Sunday 29 June 2014

சர்க்கரை நோயாளிகள் நோன்பு நோற்கலாமா? !



ரமலான் நோன்பு என்பது ஆரோக்கியமான ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். ரமலான் மாதங்களில் நோயுற்றவர்கள், அந்த நாளில் நோன்பு வைப்பதை தவிர்த்துவிட்டு, ரமலான் அல்லாத மற்ற நாட்களில் அதற்கு பகரமாக நோன்பு வைக்க வேண்டும்.


இந்த நிபந்தனையானது சாதாரணமான நோய்களுக்கும் பொருந்தும். ஆனால் நிரந்தரமான, கட்டுப்படுத்தி மட்டும் வைக்கப்படும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் எப்படி நோன்பை எதிர் கொள்வது?


இது சம்பந்தமாக சர்வதேச அளவில் நடந்த மருத்துவ மாநாடுகள் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. பொத்தாம் பொதுவாக சர்க்கரை நோயாளிகள் நோன்பு நோற்கலாம் என்றோ அல்லது கூடாது என்றோ கூறி விட முடியாது. சில நோயாளிகளின் சில தன்மைகளை வைத்தே தீர்மானிக்க முடியும்.


கீழ்க்கண்ட சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் நோன்பு நோற்கக்கூடாது

இன்சுலின் மூலம் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்படும், முதலாம் வைக் (type1) சர்க்கரை நோயாளிகளும் இதுபோன்று இன்சுலின் மூலம் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்படும் எந்த வகை சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் இவர்கள் நோன்பைத் தவிர்க்க வேண்டும்.


சர்க்கரை நோயால், சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு செயலிழந்தவர்கள் ஆகியோரும் கட்டாயம் நோன்பு நோற்கக்கூடாது.


ரமலானுக்கு முந்திய மூன்று மாதங்களில் தாழ்நிலை சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்நிலை சர்க்கரையை உணர முடியாமல் இரத்த சோதனை மூலம் மட்டுமே கண்டறியப்படும் நோயாளிகள், மிக மோசமான கட்டுபாடற்ற தன்மையில் உள்ள சர்க்கரை நோயாளிகள், முந்திய மூன்று மாதங்களில் சர்க்கரை நோயின் பக்கவிளைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கட்டாயம் நோன்பு நோற்கக்கூடாது.


சர்க்கரையுடன், மற்ற கடுமையான நோய் கண்டவர்கள், உடலுழைப்பு செய்யும் சர்க்கரை நோயாளிகள், கருவுற்ற சர்க்கரை நோயாளிகளின் அல்லது கருவினால் உண்டான சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள், டயாலிசிஸ் தொடரும் சர்க்கரை நோயாளிகள் இவர்களும் நோன்பு நோற்பதை அறவே தவிர்க்க வேண்டும்.


இரத்த சுகர் 180ல் இருந்து 300 வரை உள்ளவர்கள், மூன்று மாத சர்க்கரை அளவானது HbA1C 10 என்று உள்ளவர்கள் சர்க்கரையால் கண் விழித்திரை பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரையால் மூளை இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டவர்கள், யாரின் உதவியும் இன்றி தனியாக வாழும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயதான சர்க்கரை நோயாளிகள் ஆகியோரும் நோன்பை தவிர்ப்பது நல்லது.


மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அதற்காக எடுக்கப்படும் மருந்துகளால் புலனுணர்வு (cognitive function) பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளும் நோன்பைத் தவிர்க்க வேண்டும்.


மேற்கணடவர்கள் நோன்பு நோற்பதால் உடனடியாகவோ அல்லது பின்னரோ பாதிக்கப்படலாம். அல்லாஹ் எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டான் என்ற அடிப்படையிலும் இவர்கள் நோன்பு வைப்பதை தவிர்க்க வேண்டும்.


உணவு கட்டுப்பாடு அல்லது மாத்திரைகள் மூலம் நன்றாகக் கட்டுக்குள் வைக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் நோன்பு நோற்க வேண்டும்.


தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதாக அறிந்தால் உடனே நோன்பை முறித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


சர்க்கரை நோயாளிகள் (நோன்பு நோற்றால்) கவனிக்க வேண்டியவை.
சர்க்கரையின் சிக்கல்களான தாழ்நிலை சர்க்கரை, அதிக உயர்நிலை சர்க்கரை, தண்ணீர் சத்து குறைந்து போதல், போன்ற பலவற்றை ரமலானுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே மருத்துவரை கலந்து ஆலோசித்து அறிந்து, சர்க்கரை அளவை தாங்களாகவே வீட்டில் வைத்தே பரிசோதித்து, அவசர சிகிச்சைக்குத் தயாராக வேண்டும்.


சிறுநீர் பரிசோதனை, ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனையுடன் திட்டமிட்ட உணவு முறை, மாவுச்சத்து குறைவாக உள்ள கொழுப்பற்ற உணவை எடுத்தல், அதிக நார்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் அறிவுரை மீறி நோன்பு நோற்கக் கூடாது.


ரமலான் மாத உணவு முறை


சஹர் உணவில் இனிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழங்கள், எண்ணெய் இல்லாத காய்கறி சாலட், அவரை வகைகள், பருப்பு தயிர் எனப்படும் யோகார்ட், முழு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், அவிக்கப்பட்ட காய்கறி போன்றவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை, பொரிக்காமல், கிரில் மூலமாகவோ சமைத்தோ அல்லது அவித்தோ (steam cooked) சாப்பிடலாம்.


சஹர் உணவை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமத்திப்பது நல்லது.


இப்தார் உணவை அனுமதிக்கப்பட்ட நேரம் வந்தவுடன் சற்றும் தாமதிக்காமல் உண்ண வேண்டும்.


இப்தாரிலும் அதற்குப் பிறகும் சர்க்கரை இல்லாத பானம், பழச்சாறுகள் மற்றும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எண்ணெய் மிகுதியாக உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகம் நோன்புக் கஞ்சி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.


மாத்திரை எடுக்க சில வழிமுறைகள்


ஒரு வேலை மட்டும் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுபவர்கள், அதை இப்தார் நேரத்தில் போடுவது போல் மாற்றி கொள்ளவேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளில் மாத்திரை அல்லது இன்சுலின் போடுபவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு மூன்றில் இரண்டு பாகம் மருந்துகளை இப்தாரின் போதும், மற்ற ஒரு பாகம் மருந்துகளை மற்ற வேலைகளிலும் பிரித்துப் போடலாம்.


உடற் பயிற்சி 


சர்க்கரை நோய்க்கு உடற் பயிற்சியும் ஒரு சிகிச்சை முறை. எனவே இரவு நேரங்களில் மிதமான உடற்பயிற்சி செய்யலாம். மிகக் கடுமையான உடற்பயிற்சி செய்யலாம். மிகக் கடுமையான உடற்பயிற்சி செய்வதைக் கண்டிப்பாக நோன்பு பிடித்து இருக்கும்போது தவிர்க்க வேண்டும். இரவுத் தொழுகைகளில் பங்கேற்கலாம்.


முடிவுரை:


இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்ப்பதால் நோன்பு முறியாது என்பதால் நோன்பாளிகள் தங்கள் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது தாழ்நிலை சர்க்கரையின் அறிகுறி தென்பட்டாலோ (படபடப்பு, வியர்த்து ஊத்துதல், இதயம் விரைவாக துடிப்பது போல் உணர்வு, கைகால் நடுக்கம் போன்றவை) உடனே நோன்பை முறித்துவிட்டு, சர்க்கரையையோ அல்லது இனிப்பு உள்ள பொருட்களையோ அல்லது இனிப்பு பானங்களையோ அவசரத்திற்கு உண்டு, சர்க்கரை மேலும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


 நன்றி  :டாக்டர் த. முஹம்மது கிஸார். 
நன்றி    :உணர்வு ஜூன் 06 - 12, 2014 பதிப்பு.

Wednesday 11 June 2014

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள்: (FIFA World Cup) ஒரு பார்வை – புன்னியாமீன்



உலகிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து போட்டியாகும்.உலகக் கிண்ண கால்பந்து 1930ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர்  நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது.  அந்த வகையில் 2014ம் ஆண்டுக்கான 20 வது உலகக் கிண்ண  போட்டி பிரேசிலில்  2014 ஜுன் மாதம் 12ம் தேதி ஆரம்பமாகி  2014 ஜூலை மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


பிரிவுக்கு 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளில் மொத்தம்  32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டித்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதற்பரிசாக 35மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் மூன்றாம் இடம்பிடிக்கும் அணிக்கு 22 மில்லியின் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது என்பது சுலபமான விஷயம் கிடையாது. போட்டியை நடத்தும் நாடு மட்டும் நேரடியாக தகுதி பெறும். மற்ற 31 இடத்திற்கு தகுதி சுற்று போட்டிகள் நடைபெறும். இந்த முறை தகுதி சுற்று போட்டியில் 203 நாடுகள் மொத்தம் 820 ஆட்டங்களில் இரண்டு ஆண்டுகள் விளையாடின. அதில் இருந்து 31 அணிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
 20 வது உலகக் கிண்ண  போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு–A : பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன்
பிரிவு–B : ஸ்பெயின் நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா
பிரிவு–C : கொலம்பியா, கிரீஸ், ஐவரிகோஸ்ட், ஜப்பான்
பிரிவு–D : உருகுவே, கோஸ்டாரிகா, இங்கிலாந்து, இத்தாலி
பிரிவு   E : சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ்
பிரிவு–F : அர்ஜென்டினா, போஸ்னியா, ஈரான், நைஜீரியா
பிரிவு–G : ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, அமெரிக்கா
பிரிவு–H : பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷியா, தென் கொரியா
‘கோல் லைன்’ தொழில்நுட்பம்
*****************************
இந்த உலக கிண்ணத்தில் முதல் முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவி மூலம் ‘கோல் லைன்’ எனப்படும் எல்லை கோட்டை பந்து தாண்டியதா? இல்லையா? என்பதே நடுவர்கள் கண்டறியலாம். கோல் கம்பத்தை சுற்றிலும் 14 அதிவேக படப்பிடிப்பு கருவிகள் பொருத்தப்படும்.
இந்த கருவி பந்து எல்லை கோட்டை கடந்து விட்டால் அடுத்த வினாடியே நடுவர் கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்துக்கு தகவல் தெரிந்து விடும். இந்த தொழில்நுட்பம் மூலம் கால் பந்து விளையாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
மாற்றுத்திறனாளிகளால் ஆரம்பித்து வைப்பு
*********************************************
முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கைகால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மீண்டும் நடக்க தொடங்குங்கள்’ (வாக் அகைய்ன்) என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ‘எக்ஸோ ஸ்கெலிட்டன்’ என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர். மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில் மிக நுட்பமான மெல்லிய செயற்கை தோலையும் இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வகை செயற்கை கால்களை பொருத்திய ரோபோக்களின் மூலம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் தோன்றும் உணர்வுகளின்படி இந்த அதிநவீன செயற்கை கால்கள் செயல்படுகின்றன. இவ்வகையிலான செயற்கை கால்களை பொருத்திய பிரேசில் நாட்டை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட நீண்ட கால பயிற்சியின் பலனாக, மூளையின் கட்டளைக்கேற்ப செயற்கை கால்கள் துல்லியமாக செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
20-வது உலக கிண்ண கால்பந்து போட்டியை இவர் களில் ஒருவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதைப்போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு போட்டியை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதல் பந்தை உதைத்து தொடக்கி வைப்பதன் மூலம், அறிவியலின் ஆற்றலை விளங்க வைப்பது மட்டுமின்றி, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையை விதைக்கவும் முடியும் என்று பிரேசில் அரசு நம்புகிறது.
சுருக்க வரலாறு
***************
1928 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆம்ஸ்டர்டமில் கூடியது. அதன் போது 1930 ஆம் ஆண்டை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக உருகுவே உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டது.
1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் முதல் இரண்டு உலகக் கிண்ண போட்டிகள் நடந்தன. பிரான்சு அணி மெக்சிக்கோ அணியை 4-1 மற்றும் அமெரிக்கா அணி பெல்ஜியம் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றன. உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் முதல் கோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் லாரண்ட் என்பவரால் அடிக்கப்பட்டது. மொண்டேவீடியோ நகரில் 93.000 மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நடந்த இறுதி போட்டியில், உருகுவே அணி அர்ஜென்டீனா அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலக கிண்ணத்தை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.
ஜெர்மனி (1942) மற்றும் பிரேசில் (1946) நாடுகளில் நடைபெறத் திட்டமிட்டிருந்த போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன.
1934 முதல் 1978 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொருமுறையும் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. ஆனால் 1938 ஆம் ஆண்டில் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும் ஜெர்மனியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆஸ்திரியா போட்டியில் பங்கேற்கவில்லை. 1950 ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலகிக் கொண்டதால் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.
உலககிண்ண போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 1982 ஆம் ஆண்டில் 24 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. 1998ல் இந்த எண்ணிக்கை 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகமான பங்கேற்புக்கு வாய்ப்பு கிட்டியது. இந்நாடுகளில் இருந்து பங்கேற்ற அணிகள் கனிசமான வெற்றிகளை ஈட்டத் தொடங்கின. மெக்சிகோ, கேமரூன், செனகல் மற்றும் அமெரிக்கா, கானா அணிகள் முறையே 1986,1990,2002,2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதி சுற்றுவரை முன்னேறின. இருப்பினும், ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.
1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கிண்ண இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கிண்ணம் வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில்,  இக் கிண்ணம் எளிமையாக உலகக்கிண்ணம் என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கிண்ணம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கிண்ணத்தை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கிண்ணம் அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. ஆயினும், 1983-ஆம் ஆண்டில் அக்கிண்ணம் திருடப்பட்டது; அதன்பிறகு, அக்கிண்ணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
1970-க்குப் பிறகு, காற்பந்து உலகக்கிண்ணத்துக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கிண்ணம் வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கிண்ணத்துக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து,  இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கிண்ணம் 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. கிண்ணத்தின் அடித்தட்டில், உலகக்கிண்ணப்  போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்தப் புதிய கிண்ணமானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக்கிண்ணப் போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்
இது வரை உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற்ற நாடுகளும், வெற்றி பெற்ற நாடுகளும்
*************************************************************************************
01)   ஆண்டு – 1930
நடைபெற்ற நாடு – உருகுவே, வெற்றி பெற்ற அணி – உருகுவே 4–2
02)  ஆண்டு – 1934
நடைபெற்ற நாடு – இத்தாலி, வெற்றி பெற்ற அணி – இத்தாலி 2–1
03)  ஆண்டு – 1938
நடைபெற்ற நாடு – பிரான்ஸ், வெற்றி பெற்ற அணி – இத்தாலி 4–2
ஜெர்மனி (1942) மற்றும் பிரேசில் (1946) நாடுகளில் நடைபெறத் திட்டமிட்டிருந்த போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன.
04)  ஆண்டு – 1950
நடைபெற்ற நாடு – பிரேசில்
வெற்றி பெற்ற அணி – உருகுவை
05)  ஆண்டு – 1954
நடைபெற்ற நாடு – சுவிட்சர்லாந்து, வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 3–2
06)  ஆண்டு – 1958
நடைபெற்ற நாடு – சுவீடன், வெற்றி பெற்ற அணி – பிரேசில் 5–2
07)  ஆண்டு – 1962
நடைபெற்ற நாடு – சிலி, வெற்றி பெற்ற அணி – பிரேசில் 3–1
08)  ஆண்டு – 1966
நடைபெற்ற நாடு – இங்கிலாந்து, வெற்றி பெற்ற அணி – இங்கிலாந்து 4–2
09)  ஆண்டு – 1970
நடைபெற்ற நாடு – மெக்சிக்கோ, வெற்றி பெற்ற அணி – பிரேசில் 4–1
10)  ஆண்டு – 1974
நடைபெற்ற நாடு – மேற்கு ஜெர்மனி, வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 2–1
11)  ஆண்டு – 1978
நடைபெற்ற நாடு – அர்ஜென்டினா, வெற்றி பெற்ற அணி – ஆர்ஜெண்டீனா 3–1
12)  ஆண்டு – 1982
நடைபெற்ற நாடு – இத்தாலி, வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 1–0
13)  ஆண்டு – 1986
நடைபெற்ற நாடு – மெக்சிக்கோ, வெற்றி பெற்ற அணி – ஆர்ஜெண்டீனா 3–2
14)  ஆண்டு – 1990
நடைபெற்ற நாடு – இத்தாலி , வெற்றி பெற்ற அணி – மேற்கு ஜெர்மனி 1-0
15)  ஆண்டு – 1994
நடைபெற்ற நாடு – ஐக்கிய அமெரிக்கா, வெற்றி பெற்ற அணி – பிரேசில் 0–0 (3–2ச)
16)  ஆண்டு – 1998
நடைபெற்ற நாடு – பிரான்ஸ், வெற்றி பெற்ற அணி – பிரான்ஸ் 3–0
17)  ஆண்டு – 2002
நடைபெற்ற நாடு – தென் கொரியா, ஜப்பான், வெற்றி பெற்ற அணி – பிரேசில் 2–0
18)  ஆண்டு – 2006
நடைபெற்ற நாடு – ஜெர்மனி, வெற்றி பெற்ற அணி – இத்தாலி 1–1 (5–3ச)
19)  ஆண்டு – 2010
நடைபெற்ற நாடு – தென்னாப்பிரிக்கா, வெற்றி பெற்ற அணி – ஸ்பானியா 1–0

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் கண்டுரசித்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்கள்
***********************
1. 1994ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற 15வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.59 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.
2. 2006ம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற 18வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.36 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.
3. 2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளினை 3.18 மில்லியன் இரசிகர்கள் நேரடியாக கண்டுரசித்தனர்.
அந்தவகையில், சராசரியாக அதிக பார்வையாளர்கள் கண்டுரசித்த முதல் 10 உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்கள் வருமாறு;
1) 1994 – ஐக்கிய அமெரிக்கா
போட்டிகள் – 52
சராசரி பார்வையாளர்கள் – 68,991
மொத்த பார்வையாளர்கள் – 3,587,538
2) 1950 – பிரேசில்
போட்டிகள் – 22
சராசரி பார்வையாளர்கள் – 60,773
மொத்த பார்வையாளர்கள் – 1,337,000
3) 2006 – ஜேர்மனி
போட்டிகள் – 64
சராசரி பார்வையாளர்கள் – 52,384
மொத்த பார்வையாளர்கள் – 3,352,605
4) 1970 – மெக்ஸிக்கோ
போட்டிகள் – 32
சராசரி பார்வையாளர்கள் – 52,312
மொத்த பார்வையாளர்கள் – 1,673,975
5) 1966 – இங்கிலாந்து
போட்டிகள் – 32
சராசரி பார்வையாளர்கள் – 50,459
மொத்த பார்வையாளர்கள் – 1,614,677
6) 2010 – தென்னாபிரிக்கா
போட்டிகள் – 64
சராசரி பார்வையாளர்கள் – 49,670
மொத்த பார்வையாளர்கள் – 3,170,856
7) 1990 – இத்தாலி
போட்டிகள் – 52
சராசரி பார்வையாளர்கள் – 48,388
மொத்த பார்வையாளர்கள் – 2,516,215
8) 1974 – மேற்கு ஜேர்மனி
போட்டிகள் – 38
சராசரி பார்வையாளர்கள் – 46,685
மொத்த பார்வையாளர்கள் – 1,774,022
9) 1986 – மெக்ஸிக்கோ
போட்டிகள் – 52
சராசரி பார்வையாளர்கள் – 46,039
மொத்த பார்வையாளர்கள் – 2,394,031
10) 1998 – பிரான்ஸ்
போட்டிகள் – 64
சராசரி பார்வையாளர்கள் – 43,517
மொத்த பார்வையாளர்கள் – 2,785,100
(தகவல் மூலம் – உலக கால்பந்தாட்ட சம்மேளனம்)

Sunday 1 June 2014

புத்தரின் படுகொலை

புத்தரின் படுகொலை
*************************
- எம்.ஏ.நுஃமான் -

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்

ஆம் இன்று யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 33வது ஆண்டு நிறைவு இன்று (01.06.2014)

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனஅழிப்பு நடவடிக்கையில் ஒரு முக்கிய கறையாக வரலாற்றில் சிவப்பு வரிகளால் எழுதப்பட்ட நாள்.

தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் இன வெறிக் காடையரால் இலங்கை அரசின் அனுசரணையோடு எரியூட்டப்பட்ட போது கல்வியைக் கண்ணாக கொண்ட தமிழ் சமூகம் உளவியல் ரீதியாக மிகுந்த மன உடைவுக்கு உள்ளாகியது...

இந்த வலியே பின்னாளில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அதிகம் வலிமை சேர்த்தது...

97,000அரிய நூல்கள் எரியூட்டப்பட்டு கருகிச் சாம்பலாகின. பல பண்டை தமிழ் ஏட்டுச் சுவடிகள் ஆவணங்கள் என இழந்த இழப்புக்கள் இட்டு நிரப்ப முடியாதவை.