Wednesday 19 February 2014

சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது


ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் 'வேசி' எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன்.

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை

சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு  இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.

அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட 'வேசி - விபச்சாரி' எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.

எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.

செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

Thursday 13 February 2014

அதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை! முகநூல் சமாச்சாரம்!!

அதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை! முகநூல் சமாச்சாரம்!!

எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் வலைப்பூவில் இடம் பெற்ற பதிவுகளில் இருந்து இதனை என் பக்கத்தில் பதிவு செய்கின்றேன். வெனுஷா இமந்தியின் சாவு முடிந்த கதை இன்னும் வெனுஷா இமந்திகள் சாகாமல் இருக்க எமது அசிரியர்கள் அதிபர்கள் என்ன செய்யலாம்? இது சிந்தனைக்குரிய ஒரு விடயம். கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே. 

இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.


தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். 

கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் - மரண வாக்குமூலம்






 
 






"2014 -02-05

"அப்பாவுக்கு..

இப்படி ஒரு முடிவெடுத்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் குற்றமெதுவும் செய்யாமல் எனது அப்பாவை, அதிபர் முன் நிற்க வைக்க என்னால் முடியாது. தவறு என்று நான் செய்ததென்றால் 7 ஆம் ஆண்டில் ஃபோட்டோ எடுத்ததுதான். நான் செய்த அந்தத் தவறை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். ஃபோட்டோ ஒன்றை FB யில் இட்டவரையும், அந்த ஃபோட்டோவை எனக்கு டேக் செய்தவரையும் விட்டுவிட்டு ஏன் என்னை நோக்கியே விரலை நீட்டுகிறார்கள்? இன்று நான் என்னுடைய ஒன்றுமறியாத அப்பாவை பாடசாலைக்குக் கூட்டிச் சென்றிருந்தால் அதிபருடைய ஏச்சுப் பேச்சுக்களை எவ்வளவு கேட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்? என்னுடைய அப்பா அவ்வாறான ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக் கூடாது. எவ்வளவு பிரச்சினைகளை அப்பா தலையில் வைத்திருக்கிறீர்கள் என இந்த வீட்டில் யாருக்குமே புரிவதில்லை. அதற்கிடையில் எங்கேயோ போகும் ஒன்றுக்காக எனது அப்பாவை அவமானப்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. இதற்கெல்லாம் காரணம் எமது அதிபர். அவர் எதுவுமே தெரியாமல் என்னை நோக்கி மாத்திரம் விரலை நீட்டுவது ஏன் என எனக்குத் தெரியவில்லை. 5000 பிள்ளைகள் முன்பு, கூட்டத்தில் வைத்து மேடைக்கு அழைத்துத் திட்டினார். ஒரு பையனோடு படம் பார்க்கப் போனாய் எனச் சத்தமிட்டார். நான் போகவில்லை என்பதை எனது தங்கையும், அக்காவும் அறிவார்கள். இவ்வளவு அநீதங்களெல்லாம் நடந்த போதும் கூட நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். இனிமேலும் என்னால் இயலாது.

எனது வகுப்பாசிரியர் பண்டார, வகுப்பைப் பொறுப்பேற்கும் அன்று எனது எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு ஆசிரியருக்கு உதவினேன். அப்படியெல்லாம் செய்த என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இந்தப் பாடசாலைக்காக பாடுபடுவதுதான் எனது மிகப் பெரும் தவறு. பாடசாலையில் ஏதேனும் போட்டிகள், விழாக்களின் போது நான் நடனமாடாமல் இருந்தால்தான் ஆச்சரியமாக இருக்கும். ஜயசுந்தர ஆசிரியை, ரஞ்சனி ஆசிரியை ஆகியோருக்கு இது தெரியும். எனது அப்பாவுக்கும், பண்டார ஆசிரியருக்கும் இனியும் கவலைகள் தர என்னால் முடியாது. நான் இன்று செய்யப் போகும் காரியத்தால் ஏனைய பிள்ளைகளுக்கு இம் மாதிரியான கீழ்த்தரமான வேலைகள் நடக்காமலிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.

சில ஆசிரியர்கள் பிரச்சினையொன்று வரும்போது எனது குடும்பத்தை இழுக்கிறார்கள். நான் இங்கு சொல்வது யார் குறித்து என்பது என் அப்பாவுக்குத் தெரியும். நான் இன்னும் உயிருடன் இருந்து, இந்தப் பாடசாலையில் 'வேசி' எனப் பேச்சுக் கேட்டுக் கேட்டு O/L பரீட்சையைக் கூட என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அப்பாவிப் பிள்ளைகள் சிறியதொரு தவறைச் செய்தால் அப் பிள்ளைகளை 'வேசி' எனக் கூப்பிடுவதை நிறுத்துங்கள். பிள்ளைகள் பற்றி முறைப்பாடுகள் வரும்போது யார் சரி, யார் தவறு என்பதைத் தேடிப் பாருங்கள். எல்லா அவப் பெயர்களையும் எனக்கும், என் தங்கைக்குமே கூறுகிறார்கள். எனது பாடசாலையில் 50%மானவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் அதிபருக்குத் தெரியாது. நாங்கள் சொல்வதும் இல்லை. அதனால்தான் எம்மையே குற்றம் சாட்டுகிறார்கள்.

நான் எனது அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். எவருடைய முன்பும் நின்று 'எனது மகள் செய்த தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என அவர் மன்றாடுவதை நான் விரும்பவில்லை. என்னை பாடசாலையிலிருந்து விலக்கிவிடும்படி அதிபர் கூறவிருக்கிறார். நாங்கள் நல்லதை மாத்திரமே செய்தபோதும், போட்டிகளிலெல்லாம் வென்றபோதும் எமக்கு நற்பெயரெதுவும் சூடவில்லை. ஆனால் தவறொன்று செய்தவிடத்து முழுப் பாடசாலைக்கும் கேட்கும் வண்ணம் சத்தமிடத்தான் அவருக்குத் தெரியும். பாடசாலைக்கே நான் ஒரு இழுக்கு என அவர் கூறுகிறார். இவ்வாறெல்லாம் ஏச்சுக் கேட்டுக் கேட்டு என்னால் பாடசாலைக்குப் போக முடியாது. கமகே ஆசிரியரும் கூட நான் நடத்தை கெட்ட பிள்ளை எனக் கூறினார். நான் அப்பொழுதெல்லாம் கூட எனது O/L பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் எனது நல்ல நடத்தையை அவர்களுக்குக் காட்டத் தீர்மானித்துக் காத்திருந்தேன். எனினும் இப்பொழுது அதிகம் தாமதமாகி விட்டது. இனி செய்ய ஏதுமில்லை.

பண்டார ஆசிரியர், நடன ஆசிரியைகள் இருவர், பிரபா ஆசிரியை ஆகியோர் மாத்திரமே இந்தப் பாடசாலையில் எனது திறமைகளைப் பற்றிக் கூறிப் பாராட்டியவர்கள். பிரபா ஆசிரியையிடம் சென்று எனது பிரச்சினைகளைக் கூறி ஆறுதல் தேடியபோது, நான் நன்றாக பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால் என் கனவுகள் எல்லாம் அழிந்து போயின. என்னால் இப்பொழுது O/L பரீட்சை தவிர்த்து அடுத்த ஜென்மத்தில் எந்த இடம் கிடைக்குமெனக் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.


அப்பா, நீங்கள் என்னுடைய பேரில் இருக்கும் காணியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நானில்லாமல் போனால் உங்களைக் கவனித்துக் கொள்ள ஆளிருந்தால் அது ஆச்சரியம்தான். உங்களிடம் பணம் இருப்பதால்தான் உங்களுடன் இருப்பவர்களெல்லாம் கூட இருக்கிறார்கள். பணம் இல்லாமல் போன நாளில் உங்களுடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு நடக்க இடமளிக்கக் கூடாது. இறுதியான, இறுதியான இந்தக் கணத்திலும் கூட எனக்குத் தென்படுவதெல்லாம் எனது அப்பாவின் கண்களிரண்டும் மாத்திரமே. எனக்கு உங்களை விட்டுப் போவது மிகுந்த கவலையைத் தருகிறது. முடியுமென்றால் தங்கையையும் அந்தப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுங்கள். அந்த அதிபர் இருக்கும்வரை தங்கைக்கும் பாரபட்சம் காட்டுவார்.

அம்மா, நான் உங்களையும் மிகவும் நேசிக்கிறேன். அம்மா என்னுடன் இன்று இன்னும் கதைக்காததற்குப் பரவாயில்லை. சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அக்காவைத்தான் இந்த இறுதி நேரத்திலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்களும் இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருங்கள். என்னுடைய அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள். தங்கையே அவர் பாரிய நெருப்புக்கிடையே வெந்துகொண்டிருக்கிறார்.

நானில்லாமல் போனால் உங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் கூறுவீர்கள் அப்பா? எழுத எழுத எனக்கு எனது இதயத்தில் கவலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்த ஜென்மத்திலும் கூட ஆறுதல் கிடைக்காமல் போகும்.
என்னைப் போல தவறிழைக்காத பிள்ளைகள் இன்னும் இருப்பார்கள். அவர்களையும் பாடசாலையிலிருந்து விலக்கி விடப் பார்ப்பார்கள். அவர்களுக்காகவே நான் இத் தீர்மானத்தை எடுத்தேன்.

I love my family

நான் எனது குடும்பத்தை நேசிக்கிறேன்.

இங்கு என்னைப் பார்த்தவுடன், பண்டார ஆசிரியருக்கு முதலில் தெரிவியுங்கள்."

தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் 'அதிபர்' என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.

# உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.
# எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.
# 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.
# பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.

சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.
"எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது"


இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்? அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டும் என்பதுவும், சிறுமியின் மேற்படி கடிதத்தை அவளது மரண வாக்குமூலமாகக் கொண்டு, தற்கொலைக்குத் தூண்டியதற்காக அதிபரைக் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுமே பொதுமக்களின் தீர்ப்பாக இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே இலங்கையில் ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு இம் மரணம் ஒரு ஆதாயமாக அமைந்துவிட்டது. எனவே அரச தரப்பு அமைச்சர்கள் சிலரும், இலங்கைக் காவல்துறையும் அதிபரின் சார்பாக இருப்பதனால் அதிபர் இன்றுவரை விசாரணைகளுக்குக் கூட ஆளாகாமல் தனது பதவியில் தொடர்ந்தும் இயங்கி வருகிறார். அரசை எதிர்க்கப் பயந்து சிறுவர் அமைப்புக்களும், பெண்ணிய ஆதரவாளர்களும் கூட மௌனமாக இருப்பதனால் பொதுமக்கள் கொந்தளித்து அதிபருக்கு ஏதும் தீங்கிழைத்து விடக் கூடாதென்று, காவல்துறையினர் அதிபருக்கு தினமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் இன்னும் சொற்ப நாட்களில் பொருட்களின் விலையேற்றத் தகவல்களினாலும், மாகாண சபைத் தேர்தல் செய்திகளாலும் மறக்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஆனால் பேரிழப்பென்பது, பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெற்றோருக்கும், சகோதரிகளுக்கும் மாத்திரமே.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
Photos - Gossiplankanews

Monday 3 February 2014

உலகப் புற்று நோய் தினம் (World Cancer Day)

உலகப் புற்று நோய் தினம் (World Cancer Day)

செல்வந்த  நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. 2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர். 3 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

சர்வதேச ரீதியில் உலக புற்று நோய்  தினம்  ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 2014ம் ஆண்டுக்கான இத்தினத்தின் தொனிப்பொருள், 'மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்' என்பதாகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.

நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் எதிர்பார்ப்பாகும். இத்தினத்தை உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு (Union for International Cancer Control, UIIC)  முன்னின்று  நடத்துகிறது. இந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது.


புற்றுநோய் என்பது (Cancer) கட்டுப்பாடற்று  கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி ஏனெய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும், எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை சுருக்கமாக நோக்குவோமாயின் கலங்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகைப்பழக்கம், சில  உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று, சில வேளைகளில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்று நோய் தொடர்பான அறிகுறிகளில் சில
* உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம்.
* உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள்:
* ஆறாத புண்கள்.
* தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல்.
* மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம்.
* தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல்.
* உடல் எடையில் மாற்றம்.
* இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு.
நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்

புற்றுநோய் தவிர்க்கப்பட முடியாத போதிலும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும். ஆகையினால், புற்றுநோய்க்கு ஆளான ஒருவர் இனிமேல் தன்னால் எதுவுமே செய்ய இயலாது என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.

சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவேயுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன்படி வருடாந்தம் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 25 ஆயிரம் பேர் புதிதாக தம்மை பதிவு செய்து கொள்வதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்தது. இவர்களுள் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழந்ததாகவும் பணியகத்தின் வைத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் இறுதிக் கட்டத்தில் சிகிச்சைக்காக வைத்தியர்களை  நாடி வருவதே வைத்தியசாலைகளிலிருந்து தமக்கு கிடைக்கும் பொதுவான முறைப்பாடு எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதனால் எம்மால் நோயாளிகளை முன்னரை விடவும் அதிகமாகவே குணப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமயிர் கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையேயாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆகையினால் சமூகத்திற்கு வெட்கப்பட அல்லது அஞ்சியோ சிகிச்சைகள் ஆரம்பிப்பதனை காலம் தாழ்த்தவோ அல்லது தவிர்ப்பதோ பிழையான கொள்கையெனவும் புற்றுநோய் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் தமது பிரதேச செயலகத்திலுள்ள மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்தில் இலவசமாக முன்னெடுக்கப்படும் முழுமையான உடல் மருத்துவ பரிசோதனைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டுமெனவும் வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை தவிர்த்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தனர்.

பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோயும், இரண்டாவதாக கர்ப்பப்பை புற்றுநோயுமே பாரிய அச்சுறுத்தலாகவுள்ளன. புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஷிரந்திக்கா வித்தான கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் வருடந்தோறும் 2 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவதாக கூறினார்.

மார்பக புற்றுநோய்க்கு உள்ளாவோரில் 470 பேர் வருடந்தோறும் உயிரிழப்பதாகவும் சுமார் 12 ஆயிரம் பெண்கள் முறையான சிகிச்சைகளுடன் தொடர்ந்தும் உயிர் வாழ்வதாகவும் அவர் கூறினார்.
2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயினால் உயிரிழக்கலாமெனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வருடந்தோறும் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேர் புதிதாக இனங்காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்காலத்தில்  நோயின் உண்மையான பரிமாணத்தை அறியவும், அது  பரவியுள்ள இடங்களை அறியவும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோகிராம், சிடி ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன. புற்று நோய் ஒரு உறுப்பை பாதித்துவிட்டால், அந்த உறுப்பை அகற்றாமல், நோயைக் குணப்படுத்துவதே நவீன மருத்துவத்தின் இலக்காகும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இது தொடர்பில் மக்களும் கவனம் செலுத்தி தமக்கு ஏற்படும் நோய்களின் போது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாது உடனடியாகவே மருத்துவமனைகளை நாடவேண்டும்.

இன்றைய புற்றுநோய் தினத்தில் நாம் சில விடயங்களை நாம் கருத்திற்கொள்வோம்.

புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடை விடயம் என நினைக்கிறோம். ஆனால் அது சுகாதாரத்துடன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

புற்றுநோய் என்பது உலக பிரச்சினை. அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் அது தாக்குகிறது.

புற்றுநோய் என்பதை ஒரு மரண தண்டனையாக சிலர் என நினைக்கின்றார்கள். ஆனால் புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.

புற்றுநோயை சிலர் என் விதி என நினைக்கின்றார்கள். ஆனால் நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும் என்பது தான் உண்மை.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடுவோம். எமது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதை வாழ்நாள் பழக்கமாக கொள்வோம்..