Wednesday 14 November 2012

இஸ்லாமிய புதுவருடம், ஒரு சிறு விளக்கம் - புன்னியாமீன்

இஸ்லாமிய புதுவருடம், ஒரு சிறு விளக்கம் - புன்னியாமீன்

(இஸ்லாமிய புதுவருடம் தொடர்பாக சிறு விளக்கமொன்றினைத் தரும் படி சிலபிறமதச் சகோதரர்கள் முகநூல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் என்னைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதனை எழுதுகின்றேன்.)

'சூரிய சுழற்சியை' அடிப்படையாக கொண்டே தமிழ், சிங்கள,  ஆங்கில வருடங்கள் கணிக்கப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய புதுவருடம் சந்திர சுழற்சியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றது. இதன்படி இஸ்லாமிய புது வருடத்தின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. 'ஹிஜ்ரி' ஆண்டு என்பது அண்ணல் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த 'ஹிஜ்ரத்' பயணத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும்.

முற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி 638 (கிபி) அன்று நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரும், இரண்டாவது கலிபாவுமான உமர் பின் கத்தாப் அவர்களால், அவர் காலத்தில் இருந்த பல்வேறு நாட்காட்டி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர அறிமுகப்படுத்தபட்டது. உமர்(ரழி), அறிஞர்களுடன் கலந்தாலோசித்து இஸ்லாமிய காலம் கணக்கிடும் முறையை ஹிஜ்ராவிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஹிஜ்ராவின் முதல் மாதமாகிய முஹர்ரமின் முதல் நாளிலிருந்து இஸ்லாமிய நாளேட்டை ஆரம்பிப்பதாகவும் முடிவு செய்யபட்டது. முஹர்ரம் 1, 1 ஹிஜ்ரி என்பது ஆங்கில நாளேட்டில் ஜுலை 16, 622 (கிபி) குறிக்கிறது. இஸ்லாத்தில் புது வருடத்திற்கென தனியான எந்தக் கொண்டாட்டங்களும் இல்லை. என்றாலும், இஸ்லாமிய மாதக் கணிப்பீட்டையும், ஒரு வருடம் முடிகின்றது. மறு வருடம் தொடர்கின்றது என்ற உண்மையுமாவது உணர்ந்திருப்பது அவசியமாகும்.

இ‌‌ஸ்லா‌மிய ஆ‌ண்டிலு‌ம் ம‌ற்ற எ‌ல்லா ஆ‌ண்டுகளை‌ப் போல 12 மாத‌ங்க‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இஸ்லாமிய மாதங்கள்
1. முஹர்ரம்: இ‌ஸ்லா‌மிய ஆ‌ண்டி‌ன் முத‌ல் மாதமாகு‌ம்.
2. ஸஃபர்
3. ரபீவுல் அவ்வல்
4. ரபியுல் ஆகிர்
5. ஜமாத்துல் அவ்வல்
6. ஜமாத்துல் ஆகிர் 
7. ரஜப்
8. ஷஃபான்
9. ரமலான்
10. ஷவ்வால்
11. துல்கஃதா
12. துல்ஹஜ் : இ‌ஸ்லா‌மிய ஆ‌ண்டி‌ன் ‌நிறைவு மாத‌ம் இது. இ‌ஸ்லா‌‌மிய ஐ‌‌ம்பெரு‌ம் கடமைக‌ளி‌ல் ஒ‌ன்றான ஹ‌ஜ் கடமை ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம் மாத‌ம் இது.

கிறித்துவ ஆண்டுக்கும் ஹிஜ்ரி ஆண்டுக்குமுள்ள வேற்றுமைகள்:

சூரியனைக் கொண்டு கணக்கிடப்பட்டு வரும் ஆண்டுக்கு இயேசு கிறித்து பிறப்பை மையமாக வைத்து கிறித்து பிறப்பதற்கு முன் (கி.மு.) என்றும், கிறித்து பிறந்த பின் (கி.பி.) என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன்படி 24 மணிநேர கால அளவினை ஒரு நாளுக்குச் சமமாக்கிக் கொள்கிறோம். கிறித்துவ ஆண்டுக் கணக்கு சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நாட்கள் பெரும்பாலும் 365 ஆகவும், ஹிஜ்ரி ஆண்டு சந்திர பெயர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு நாட்கள் பெரும்பாலும் 355 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த கணக்கின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு மாதம் அதிகரிக்கிறது. 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு வருடம் அதிகரித்து விடுகிறது எனவும் அறிகிறோம்.

இதன்படி, சூரிய ஆண்டு ஒரு குறிப்பிட்ட மாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட பருவம் என்று உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும். இதில் பெரும்பாலும் அதிக வேற்றுமை இருக்க முடியாது. பருவ காலங்களிலும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது. வசந்த காலம், கோடைக் காலம், மழைக் காலம், குளிர் காலம் ஆகியன கிறித்து ஆண்டின்படி குறிப்பிட்ட மாதங்களில் தோன்றுகின்றன. பருவங்கள் தோன்றுவது கொண்டே மனிதன் செயல்பட முடியும்.

ஆனால் அதேசமயம் ஹிஜ்ரி மாதங்களுக்கும், பருவங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. காரணம் மூன்று சூரிய ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ஹிஜ்ரி மாதமும், முப்பத்தாறு சூரிய ஆண்டுகளுக்கொரு முறை பன்னிரண்டு ஹிஜ்ரி மாதங்களும் சுற்றி வருகின்றன. பிறையாண்டுகளும், பருவ காலங்களும் மாறி மாறி வருகின்றன.

Saturday 27 October 2012


நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பு

சமூக வலைத் தளம் (Social Networking Site) என்பது ஒத்த கருத்துடையோர் அல்லது செயற்பாடையோரின் சமூகத்தை வளர்க்கவும் அவர்களிடையே உள்ள சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்தவும் வழிசெய்கின்ற ஓர் இணையச் சேவைத்தளமாகும். இவ்வகையான இணையத்தளங்கள் ஒத்த நோக்குடைய சமூகத்தை எப்போதும் ஒன்றாக இணைத்து வைத்திருத்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு பொதுவான சமூக வலைத் தளம் ஒவ்வொரு பயனர் குறித்த தகவல்களையும் (சுயவிவரம்), அவரது சமூக பிணைப்புகள் மற்றும் பல்வேறு சேவைகளையும் கொண்டிருக்கும். இந்த வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள், இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள வழிசெய்கின்றன. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் முன்னாள் பாடசாலை/கல்லூரி மாணவர்கள், ஒரே பணிஃபணியிடம், வாழிடம் போன்ற பகுப்புகளில் தங்கள் நண்பர்களை (தன்விவர குறிப்புக்கள் மூலம்) அடையாளம் காணக்கூடிய தளங்களையும் நம்பிக்கைக்குரிய பரிந்துரை அமைப்புகளை வழங்கும் அமைப்புகளையும் கொண்டுள்ளன. இவற்றில் உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப் படுபவையாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் என்பன உள்ளன. மேலும் ஆர்க்குட் , லிங்டின் மற்றும் கூகுள்10 போன்ற பல தளங்கள் உள்ளன.

பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர்.

முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல், முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.

முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப் படுகிறது. முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு.

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முகநூலில் பல நண்மைகளும் தீமைகளும் உள்ளன. இதனைப் பயன்படுத்துவோர் கையிலே அவை உள்ளன. ஒத்த கருத்துடையோர் அல்லது ஒத்த செயற்பாடையோர் நண்பர்களாக இணையும் போது பெருமளவில் பிரச்சினை ஏற்படுவதில்லை. மாறாக தெரியாதவர்கள் அல்லது ஒவ்வா கருத்துடையோர் அல்லது ஒவ்வா செயற்பாடையோர் இணையும் போதே பிரச்சினைகள் எழுகின்றன. சங்கடங்கள் எழுகின்றன. எனவே எமக்கு நன்கு தெரிந்த நண்பர்களை உறவுகளை ஒத்த கருத்துடையோரை அல்லது ஒத்த செயற்பாடையோரை மாத்திரம் எமது பக்கத்தில் இணைத்து வைத்திருப்போம்.

Thursday 30 August 2012

கலைச்சாரல்: என்றும் உங்கள் ஆதரவை நாடி!

கலைச்சாரல்: என்றும் உங்கள் ஆதரவை நாடி!

வாழ்த்துக்கள் சோதரி
நிச்சயம் உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
உங்கள் சேவை சிறப்பாக அமைய எங்கள் துஆக்கள்

Saturday 16 June 2012

அரபுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்படும் கலாநிதி முஹம்மது முர்ஸி - புன்னியாமீன்

 மக்கள் புரட்சியின் பின் எகிப்தின் மக்களாட்சிக்கான 
                                          முதலாவது  ஜனாதிபதித் தேர்தல்.

                        அரபுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்பார்க்கப்படும் 
                                                   கலாநிதி முஹம்மது முர்ஸி  
                                                                   

மக்கள் புரட்சியின் மூலம் " முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர் எகிப்தில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 2012 மே மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். எகிப்தின் அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவியை பெற்றுக்கொள்ள மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் எந்தவொரு வேட்பாளரும்  ஐம்பது சதவீத பெரும்பான்மையைப் பெறவில்லை. இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேட்பாளர் கலாநிதி முஹம்மது முர்ஸி 5764952 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 24.7 வீதமாகும். முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஸபீக் 5505327 வாக்குகளுடன் (23.6வீதம்) இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதன்படி எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மீள் சுற்றுத் தேர்தலில் இருவரும் போட்டியிடுகின்றனர். பல தசாப்தங்களாக எதிரும் புதிருமாக இருந்துவந்த இரண்டு அணிகளை இந்த இரண்டு வேட்பாளர்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் கலாநிதி முர்ஸிக்கு ஆதரவளிப்பதாக எகிப்திய தஃவா ஸலபிய்யா அமைப்பின் சுறா சபை அறிவித்துள்ளது. அதேவேளை முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வும் தனது ஆதரவை முஹம்மது முர்ஸிக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எகிப்திய மக்கள் எழுச்சியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸியை தாங்கள் கருதுவதாக பொது வாலிப எழுச்சி அமைப்புகள் அறிவித்துள்ள அதேவேளை அஹ்மத் ஸபீக்கை எகிப்திய சர்வாதிகார ராஜாங்கத்தின் எச்சம் என்றும் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல இது ஒரு அரசியல் தீர்ப்பு” என்றும் தெரிவித்துள்ளன.

எகிப்திய ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் நீதியைத் தெரிவு செய்யுமாறு அனைத்து எகிப்தியர்களையும் அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி கோரியுள்ளார். தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோருவது குறித்து எச்சரித்த அவர் அப்படிச் செய்வது சாட்சி சொல்ல மறுப்பதைப் போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் எகிப்தில் இரண்டாம் கட்ட தேர்தலில்  வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக இஃவான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி கருதப்படுகின்றார். எகிப்தில் மட்டுமல்ல முஸ்லிம் உலகிலும் இவர் வெற்றி பெறவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இவர் வெற்றி பெறுவது முஸ்லிம் உலகின் எழுச்சிக்கு வித்தாகலாம் என்பது சிலரின் வாதமாகவும் உள்ளது.

கலாநிதி முஹம்மத் முர்ஸி இஹ்வான்களால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். அத்துடன் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ‘மக்தபுல் இர்ஸாத்’ என அழைக்கப்படும் உயர் வழிகாட்டல் சபையின் அங்கத்தவராகவும் இருந்தவர். அரசியல் கட்சி உருவாக்கப் பட்ட பின்னர், முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்காக இயக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் மக்தபுல் இர்ஸாதிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். ஹஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் இவர் முக்கிய பங்கெடுத்தார்.

எகிப்தின் கிழக்கு மாகாணமான ஸர் கிய்யாவில் அத்வா எனும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவரது முழுப் பெயர் முஹம்மத் முர்ஸி ஈஸா அய்யாத் என்பதாகும். 1975 இல் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் இளமாணிப் பட்டத்தையும் 1978 இல் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1982 இல் அமெரிக்காவிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.

கெய்ரோ பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் கடமையாற்றியுள்ளார். 1982 மற்றும் 1985 க்கு இடைபட்ட காலத்தில் கலிஃபோர்னியா வட ரிட்ஜ் (North Ridge in California) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் 1985 இலிருந்து 2010 ஆண்டுவரை சாகஜிக்  (The University of Zagazig) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூலப்பொருள்கள் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். எண்பதுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் (NASA)  கடமையாற்றியுள்ளார். இங்கு “உலோகங்களில் metal surface treatment” என்ற துறையில் அதிக ஆய்வுகள் செய்துள்ளார்.

கலாநிதி முர்ஸி கடின உழைப்புக்கு பெயர் போனவர். அவர் பணியாற்றிய பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்போடு செயற் பட்டு, சிறந்து விளங்கினார். சிறந்த அரசியல் தலைவரான அவர், தனது ஆற்றல்களையும் திறன்களையும் நடைமுறையில் நிரூபித்தார். அதன் மூலம் ஒரு உறுதியான ஆற்றல் மிக்க, தீர்க்கமான இஸ்லாமிய அரசியல் முற்போக்கு தலைவராக உருவாகியுள்ளார் . இவர் நடைமுறை உற்பத்தி தீர்வுகள் தொடர்பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.

சர்வாதிகார அடக்குமுறைகளையும் மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்தமையினால் முர்ஸி பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ளார். 2005 தேர்தல் முறைகேட்டுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் ஆளானபோது, அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலாநிதி முர்ஸி முக்கிய பங்கெடுத்தார். அவர் நீதிபதிகளின் சுதந்திரத்தை ஆதரித்து செயற்பட்டார். தேர்தல் ஊழல்கள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசிய நீதிபதிகளைத் தண்டிப்பதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். 2006 மே 18 ஆம் திகதி கலாநிதி முர்ஸி மக்கள் விரோத இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு ஏழு மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்.


அவர் எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் ஜனவரி 28, 2011 அன்று ‘கோபத்திற்குரிய வெள்ளிக்கிழமை’ காலை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் பெருந் தொகையான இஹ்வான்களும் கைதுசெய்யப்பட்டனர். எகிப்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இஹ்வான்களைக் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவே இது இருந்தது. புரட்சியின்போது சிறைகள் உடைக்கப்பட்டு, கைதிகள் பலர் தப்பினர். ஆனால் எப்போதும் எல்லாவற்றிலும் ஒழுங்கு முறைகளை மட்டுமே பேணும் முஹம்மது முர்ஸி அவரது சிறை கூடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். அங்கிருந்தவாறு செய்மதி, தொலைக்காட்சி மற்றும் செய்திச் சேவைகளை தொடர்புகொண்ட அவர்,  நீதித்துறை அதிகாரிகளை சிறைக்கு வந்து, கைதுசெய்யப்பட்ட இஹ்வான் தலைவர்களது சட்டநிலை தொடர்பாக ஆராயுமாறு வேண்டினார். ஆனால் எவரும் அங்கு சென்று பார்கவில்லை.

கலாநிதி முஹம்மது முர்ஸி மட்டுமல்ல ஹ{ஸ்னி முபாரக்கின் அநியாயம் அவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை . அவரது மகன், டாக்டர் அஹமத் 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனது தந்தை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்டமன்றத்தில்’ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக மிகவும் தாக்கமுள்ள, செல்வாக்குள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் . மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் . இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்திற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானார். 2005 பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவின்போது கலாநிதி முர்ஸி, தனக்கு அடுத்து வந்த வேட்பாளரை விடவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றார். ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தபோது அவரது போட்டி வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

கலாநிதி முர்ஸி இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் பிரிவில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர். அத்துடன் அந்தப் பிரிவின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். 2004 இல் இயக்கம் முன்னெடுத்த சீர்திருத்த முனைப்பின்போதும், 2007 இல் வெளியிட்ட அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின்போதும் இயக்கத்தின் அரசியல் பிரிவு முக்கிய பங்கு வகித்தது. 2010 பாராளுமன்றத் தேர்தலின்போது அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவதில் அவர் முன்னணியில் இயங்கினார்.

மீண்டும் எகிப்தில் சு10டுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் களத்தில் பிரகாசமாக மின்னும் தாரகையாக கலாநிதி முஹம்மது முர்ஸி வெளிப்படுகிறார். இன்னும் சில தினங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இவர் பற்றிய வெற்றி அறிவிப்பை இஸ்லாத்தின் ஒரு கட்ட அரசியல் வெற்றியாக கண்டுகொள்ள முடியும் என எகிப்தும் அரபுலகும் எதிர்பார்த்துள்ளது.

Monday 11 June 2012

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour – புன்னியாமீன்


சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour  ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.


பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ,  மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ஆம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை பாரிய குற்றமாகும். இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும்,  இளைஞர் 14 – 16 என்றும் வரையறுத்துள்ளது. 1989இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார்கள்.


எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன. சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும்  மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.

யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.


சிறுவர் உரிமையில் சில  அம்சங்களை கீழ்வருமாறு  சுருக்கி நோக்கலாம். இங்கு வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.

உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம். கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை போன்றவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 1989 நவம்பர் 20 – இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.




2007 இல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள “சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்” (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிஉலகிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,

2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.

2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; சுமார் 75% ஆனோர் ஆண்கள்
80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.
குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.



உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.
வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.

2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.

15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.
இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். [unicef.org]

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ஆம் ஆண்டு முதலரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த முப்பதாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம்.

மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.

இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன.

‘குழந்தைத் தொழிலாளர் அவலம்’ குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியக் கணக்கில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்.

1986 இல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதைத் தடை செய்தது. 1997 இல்  ‘abolision act’ என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ள. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் ‘விவசாயம்’. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில்தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும். சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லை

எடுத்துக்காட்டாய், ஒரு ‘குழந்தைத் தொழிலாளி’ பற்றிய புகாரை  சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர் தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பத்து வயதைக் கடந்தவர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன. அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன.

பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.

இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அதிலும் பெருந்தோட்டத்துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப்பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும்.

Saturday 12 May 2012

அன்னையர் தினம் – புன்னியாமீன்

அம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும்,தொணிகளும்  ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother’s Day ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஒரு பெண்ணானவள் மகளாக,  சகோதரியாக,  தாயாக, தாரமாக,  தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது;  தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப்  போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

“அன்னையர் தினம் ” Mother’s Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.  அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் – கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வ‌ண‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகின்றது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளு‌க்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ந் தேதி மூன்று நாள் விழா நட‌த்‌தின‌ர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மா‌றியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் 20ஆம்   நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற இடத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ரீவிஸ் என்பவரின் மகள்தான் “அன்னா மரியா”. அன்னா என்று அழைக்கப்பட்ட அவர் 1852 – ஆம் ஆண்டு ‘கிரான்வில்லி ஜார்விஸ்’ என்பவரை திருமணம் செய்து கொண்டு மேற்கு விர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் என்னும் இடத்திற்கு குடியேறினார். அன்னாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தைக்கு பார்வை கிடையாது.

அன்னா வாழ்ந்த காலகட்டங்கள் போர்களும், சண்டை, சச்சரவுகளும் அமெரிக்காவில் அதிகமிருந்தது. அதனால் சுகாதார வசதி குறைவுகளும், உணவு பற்றாக்குறைகளும், பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டும், தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இரக்க சுபாவமுள்ள அன்னா ஏதாவது செய்தாக வேண்டுமே என்று தோன்றியது. அந்த காலகட்டத்தில்தான் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக பெண்கள் நலச் சங்கங்களை தொடங்கினார். பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை அனுப்பி உதவி செய்தது. பல பொது சேவைகளையும் செய்தது. மேலும் பிலிப்பி, ப்ருண்ட்டிடவுன் பெட்டர்மேன், வெப்ஸ்டர் போன்ற நகரங்களிலும் சங்கங்கள் அன்னா உருவாக்கினார். அந்த காலக்கட்டத்தில்தான் அன்னாவின் இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. பார்வையற்ற பெண் குழந்தை மட்டுமே மிஞ்சினாள்.

மனம் தளராத அன்னா மேலும் சுகாதார கேடுகளை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்தார். சுகாதாரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சங்கம் அமைத்து வழி நடத்தினார். பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அன்னா தீவிரமாக களம் இறங்கினார். யுத்தத்தில் படுகாயம் அடைந்த வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டு வந்து வைத்து மருந்திட்டு, உணவு, உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார். யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் இறந்த போது, அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் போராடினார் அன்னா.

தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார். அப்போது அன்னாவின் வயது 72. பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதைக்கப்பட்டபோது அவருடைய 72 வது வயதைக் குறிக்கும் வகையில் “கிராப்டன் ஆன்ரூஸ்” சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது!

இவரின் மகள்  ஜார்விஸ் Jarvis  முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907 – ஆம் ஆண்டு மே மாதம் 10 – ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தினார். 1908 – ஆம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். 1909-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 – மாநிலங்கள், போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து ஜார்விஸ் Jarvis  1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து,  நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் Anna Jarvis  திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் “அன்னையர் தினம்” கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இவரின் வேண்டுகோளையும்,  நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் Woodrow Wilson   1914ம் ஆண்டு  வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை  அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க  காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல  46 நாடுகள் இதே நாளில் “அன்னையர் தினம்” என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமன நிறைவடையவில்லை.  46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

உலகம் முழுக்க “அன்னையர் தினம்” அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்களின் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  தற்போது அன்னையர் தினம் என்பது ஒரு வியாபார தினம்போல் மாறிவிட்டது கவலைக்குரியதே. அன்னையர் தினம் வருவதற்கு முன்பு அல்லது அன்னையர்களை கௌரவிக்கவும்,  மகிழ்விக்கவும் பல நூற்றுக்கணக்கான வியாபாரப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றை விற்பனை செய்வதிலேயே முழு அளவில் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் இத்தினத்தை வியாபாரப் பொருளாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு “அன்னையர் தினம்” அன்று “அன்னா மரியா” படத்தினை கொடிகளில் பதித்தும், செயின் டாலர்களில் படத்தை பதித்தும் வியாபாரமாக்கியது. இதனையறிந்த ஜார்விஸ் வெகுண்டெழுந்தார். 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் “செண்டிமெண்ட்” நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் பணம் திரட்டும் நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதிட்டார். ஈற்றில் வெற்றி பெற்றார். எனவே,  அன்னையர் தினம் என்பதை உள்ளார்த்தமாக உணர்வுபூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜார்விஸ் எதிர்பாரத்தாரேயன்றி அது ஆடம்பரமாகவும், பணத்தை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகின்றது.

எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை அனுஸ்டிப்போம்.

சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம். (International Nurses Day) – புன்னியாமீன்

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12 ஆம் திகதியும் சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்  (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland)  என்பவர் இத்தினத்தை  செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர்  நிராகரித்துள்ளார். இருப்பினும் 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்  (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் (தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். “செவிலியர்கள்” உலக அரங்கில் அங்கீகரிக்கபடுகிறார்கள். இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்தகால வைத்தியசேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது.

மறுபுறமாக ‘தாதியார்தினம்’ என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘விளக்கேந்திய சீமாட்டி’, ‘கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார்.

பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். இவரின் தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1789-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்) (1794- 1875). புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார். ‘எம்ப்லீ பார்க்’ இது  புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடமாகும்.

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் புள்ளிவிபரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் புள்ளி விபரங்களை அதிகளவில் பயன்படுத்தினார். தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார். 1858 இல் பதவியேற்றதன் மூல அரச புள்ளிவிபரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார். அதேபோல இவர் ஒரு எழுத்தாளருமாவார்.

ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ‘இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே’ தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார். பெற்றோர் அக் கல்வி நெறியைப் பயில மறுப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் அறிக்கையிடுதல் சார்பான கல்வி நெறியைப் பயில ஊக்கமளித்தனர். இதனை மறுதலித்து நோயாளர்களைப் பராமரி க்கும் கல்வி நெறியை மேற்கொண்டு மூன்றா ண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், எதிர்ப்புக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து தன் வாழ்நாளையே தாதிச் சேவையில் இவர் இணைத்துக் கொண்டமை இவரது உள விருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதற்கான அடையாளப்படுத்தலாகவும் கொள்ளப்படுகின்றது.

அக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலையாட்களாகவும் உயர்குடும்பங்களில் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் இவர் ஜேர்மனி சென்றார். அங்கு கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் வழங்கப்படும் கவனிப்புகளும், மருத்துவச் சேவைகளும்  இவரை மிகவும் கவர்ந்தன. 1851 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 4 மாதங்களாக  ஜெர்மனியில் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் இவர் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார்.

பின்னாளில்- சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராகப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார் எனக் கூறப்படுகின்றது.

1854ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. இப்போரின் போது லண்டன் டைம்ஸ் உட்படப் பல முன்னிலைத் தினசரிகள் கிரிமியாவில் காணப்படும் பரிதாபகரமான நிலைமைகளையும் காயமுற்றோரும் ஊனமுற்றோரும் முறையாகப் பராமரிக்கப்படாமை சார்பாக பல கட்டுரைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்டன.

இந்த யுத்தப் பகுதியில் போதியளவு சத்திர சிகிச்சை நிபுணர்கள், தாதிமார்கள், மருந்து வகைகள், மருந்துத் துணிகள் இல்லாமை பற்றி மனிதாபிமானத்தோடு சுட்டிக்காட்டி டைம்ஸ் தினசரி கட்டுரை வெளியிட்டது. இதனை வாசித்த புளோரன்ஸ் அதிர்ச்சியும் கவலையும் கொண்டார். கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 தாதியருடன் இராணுவ வைத்திய சாலைக்குச் சென்றார். பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். தனதன்பினாலும் சிகிச்சைகளாலும் புளோரன்ஸ் படையினரைக் குணப்படுத்தினார். ஒரே தடவையில் பெருமளவு காயப்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வேளை இடைவிடாது அவர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். இரவு வேளைகளில் கையில் விளக்கொண்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று சுகம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தம்மைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு வந்துள்ளது என இராணுவவீரர்கள் புளோரன்ஸைக் கெளரவித்தனர். விளக்கேற்றிய பெருமாட்டியை ‘Lady with the Lamp’ என வர்ணித்தனர்.1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.

இந்தப்போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது. பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும், சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருந்துத் தட்டுப்பாடும், குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing),  “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்” (Notes on Matters Affecting the Health),”பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார். விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். அத்துடன், அரசாணைக் குழுவிற்கு இவர் சமர்ப்பித்த அறிக்கையில் படை வீரர்களின் இறப்புக்கு படைவீரர்களின் வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமென எடுத்துரைத்தார்.   பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

துருக்கியிலிருந்த போது நவம்பர் 29, 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் ‘தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்’ நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் துணையுடன் புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9, 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியியல் மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் புளோரன்ஸின் அரும்பெருஞ் சேவைகளை அறிந்த இங்கிலாந்து மன்னர் பாம் எட்வேட் ‘Order of Merit’ எனும் பட்டத்தை வழங்கி புளோரன்ஸைக் கெளரவித்தார். உலகில் இப்பட்டத்தைப் பெற்ற முதலாவது பெண்மணியெனும் பேரும் புகழும் இவருக்கே உரித்தாகும்.

அதீத களைப்பு ஏற்படல் (Chronic Fatigue Sydnrome) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாகவும் உள்ளது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். ஆகஸ்ட் 13, 1910 இல் இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) புதைக்க அரசு முன்வந்தது. 

ஆனால் அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன. ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு ‘பெட்சைட் புளோரன்ஸ்’  (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புகழ் பெற்றிருந்தைப் போலவே  இங்கிலாந்தின் பெண்ணியத்திலும் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார். 1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை “சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்” என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப் படவில்லையாயினும் ‘கசான்ட்ரா’ எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணியல் வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

எனவே இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.

Thursday 26 April 2012

அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) - புன்னியாமீன்


இன்று ஏப்ரல் 26ஆம் திகதி. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ஆம் திகதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டு பிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO)  2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001 இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 26 ஆம் திகதி இத்தினத்தின் நிகழ்வுகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தன்று கருத்தரங்குகள், கூட்டங்கள்,  விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்,  பிரசார நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது.


சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் எனும்போது மனிதனின் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தை வழங்கி அக்கண்டுபிடிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கத்தை வழங்கும் அதேநேரத்தில் கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளும் இத்தினத்தன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. அதேபோல  கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விசேடமாக இத்தினத்தன்று மின்விளக்கைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன்ää கணனி மென்பொருளைக் கண்டுபிடித்த புலோரியென் மியுலர் மற்றும் பிரச்சினைகளுக்குரிய விடயங்களை நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஹியுலெடி சுப்பர்மேன் ஜெரிமி பிரிப்ஸ் ஆகியோர் இத்தினத்தன்று விசேடமாக நினைவுகூரப்படுவர்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகக் குறைவு. இடைக்கிடையே ஒரு சில கருத்தரங்குகள்,  பதாதைகள் மூலம் நிகழ்ச்சித் திட்டத்தை முடித்துக் கொள்கின்றன. உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு தேவைப்படக்கூடிய ஒரு விடயத்தை கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளர் அல்லது சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு ஆக்கத்தை முன்வைக்கக்ககூடிய கலைஞர் அல்லது ஓவியன் இத்தினத்தன்று பிரபல்யப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படுபவனாக இருந்தால், இந்நிகழ்ச்சித் திட்டத்தில் யாராவது ஒருவராவது பயனையடைந்த திருப்தி இருக்கலாம். எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

உசாத்துணை

http://www.wipo.int/ip-outreach/en/ipday/2012/
http://www.wipo.int/pressroom/en/articles/2012/article_0007.html
http://www.prnewswire.com/news-releases/world-intellectual-property-day-salutes-visionary-innovators-149024745.html
http://www.wipo.int/ip-outreach/en/ipday/archive.html

Monday 23 April 2012

ஏப்ரல் 23 – உலக நூல் மற்றும் பதிப்புரிமை (World Book and Copyright Day) தினம் : புன்னியாமீன்


உலக நூல் மற்றும் பதிப்புரிமை  (World Book and Copyright Day)  தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.

“நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு” என புத்தகங்களின் அருமை பெருமைகளையும் அதனைக் கற்பவனின் மாண்பினையும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறள் மூலம் கூறுகின்றார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் முன்னேற்றம் பெருமளவில் நூல் வெளியீட்டிலும் வாசிப்புப் பழக்கத்திலுமே தங்கியிருந்தன. அந்நாடுகள் தெளிவான நூல்வெளியீட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தமை இதற்கு அடிப்படையாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகளில் இத்தகைய திட்டவட்டமான நூல்வெளியீட்டுக் கொள்கைகள் இருக்கவில்லை. இது வாசிப்புப் பழக்கத்திலும் ஒரு குறைபாட்டினை தெளிவுபடுத்தியது. அறிவானது ஒருவனுக்கு ஆண்டவனால் வழங்கப்படும் மாபெரும் அருட்கொடையாகும். வாசிப்பானது அறிவினைப் பெருக்கும் ஊற்றுமூலமாகின்றது. எனவேதான் வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது எனக் கூறுவர். இதற்கு அச்சாணிபோல அமைவதும் பங்களிப்புகளைப் புரிவதும் புத்தகங்களாகும். இவை மனிதனை அறிவின்பால் திசை திருப்புகின்றன. இதனை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1972ம் ஆண்டினை சர்வதேச நூல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி மூன்றாம் உலக நாடுகள் தமக்கென நூல் கொள்கைகளை உருவாக்கியது.

இருந்தும் சர்வதேச நூல் ஆண்டில்  குறிப்பிட்ட இலக்கை எய்தாத  நிலையில் பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் 28ஆவது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஏப்ரல் 23ம் திகதியை உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினமாகப் பிரகடனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அறிவைப் பரப்புவதற்கும் உலகெங்கிலுமுள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதினால் ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் 23ஆம் தினத்தன்று இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

யுனெஸ்கோவுடன் இணைந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்பு நல்கி வருகின்றன. இவற்றுள் நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions) அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association) உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் ஆகியவற்றின் பங்களிப்புகள்  குறிப்பிடத்தக்கவை.

இங்கு நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (The International Federation of Library Associations and Institutions (IFLA)) எனும்போது நூலக மற்றும் தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்தில் ஒலிப்பதற்காக 1927 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற அனைத்துலக மகாநாடு ஒன்றில் இவ்வமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது. இதன் தலைமையகம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரிலுள்ள, நெதர்லாந்து தேசிய நூலகமான, ரோயல் நூலகத்தில் இயங்கி வருகிறது.

உலக நூல் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படும் ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம் என்ன என்பதை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற நாடக எழுத்தாளரான வில்லியம் ஷேக்ஸ்பியர் மரணித்தார். 1951 ஆம் ஆண்டில் – சார்ல்ஸ் டோவ்ஸ், (நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்- பிறப்பு 1865) மற்றும் இந்தியாவில் 1992 – சத்யஜித் ராய்,  (உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் -பிறப்பு 1921) போன்றோரும் மரணித்த தினம் இதுவாகும்.

இதே நாளில் 1858 – மாக்ஸ் பிளாங்க்,  (நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் – இறப்பு 1947) 1867 – ஜொகான்னெஸ் ஃபிபிகர்,  (நோபல் பரிசு பெற்றவர்- இறப்பு 1928) 1897 – லெஸ்டர் பியர்சன்,  (நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் – இறப்பு. 1972) 1902 – ஹால்டோர் லாக்ஸ்னெஸ்,  (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் -இறப்பு 1998) போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்துள்ளனர்.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும்,  பெண்களும் புத்தகத்தையும்,  ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே ஏப்ரல் 23ம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவந்தாலும் கூட,  அச்சு ஊடகங்கள் அறிவை வழங்குவதற்கும் தகவலைப் பரப்புவதற்கும் மிக முக்கிய சாதனமாகத் தொடர்ந்துமிருப்பது உணரப்பட்டுள்ளது. நூல்களும் மற்றும் எழுத்து ஆவணங்களும் மக்களின் முதுசொங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கும் பிற் சந்ததியினருக்கு அவற்றை வழங்குவதற்கும் பொருத்தமான கருவிகளாக அமைந்துள்ளன. இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக இவை பேணப்பட்டாலும்கூட, அச்சு ஊடகங்களில் காணப்படும் நம்பகத்தன்மையைப்போல் இவையிருப்பதில்லை என்பது பரவலான கருத்தாகும். எனவேதான் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட அச்சு ஊடகங்கள் தொடர்ந்தும் தனித்துவ வளர்ச்சி கண்டு வரும் அதேநேரத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் மேலும் முன்னேறிக் காணப்படுகின்றன. 

அதேநேரம், அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகளில் மிகத் தாமதமாகவே அச்சு ஊடக வளர்ச்சி நடைபெறுகின்றது. இதற்குக் காரணம் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் தேசிய ரீதியில் நூல் வெளியீட்டுக் கொள்கை ஒன்று காணப்படாமையே. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தமக்கென நூல் வெளியீட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள யுனிசெப் தொடர்ச்சியான ஆலோசனைகளை கூறி வருவதுடன் அதற்கான குறிக்கோள்களையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.

மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா, சிங்கப்பூர், நைஜீரியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில் தலைசிறந்த நூல் வெளியீட்டு நாடுகளாக திகழ்கின்றன. அண்மைக்காலமாக இலங்கையும் நூல் வெளியீட்டில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இருப்பினும் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் நூல் வெளியீட்டின்போது சர்வதேச தராதரங்கள் பேணப்படாமை இன்றுவரை காணப்படக்கூடிய ஒரு குறைபாடாகவே உள்ளது. குறிப்பாக அச்சகங்கள் இலாப நோக்கத்தைக் கருத்திற்கொண்டு செயற்படுவதினால் நூல்களின் அச்சீட்டுத் தரம் பெருமளவுக்கு குறைவடைகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

விசேடமாக இந்தியா,  இலங்கை போன்ற நாடுகள் சர்வதேச புத்தக தராதர எண்ணை (ISBN) பெற்றுக்கொள்வதில் கரிசனை காட்டுவதில்லை. இந்நாடுகளில் அச்சிடப்படக்கூடிய ஏனைய மொழி நூல்களைவிட தமிழ்மொழி நூல்களில் இத்தகைய குறைபாட்டினை பெருமளவுக்குக் காணலாம். கலை, விஞ்ஞான,  இலக்கியப் படைப்புக்களின் பதிப்புரிமை சம்பந்தமான பேர்ண் உடன்படிக்கைக்கும் (1886) , 1979ஆம் ஆண்டின் 52ம் இலக்க Code of intellectual Property Act எனப்படும் அறிவாண்மைச் சொத்துகள் கோவைச் சட்டத்துக்கும் அமைய நூல் வெளியீடுகள் பாதுகாப்பைப் பெற வேண்டும்.

பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் வாசகர்களை வாசிப்புத்துறையில் ஈடுபடுத்தும்முகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகப் பெரும் பணியாகக் காணப்படுகின்றது. புத்தகங்கள் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்களை இவ்விடத்தில் தொகுத்து நோக்குவது பயனுடையதாக இருக்கும்.

வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்தவை புத்தகங்கள் தான் – சார்ல்ஸ் கிங்ஸ்,  நூலகம் மூளைக்கான மருத்துவமனை – யாரோ,  பிரதிபலிக்காத வாசிப்பு,  ஜீரணிக்காத உணவினைப்போன்றது – எட்மண்ட் ப்ரூக்,  புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும் தோட்டம் – சீனப் பழமொழி, சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல. அது நாம் நுழைய முடியாத உலகிற்று அழைத்துச் செல்லும் காட்சி-யாரோ, புத்தகங்கள் நாட்டின் மதிக்க முடியாத சொத்து – அடுத்த தலைமுறையினருக்கு தரப்போகும் சிறந்த சொத்து – ஹென்றி. மேற்படி சில கருத்துக்கள் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

‘என்னை என்றும் எப்போதும் எச்சமயத்திலும் கைவிடாத நண்பனாக புத்தகங்கள் திகழ்கின்றன’ என மறைந்த பாரதப் பிரதமர் நேருஜியின் கருத்தும் ‘புத்தகம் போன்றதொரு சிறந்த நண்பன் மனிதருக்கு எவருமில்லை’ என ராஸ்கி என்பார் நவின்ற கருத்தும் ‘எனது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது’ என ஒரு கல்வியியலாளர் செப்பிய கருத்தும் புத்தகங்களின் அவசியத்தை எடுத்தியம்புகின்றன.

18ம் நூற்றாண்டில் தோமஸ் ஹேம்ட்வூர் மற்றும் பிரோய் போன்றவர்களின் அயராத உழைபினால் கிராமிய நூலகங்கள் உருவாகின. இக்காலப்பகுதியில் வில்லியம் எட்வேர்ட் என்பவர் மக்களுக்காக பொதுநூலகங்கள் மக்களால் நடத்தப்படவேண்டும் எனும் கோட்பாட்டில் பெரும் வெற்றிகண்டார். 1900.08.04ம் திகதி பெரிய பிரித்தானியாவில் நூலகச் சட்டம் அமுலாக்கப்பட்டது.

இவ்விடத்தில் இலங்கையின் தமிழ்மொழி புத்தக வெளியீடு சம்பந்தமாக சில கருத்துக்களையும் பதிவாக்குதல் வேண்டும். இலங்கையில் தமிழ்மொழி நூல் வெளியீட்டுக்கான தனிப்பட்ட நிறுவனங்கள் மிகக் குறைவு. இலங்கையில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக செயற்பட வேண்டிய நிலைப்பாடு உண்டு. இந்தியாவைப் போல ஒரு எழுத்தாளரால் பதிப்பிக்கப்படக்கூடிய நூல்களை கொள்வனவு செய்ய அரச மட்டத்தில் நிலையான திட்டங்களில்லை. எனவே ஒரு தமிழ் நூலை வெளியிடக்கூடிய எழுத்தாளன் தான் அச்சிட்டப் புத்தகங்களை சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் நட்டப்படும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

இலங்கையில் இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றன சுமார் 5000 ரூபாவுக்கு உட்பட்ட தொகையில் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்தாலும்கூட, இங்கு ஒரு தேசிய கொள்கையின்மை காரணமாக இனவாதம்,  பிரதேசவாதம், அரசியல் செல்வாக்கு என்பன ஆதிக்கம் செலுத்துவதால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள்.

மறுபுறமாக ஒரு தேசிய கொள்கையின்மையாலும்,  மேற்படி திணைக்களங்களின் அடாவடித்தனப் போக்கினாலும் இலங்கையில் காணப்படக்கூடிய யுத்த நிலை காரணமாகவும் இலங்கையின் தமிழ்மொழி நூல் வெளியீடு என்பது ஒரு நீண்ட இடைவெளியை வளர்க்கப் போகின்றது என்பது உறுதி.

உசாத்துணை:
http://www.unesco.org/new/en/unesco/events/prizes-and-celebrations/celebrations/international-days/world-book-and-copyright-day-2012
http://www.un.org/en/events/bookday/
http://archive.ifla.org/VI/1/conf/worldbook.htm
http://news.xinhuanet.com/english/photo/2012-04/23/c_131545640.htm
https://www.facebook.com/pages/The-World-Book-and-Copyright-Day-23-April/117151158310065

Saturday 21 April 2012

புவி தன் சமநிலையை இழக்க மனிதர்களில் அலட்சியப் போக்கே காரணம் - புன்னியாமீன்


 மனிதர்களில் அலட்சியப்போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் சனத்தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகிறது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையை புவி இழந்துள்ளது. போர்ச் சூழலினாலும் அணுப் பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர்நோக்குகின்றது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே சர்வதேச புவிதினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

சர்வதேச புவிதினம் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற்கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ம் திகதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ம் திகதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன் கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி, நீர்வீழ்ச்சிகள், காடு, கழனி, வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியவசியமானவை.

வானம் பூமி வளிமண்டலம் ஆதவனின் ஒளி சந்திரனின் குளிர்ச்சி, மலையின் சிருங்காரம், காலையின் கனிவு, மரம், செடி, கொடிகள், தரை வாழ், கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், அத்தனையும் இயற்கையின் அணிகலன்கள். மனிதன் வாழ்க்கையை வளமாக நடத்துவதற்கு அத்தனையும் தேவையானவை. இந்தச் சுற்றாடல் தொகுதி புவியின் சமநிலையைப் பேணி வருகின்றது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் தன்மையை மாற்றி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

பூமி- மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம்தான் இந்த எழில் கொஞ்சும் இயற்கை. குறிப்பாக அயன மண்டல மழைக்காடுகளைக் குறிப்பிடலாம் இந்த மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது: ஏனைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள் −இயற்கையின் புதையல்களாகவே இருக்கின்றன.

இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, பிரேசில், கொலம்பியா, பொலிவியா, பேரு, வெனிசுலா, மலேசியா… என்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே மழைக்காடுகள் காணக் கிடைக்கின்றன.

இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில் (இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர – விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராளமான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு, சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடுகளில்தான் இராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் மலேரியா நோய்க்குரிய ஒரேயொரு தீர்வாக இருந்த ‘குயினைன்’ பெறப்பட்ட தென் அமெரிக்காவின் சிங்கோனா மரம் தொடங்கி- குருதிப்புற்று நோய்க்கு மருந்தாகும் மடகாஸ்கரின் பட்டிப்பூ ஊடாக- இன்னமும் மனிதனை வதைத்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தாகக் கண்டறியப்பட வேண்டிய ஏராளமான தாவரங்கள் வரையில் கொண்டிருக்கும் முழு உலகுக்குமான ‘மருத்துவ அலுமாரியாக இயற்கை, மழைக்காடுகளையே உருவாக்கியிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரானவை என அடையாளம் காணப்பட்ட 3000 க்கும் அதிகமான மூலிகைகளில் 70 சதவீதம் வரை இந்தக் காடுகளிலேயே காணப்படுகின்றன.

உலகம் பூராவும் உள்ள மழைக் காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக் காடுகளின் நிலைத்திருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது. ஏராளமான இரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் ‘சாவி’ காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர- விலங்கினங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாய்லாந்தின் லுஆ (Lua) பழங்குடியினர் மாத்திரமே 75 விதமான உணவுப் பயிர் வகைகளையும் 25 வகையான மூலிகைகளையும் இனங்கண்டு பயிரிடுகிறார்கள் என்றால் உலகம் பூராவும் உள்ள மழைக்காட்டுப் பழங்குடிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரபணு வளங்களைக் கற்பனை செய்ய இயலாது.

ஆண்டுக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் மழைக் காடுகள் நீர்ச்சுழற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத்தொடர்தான் இந்த மழைக்காடுகள்.


ஆனால், இவ்வளவு இருந்தும் பொன் முட்டையிடும் வாத்தாக மழைக்காடுகள் படிப்படியாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் மனிதன் படிப்படியாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றான்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்று கூறும் அளவிற்கு குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மனிதனின் கொடுரப்பிடிக்குள் சிக்கி படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாக பூமி சந்தித்தது கோரப்புயல்களும்; இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றனவையுமே. அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச்சமநிலைக் குலைவுகள் தான் ஏற்படுகின்றன.

‘பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முன்னால் எப்படிச் சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? என்று நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக்காற்றை ஜீரணிக்கும் சக்தி எங்கள் காடுகளுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் எங்கள் காடுகளைக் காப்பாற்றுவதற்கும், காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களுக்காகவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ சிந்திக்க வேண்டிய வினா தான். இதே வினாவைத்தான் வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிரேசிலில் 1992-ல் நடந்த பூமி உச்சி மாநாட்டிலிருந்து இன்னமும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.

அமிலப்படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றது. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் புவி உஸ்ணமடைவதுடன் சூழலையும் பாதிக்கின்றது. சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்க முடியும்.திட்டமிடாத காடழிப்பு மண் அகழ்வு விவசாயத்தில் அளவுக்கதிகமாக நச்சுத்திரவத்தை பயன்படுத்தல் இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்தல் தொழிற்சாலைக் கழிவுகளையும் வீட்டுக் கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றாமை ஆகிய செயற்பாடுகளால் சூழல் மாசடைகிறது.

மனிதன் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம்.

இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.அவ்வாறு இல்லாமல் எத்தகைய கோசங்கள் இடுவதாலும், எத்தகைய பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

நாம் உலகளாவிய ரீதியில் சிந்திக்காமல் எம்ரமைச்சூழவுள்ள வளங்களையாவது பாதுகாப்பதற்கு திட சங்கற்பம் பூணுவோம்.

உசாத்துணை:
http://www.earthday.org/
http://en.wikipedia.org/wiki/Earth_Day
http://www.un.org/News/Press/docs/2009/ga10823.doc.htm
http://therumpus.net/2009/04/the-rumpus-interview-with-denis-hayes/
http://www.kidzworld.com/article/3382-earth-day-cleaning-up-our-planet/

Tuesday 17 April 2012

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) - புன்னியாமீன்


நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனீசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.

எனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் அவற்றின் இருப்புகள் வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் மக்களுக்கு தேவைப்படுகிறது. இத்தினத்தில் மக்களுக்கு இது பற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) மிகச்சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச் சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடுபட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனமும் இதுவேயாகும்.

1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது.

உலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபாலனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது

இன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாக பெற முடிகிறது.

தொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணி பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.

உசாத்துணை:
* http://en.wikipedia.org/wiki/International_Day_For_Monuments_and_Sites
* http://18april.icomos.org/
* http://international.icomos.org/18thapril/2007/index.html
* http://www.unesco.org/new/en/natural-sciences/environment/water/single-view-fresh-water/news/18_april_international_day_for_monuments_and_sites_2011_cultural_heritage_of_water/

Wednesday 11 April 2012

வந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது மேல் – புன்னியாமீன்


2012 ஏப்ரல் 11ம் திகதி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியாவின் பல பகுதிகளிலும், இலங்கையிலும், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளி்லும் உணரப்பட்டது. இந்திய நேரப்படி 2012 ஏப்ரல் 11ம் திகதி பகல் 2 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியது. இதையடுத்து அந்தமன் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 2 முறை அதிக சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டுக்கும் மேலும் 27 நாடுகளுக்கும் முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு, பின்னர் மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டது. இறுதியாக மாலை நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

உலகளாவிய ரீதியில் காலத்துக்குக்காலம் ஏதோவொரு வகையில் மனிதகுலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பாடுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக்காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முன்னைய காலங்களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.

இயற்கை அழிவுகள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள்,  சூறாவளிகள்,  நில அதிர்வுகள்,  எரிமலை வெடிப்புக்கள்,  கடும் மழை,  வெள்ளம்,  கடும் வரட்சி…. இவ்வாறு இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதுவிடினும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும் அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் காலத்தின் தேவையாகும்.

இயற்கைப் பேரழிவுகளை எடுத்துநோக்கும்போது அண்மைக்காலங்களில் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இயற்கை நிகழ்வாக சுனாமிப் பேரலைத் தாக்கம் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை (சுனாமி:津 波.)  ‘ட்சு’ சுனாமி. தான் சுனாமி. ‘ட்சு” என்றால் துறைமுகம், ‘னாமி” என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட,  அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட புகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில்,  கடல் பகுதியில்,  மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப்,  பிரிய, அதன் தட்ப,  வெப்ப,  இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப,  பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம்,  கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட்,  ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும்,  இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது. அதேநேரம்,  சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.  கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின்போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும்,  கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும்,  மலையில் எரிமலைகள் தோன்றும்போதும்,   வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும்,  (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் பௌதீக மாற்றங்கள் ஏற்படும் போதும்,  விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும்.  கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடும் போதும். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.

கி.மு.,  365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி,  எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட்பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், முதன்முதலில் 1755ம் ஆண்டு,  நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்,  போர்த்துக்கல்,  ஸ்பெயின்,  மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 1883ம் ஆண்டளவில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா,  ஹவாய் பகுதிகளை தாக்கியது.

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது. இச்சுனாமி இலங்கை வரலாற்றிலும் பாரிய அழிவை ஏற்படுத்திய ஒன்றாக திகழ்கின்றது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா,  இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் இச்சுனாமியின் கொடூர அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின.

இச்சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள்,  பொருட் சேதங்கள்,  உட்கட்டமைப்புச் சேதங்கள்,  வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள். இச்சேதங்கள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே உரியன.

இலங்கையில் மாத்திரம் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 30, 977 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5, 644 பேர் காணாமற் போயுள்ளனர். 15, 197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது. இச்சுனாமியில் மாத்திரம் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவுகொள்ளப்பட்டுள்ளன.

உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78, 387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60, 197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை,  மட்டக்களப்பு,  அம்பாந்தோட்டை,  காலி,  யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள்,  வைத்தியசாலைகள்,  மக்கள் மண்டபங்கள்,  பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம்,  தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள்,  பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன.

மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு,  கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.




ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154, 963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235, 145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு சந்தித்தது.

சுனாமி என்றால் ஜப்பான்தான் என்ற நிலை மாறி 2004ஆம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும்கூட,  இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.

சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம்.  அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பதினாலாகும். அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான்,  பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா,  கனடா,  சிலி,  கொலம்பியா,  குக் ஐலண்ட்ஸ்,  கோஸ்டரிகா,  தென் கொரியா,  வடகொரியா,  ஈக்வேடார்,  எல்சல்வடார்,  பிஜி,  பிரான்ஸ்,  குவாதமாலா,  இந்தோனேஷியா,  ஜப்பான்,  மெக்சிகோ,  நியூசிலாந்து,  நிகரகுவா,  பெரு,  பிலிப்பைன்ஸ்,  ரஷ்யா,  சமோவா,  சிங்கப்பூர்,  தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன்,  சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள்,  கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால்,  அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால்,  சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம்,  சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க்,  தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக்,  ஆபிரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அண்மைக்காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காணமுடிகின்றது. சிலர் இவற்றை இன்னும் விளக்கமே இன்றி காணப்படுகின்றனர். கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் செயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.