Wednesday 20 July 2011

சர்வதேச சதுரங்க தினம் International Chess Day - புன்னியாமீன்

சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது நினைவுகூரப்படுகின்றன. குறித்த விடயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும். சில சர்வதேச தினங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் பிரேரணை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்படுகின்றன. இன்னும் சில சர்வதேச தினங்கள் குறித்த விடயம் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இவற்றின் பிரதான நோக்கம் குறித்த விடயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் வழங்குவதாகவே காணப்படும்.

இந்த அடிப்படையில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ் சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.

புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார். சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

இந்த விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.

காய்களை அடுக்கும்போது முதல் நிரலில் அல்லது வரிசையில் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம். இரண்டாவது நிரலில் எட்டு படைவீரர் காய்களும் நிறுத்தப்படும். எதிரணியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலே காய்கள் அடுக்கப்பட்டாலும்கூட, இங்கு கறுப்பு அரசி கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் வெள்ளைச் சதுரத்திலும் நிறுத்தப்படுவர்.

வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். அரசன்: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும். ஆனால் முதல் முதலாக நகருவதாக இருக்கும் பொழுது மட்டும் இரண்டு கட்டங்கள் (சதுரங்கள்) நகரமுடியும். அரசி: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. மந்திரி மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. குதிரை: டகர வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. கோட்டை முன்னே பின்னே அல்லது இட வலமாக நகர நேரே எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படைவீரர் நேரே முன்நோக்கி முட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் அரம்பநிலையையில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் நகரமுடியும். படைவீரர் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாகவே மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.

சதுரங்க விளையாட்டின் ஆரம்பம் பற்றி பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட கோணங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏழாம் நூற்றாண்டு காலகட்டங்களிலிருந்தே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டாகவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே, சதுரங்கத்தின் ஆரம்பம் இந்தயாவே என்று கூறலாம். பின்பு மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலான நாடுகளுக்கும் பல வேறுபாடுகளுடன் இவ்விளையாட்டு பரவியது. தொடர்ந்து மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் வியாபித்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் சில தகவல்களின்படி இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய சதுரங்கம் பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியதாகவும் முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சா என்பவர் செஸ் பற்றி புத்தகமொன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான விதிமுறைகளின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படைவீரர்களை முதல் நகர்த்தும்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ராணி திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதி முறையும் இக்காலகட்டத்திலே புழக்கத்துக்கு வந்ததாக கூறப்படுகின்றது. சதுரங்க ஆரம்பகாலத்தில் மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே ராணிக்கு நகர அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. “இராணி” ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.

“ஸ்டவுண்டன்” தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல்குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செஸ் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழக்கத்தில் விட்டது.

உலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த் இவர்களுள் கடந்த 35 ஆண்டு காலத்தில் முக்கியம் பெற்றோரின் விபரம் வுருமாறு

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். மே 23 1951 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் (1970) உலக சாம்பியன் 1975-1985, (ஃபிடே) 1993-1999 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2655 (ஏப்ரல் 2008 ) எலோ தரவுகோள் 2780 (ஜூலை 1994) 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார். 2005 ஆம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

காரி காஸ்பரொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். ஏப்ரல் 13 1963 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் உலக சாம்பியன் 1985–2000 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். எலோ தரவுகோள் 2851 (ஜூலை 1999) காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 2000ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் “மரபுவழி” உலக சதுரங்க வீரர் (”Classical” World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் “டீப் புளூ” கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.

விளாடிமிர் கிராம்னிக் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஜூன் 25 1975 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மட்டும் உலக சாம்பியன் 2000—2006 (மரபுவழி) பட்டம் 2006—2007 (ஒன்றுபட்ட) உலக சாம்பியன் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2772. எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002) அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில் இவர் இருந்தார். 2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் இவர் சென்னை, இந்தியாவைச் சேர்ந்தவர் டிசெம்பர் 11, 1969இபிறந்த இவர் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இவர் இதுவரை பெற்றுள்ள சதுரங்க பதக்கங்கள் வருமாறு, 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர் 2000 சதுரங்க வெற்றிவீரர் 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர் 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில் 1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில் 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்

இவர் பெற்றுள்ள விருதுகள் வருமாறு சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004) பத்மபூஷண் (2000) பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998. ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992) தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987) தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985)

No comments:

Post a Comment