Monday 10 October 2011

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் - புன்னியாமீன்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.

மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty)  என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பாகும்.

மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும். மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்தியக் கூட்டுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது. ஜுலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
.
2002, மே 13 இல் ரோம் நகரில் கூடிய இந்த அமைப்பின் மாநாட்டில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003, அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள்,  அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன.

தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல்,  கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல்,  தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல்,  நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.

கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

=உசாத்துணை=
* http://www.hrea.org/index.php?doc_id=889
*  http://www.penalreform.org/news/world-day-against-death-penalty-2009
*  http://theonlinecitizen.com/2009/10/world-day-against-death-penalty/
*  http://www.iheu.org/node/3513
*  http://www.worldcoalition.org/worldday.html

2 comments:

  1. சகோதரர் புன்யாமீன் அவர்களுக்கு!
    மேற்படி கட்டுரையை வெறுமனே ஒரு தகவலுக்காக நீங்கள் எழுதி இருந்தால் தப்பில்லை. மாற்றமான அக்கொள்கையை தாங்களும் ஆதரிப்பவராக இருந்தால் இஸ்லாத்தின் பார்வையில் அது தப்பானது என அன்பாக ஞாபகமூட்டுகிறோம். எந்தளவு தப்பானது என்றால் ஈமானையே பாதித்திடும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும்... "ஜஸாக்கள்ளாஹ்"

    ReplyDelete
  2. சகோதரர் புன்யாமீன் அவர்களுக்கு!
    மேற்படி கட்டுரையை வெறுமனே ஒரு தகவலுக்காக நீங்கள் எழுதி இருந்தால் தப்பில்லை. மாற்றமான அக்கொள்கையை தாங்களும் ஆதரிப்பவராக இருந்தால் இஸ்லாத்தின் பார்வையில் அது தப்பானது என அன்பாக ஞாபகமூட்டுகிறோம். எந்தளவு தப்பானது என்றால் ஈமானையே பாதித்திடும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும்... "ஜஸாக்கள்ளாஹ்"

    ReplyDelete