தைகள் பிறந்தனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கலப்பு என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் இவர்களைக் கறுப்பர்கள் என்றே பாவித்தனர். இந்தக் குழந்தைகளுக்குத் தகப்பன்மார்களாகிய வெள்ளையர்கள் இவர்களை தங்கள் குழந்தைகள் என்று கூறிக்கொள்ளாததால் இவர்கள் தாய்மார்களோடேயே வளர்ந்தனர். அல்லது தாயின் கணவனான கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் இவர்களுக்குத் தகப்பனாகக் கருதப்பட்டான். தங்களிடம் அடிமைகளாக இருந்த பெண்ககளுக்குத் திருமணம் செய்விக்கும் முன்பு அந்தப் பெண்களோடு உடல் உறவு வைத்துக்கொள்ளும் முதல் உரிமை எஜமானுக்கே இருந்தது.

ஆபிரிக்கர்களுக்கு எழுதப் படிக்க உரிமை இல்லை. அப்படிப் படிக்க முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி குடியிருப்புகள், தனி கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. இந்தியாவில் தீண்டாமை இருந்தது போல் அமெரிக்காவிலும் ஆபிரிக்கர்களை வெள்ளையர்கள் தனிமைப்படுத்தினர்.
இவ்வாறாக  ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்” முதல் தலைவர். பிரெஞ்சு புரட்சியின் போது ‘முதல் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன்,  அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும்,  பிடிப்பதும், விற்று வாங்குவதும்,  கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி,  அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.
அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும்,  கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் திகதி இரவும் ஆகஸ்ட் 23ம் திகதியும்  island of Saint Domingue  (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.

இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும்,  டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும்,  ஈகுவடார் 1854இலும்,  பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது.

உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார்.

சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.

அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த,  ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க – அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள்,  தனிக் கோவில்கள்,  தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின.

கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு மற்ற ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. இவர் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகளில் ஒருவர் அல்ல. இவர் தந்தை கென்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காக வந்த இடத்தில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இவரது தாயை மணந்திருக்கிறார். இவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத் தன் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டார். நல்லவேளையாக இவரைத் தன்னோடு அழைத்துச் செல்வேன் என்று அடம்பிடிக்கவில்லை. இவருடைய தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் மட்டுமே இவருக்கும் ஆபிரிக்க இனத்திற்கும் தொடர்பு உண்டு.

ஒபாமாவுக்கு முன்பே ஆபிரிக்க அமெரிக்கர்களின் தலைவர்கள் சிலர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்க முயன்றும் தோல்வியைத் தழுவியிருந்தனர். அவர்கள் எல்லோரும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஆபிரிக்க இனத்தவர்களை முன்னேற்றுவதும் தங்கள் குறிக்கோள்களில் ஒன்று என்று தேர்தல் களத்தில் அறிவித்தனர்.

ஒபாமா “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரு பிரிவுகள் இல்லை. இரண்டு இனங்களும் உள்ள ஒற்றை அமெரிக்கா, அகில உலக அளவில் இழந்த செல்வாக்கை நான் மறுபடி நிலைநாட்டுவேன். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்வேன்” என்று கூறி வருகிறார்.

“நாட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவேன்” என்று இவர் கூறி வருவது இளைஞர்கள் இடையில் இவருக்கு மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

20ம் நூற்றாண்டில்,  ஐ.நா. சபை,  சர்வதேச தொழிலாளர் தாபனம் போன்றவை,  பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட முடியாது. புராதன காலங்களில் காணப்பட்ட முறைபோலல்லாது நவீன காலத்தில் புதிய கோணத்தில் அடிமை முறை வளர்ந்து கொண்டிருக்கின்றது.
  
தற்காலத்தில் அடிமைகள்

தற்காலத்தில் அடிமைத்தனம் பின்வரும் விதமாக இருப்பதாக அடிமை ஒழிப்பு சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் இனங்காட்டப்பட்ட ஒரு சிலதை பின்வருமாறு நோக்கலாம்.
அடகு தொழிலாளர் – இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் மறைமுகமாகக் கட்டுண்டுள்ளனர். இது ஒரு நபர் நிலச்சுவாந்தாரிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கிää அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னையும்ää தன் மனைவி மக்களையும் சாசுவதமாக அச்சுவந்தாரிடம் அடகு கொடுத்து,  தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் வாடுகிறனர். இத்தகைய முறை இந்தியாவில் இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இளவயதில் கட்டாயத் திருமணம் – இது இளம் பெண்களைப் பீடிக்கிறது. பெண்கள் சம்மதமில்லாமலேயே மணம் செய்து வைக்கப்பட்டுää வன்முறைகளுக்கு ஆளாகிறனர்.

கட்டாய சேவை – அரசாங்கம்,  அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள்,  தனிமனிதர்கள் பல நபர்களை நீதிக்கு புறம்பான முறைகளில் ஆட்கொண்டு,  கட்டாய வேலைகளை – துன்புறுத்தியோ,  வன்முறை பீதியை ஏற்படுத்தியோ – பெற்றுக் கொள்கின்றன.

அடிமைச் சந்ததி – சில சமுதாய பாகுபாடுகளில் பிறந்தவர்களை ஏனைய சமுதாயம், அடிமைகளாகவோ,  கட்டாய வேலை எடுக்க ஏற்பட்டவர்கள் எனவோ கருதுகிறது.
ஆள் கடத்துதல் – மனிதர்கள்,  பெண்கள், சிறார்கள் இவர்களைத் கடத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவது,  ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்க்கு எடுத்துச் செல்லுதல்.

சிறுவர் தொழிலாளர்கள் – இன்று உலகம் முழுவதும் 126 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலைக்குப் பாதகமான சு10ழ்நிலையில்,  குறைந்த பட்ச பாதுகாப்பின்றி வேலை செய்துவருகின்றனர்.

நவீன காலத்தில் வீடுகளில் பணிப்பெண்களாகக் கடமை புரிவோரும் ஒரு வகையில் அடிமைத்துவ வாழ்க்கையையே அனுபவிக்கின்றனர்.
பழையகால வாங்கி/விற்கும் பொருள் அடிமை முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தடை செய்யப் பட்டாலும் கூட,  இன்றும் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இத்தகைய அடிமைமுறை நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக சுடான்,  மௌரிடேனியா போன்ற நாடுகளில் இது நடைபெறுகிறது. சர்வதேச அடிமை எதிர்ப்பு ஸ்தாபனம் 1997 ஆண்டறிக்கைப்படி “சுடானிய அரசு நேர்முகமாக அடிமை முறையில் பங்கு எடுக்கிறது என சொல்ல முடியாவிட்டாலும், அவ்வரசு அடிமை முறைக்கு உகந்த சமூக சீரழிவைத் தூண்டிவிட்டு, அதனால் இலாபமடைந்துள்ளது.”எனக் கூறப்பட்டிருந்து.

ஐக்கிய அமெரிக்கா அரசின் 1994 கணக்குப் படி, மௌரிடேனியாவில் 80,000 கருப்பர்கள் “பெர்பெர்” இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கின்றனர். பெர்பெர்கள் கருப்பர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துகிறனர் என்று கூறப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் தனது உரிமையைப்போல மனிதசமூகத்தைச் சேர்ந்த அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் நிலையை எம்முள் வளர்த்துக் கொள்ள அனைவரும் இத்தினத்தில் திடசங்கட்பம் பூணுவோமாக.

Thursday 11 August 2011

சர்வதேச இளைஞர் தினம் - புன்னியாமீன்

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. இளைஞர்களை முதலீடாகக் கொள் ளாத பொருளா தாரம் முறையான ஒன்றல்ல. அவ்வாறான ஒரு முதலீடு எதிர்காலத்தின் அனைவருக்கும் மிகுந்த பயன்தரும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது 2011 சர்வதேச இளைஞர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.


சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்" என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?" என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று" என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்" என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். 'ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது". அது போல, 'கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.'அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது" என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up" என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி" என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும்,

2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.

2009 - SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.
2008 - Youth and Climate Change: Time for Action
2007 - Be seen, Be heard: Youth participation for development
2006 - Tackling Poverty Together
2005 - WPAY+10: Making Commitments Matter
2004 - Youth in an Intergenerational Society
2003 - Finding decent and productive work for young people everywhere
2002 - Now and for the Future: Youth Action for Sustainable Development
2001 - Addressing Health and Unemployment

Wednesday 20 July 2011

சர்வதேச சதுரங்க தினம் International Chess Day - புன்னியாமீன்

சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது நினைவுகூரப்படுகின்றன. குறித்த விடயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும். சில சர்வதேச தினங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் பிரேரணை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்படுகின்றன. இன்னும் சில சர்வதேச தினங்கள் குறித்த விடயம் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இவற்றின் பிரதான நோக்கம் குறித்த விடயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் வழங்குவதாகவே காணப்படும்.

இந்த அடிப்படையில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ் சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.

புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார். சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

இந்த விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.

காய்களை அடுக்கும்போது முதல் நிரலில் அல்லது வரிசையில் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம். இரண்டாவது நிரலில் எட்டு படைவீரர் காய்களும் நிறுத்தப்படும். எதிரணியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலே காய்கள் அடுக்கப்பட்டாலும்கூட, இங்கு கறுப்பு அரசி கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் வெள்ளைச் சதுரத்திலும் நிறுத்தப்படுவர்.

வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். அரசன்: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும். ஆனால் முதல் முதலாக நகருவதாக இருக்கும் பொழுது மட்டும் இரண்டு கட்டங்கள் (சதுரங்கள்) நகரமுடியும். அரசி: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. மந்திரி மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. குதிரை: டகர வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. கோட்டை முன்னே பின்னே அல்லது இட வலமாக நகர நேரே எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படைவீரர் நேரே முன்நோக்கி முட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் அரம்பநிலையையில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் நகரமுடியும். படைவீரர் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாகவே மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.

சதுரங்க விளையாட்டின் ஆரம்பம் பற்றி பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட கோணங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏழாம் நூற்றாண்டு காலகட்டங்களிலிருந்தே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டாகவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே, சதுரங்கத்தின் ஆரம்பம் இந்தயாவே என்று கூறலாம். பின்பு மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலான நாடுகளுக்கும் பல வேறுபாடுகளுடன் இவ்விளையாட்டு பரவியது. தொடர்ந்து மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் வியாபித்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் சில தகவல்களின்படி இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய சதுரங்கம் பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியதாகவும் முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சா என்பவர் செஸ் பற்றி புத்தகமொன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான விதிமுறைகளின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படைவீரர்களை முதல் நகர்த்தும்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ராணி திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதி முறையும் இக்காலகட்டத்திலே புழக்கத்துக்கு வந்ததாக கூறப்படுகின்றது. சதுரங்க ஆரம்பகாலத்தில் மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே ராணிக்கு நகர அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. “இராணி” ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.

“ஸ்டவுண்டன்” தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல்குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செஸ் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழக்கத்தில் விட்டது.

உலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த் இவர்களுள் கடந்த 35 ஆண்டு காலத்தில் முக்கியம் பெற்றோரின் விபரம் வுருமாறு

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். மே 23 1951 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் (1970) உலக சாம்பியன் 1975-1985, (ஃபிடே) 1993-1999 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2655 (ஏப்ரல் 2008 ) எலோ தரவுகோள் 2780 (ஜூலை 1994) 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார். 2005 ஆம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

காரி காஸ்பரொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். ஏப்ரல் 13 1963 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் உலக சாம்பியன் 1985–2000 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். எலோ தரவுகோள் 2851 (ஜூலை 1999) காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 2000ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் “மரபுவழி” உலக சதுரங்க வீரர் (”Classical” World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் “டீப் புளூ” கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.

விளாடிமிர் கிராம்னிக் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஜூன் 25 1975 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மட்டும் உலக சாம்பியன் 2000—2006 (மரபுவழி) பட்டம் 2006—2007 (ஒன்றுபட்ட) உலக சாம்பியன் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2772. எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002) அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில் இவர் இருந்தார். 2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் இவர் சென்னை, இந்தியாவைச் சேர்ந்தவர் டிசெம்பர் 11, 1969இபிறந்த இவர் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இவர் இதுவரை பெற்றுள்ள சதுரங்க பதக்கங்கள் வருமாறு, 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர் 2000 சதுரங்க வெற்றிவீரர் 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர் 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில் 1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில் 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்

இவர் பெற்றுள்ள விருதுகள் வருமாறு சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004) பத்மபூஷண் (2000) பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998. ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992) தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987) தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985)